திருமலை நாயக்கர் அரண்மனை

ஆள்கூறுகள்: 9°54′53″N 78°07′27″E / 9.9148°N 78.1243°E / 9.9148; 78.1243
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமலை நாயக்கர் மகால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருமலை நாயக்கர் அரண்மனை
திருமலை நாயக்கர் அரண்மையின் நுழைவாயிலின் உட்தோற்றம்
திருமலை நாயக்கர் அரண்மனை is located in இந்தியா
திருமலை நாயக்கர் அரண்மனை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
பொதுவான தகவல்கள்
நகரம்மதுரை
நாடுஇந்தியா
ஆள்கூற்று9°54′53″N 78°07′27″E / 9.9148°N 78.1243°E / 9.9148; 78.1243
கட்டுமான ஆரம்பம்1620
மதிப்பிடப்பட்ட நிறைவு1636
கட்டுவித்தவர்திருமலை நாயக்கர், மதுரை
உரிமையாளர்தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைஇந்தோ சரசனிக் பாணி
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இத்தாலியப் பொறியாளர்
பொறியாளர்இத்தாலியப் பொறியாளர்

திருமலை நாயக்கர் அரண்மனை (Thirumalai Nayak Palace) அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் பொ.ஊ. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டிட கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே, தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. பிரித்தானிய இந்தியாவின் சென்னை ஆளுநர், பிரான்சிஸ் நேப்பியர் பொ.ஊ. 1872-இல் இவ்வரண்மனையைப் புதுப்பித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில், இந்த அரண்மனையும் ஒன்றாகும்.[1] இவ்வரண்மனையின் நீட்சியாக, பத்துத் தூண் பகுதி இருந்தது.

அமைப்பு[தொகு]

இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.[2] அக்காலத்தில், இந்த அரண்மனை, இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும், மற்றது அரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. 'சொர்க்க விலாசம்' மன்னரின் வசிப்பிடமாகவும், 'அரங்க விலாசம்' அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.

இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

ஒலி-ஒளி காட்சி[தொகு]

இந்த மகால், 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 1981 ஆம் ஆண்டு முதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு, இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி காட்சி, நாள்தோறும் மாலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின், இரவு 8 மணிக்கு, தமிழிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் 2008-09 ஆண்டில் சுமார் 36 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டப்பட்டது.[3]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]