திருப்பூர் புத்தகக் கண்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் புத்தகக் கண்காட்சி என்பது திருப்பூர் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் புத்தகக் கண்காட்சியாகும். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பின்னல் புத்தக அறக்கட்டளை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து இக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். இயந்திர வாழ்க்கையிலிருந்து இதயங்களை மீட்போம் என்ற நோக்கத்துடன், இலாப நோக்கமின்றி நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, தொழில் நகரமான திருப்பூரில் வாசிப்புப் பழக்கத்தை பரவலாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 10ஆவது ஆண்டில் "திருப்பூர் புத்தகத் திருவிழா 2013" என்ற பெயரில் கண்காட்சி நடந்தது. டைமண்ட் திரையரங்கம் எதிரேயுள்ள கே.ஆர்.சி சிட்டி செண்டர் மைதானத்தில் நடந்தது. 120 அரங்கங்கள் அமைக்கப்பட்டன. முக்கிய பதிப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாணவர் திறனாய்வுப் போட்டிகள்: புத்தகக் கண்காட்சியை ஒட்டி நடக்கும் மாணவர்கள் திறனாய்வுப் போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பார்கள். மாணவர் மத்தியில் மிகப் பிரபலமான இந்தப் போட்டிகளில் ஏராளமான குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும் பங்கேற்பது வழக்கம். ஓவியம், கவிதல், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

குறும்பட விழா: திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் சிறப்பான உலகத் திரைப்படங்கள், தமிழக குறும்படங்கள் திரையிடும் நிகழ்வு சிறப்பு வாய்ந்தது. 2013 ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சி சிறப்பு குறும்படப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வெற்றிபெருபவர்களுக்கு பணப் பரிசும், சிறப்பு மரியாதையும் அளிக்கப்படும்.

புகைப்படக் கண்காட்சி: 2011 ஆம் ஆண்டு சூடாகும் பூமி என்ற தலைப்பிலும், 2012 ஆம் ஆண்டு கானகம் காப்போம் என்ற தலைப்பிலும் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி, மக்களிடையே சூழலியல் சாந்த விழிப்புணர்வை பரப்புவதாக அமைந்தன. ஒவ்வோராண்டும் புகைப்படக் கண்காட்சி எதிர்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.

உடுமலை புத்தகக் கண்காட்சி: திருப்பூர் மாவட்டம் முழுவதும் புத்தக வாசிப்பை பரவலாக்கும் முயற்சியில் பின்னல் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல், உடுமலை புத்தகக் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. மாநகரப் பகுதியில், சிறு சிறு கண்காட்சிகளையும் இவர்கள் நடத்தி வருகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]