திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்புலிவனநாதர் கோயில் அல்லது திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.[1]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் சாலையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்புலிவனம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[2]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக திருப்புலிவனநாதர் உள்ளார். மூலவர் சுயம்பு ஆக உள்ளார். ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது காணப்படுகிறது. லிங்கத்தின் மீது புலியின் பாதங்கள் காணப்படுகின்றன. லிங்கத்தின் மேல் பாகத்தில் ஜடாமுடி காணப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றிலும், திருநெல்வேலி மாவட்டம் சிவசைலத்திலும் இவ்வாறாக ஜடாமுடியுடன் கூடிய லிங்கத்தைக் காணலாம். இங்குள்ள இறைவி அமிர்தகுஜலாம்பாள் ஆவார். மகாசிவராத்திரி, மார்கழி, திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[2]

அமைப்பு[தொகு]

கோயிலின் முகப்பில் விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. கருவறை தரைத்தளத்திலிருந்து 15 அடி உயரத்தில் காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்குப் பின் திருமால் நின்ற கோலத்தில் உள்ளார். அருகில் ஒரு தூணில் அருகே நரசிம்மர் நின்ற நிலையில் உள்ளார். கோயிலில் விஷ்ணு துர்க்கை, துர்க்கை, பைரவர், சண்டீசுவரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. பதஞ்சலி, வியாக்கிர பாதர், சனகாதி முனிவர்கள் ஆகியோர் தட்சிணாமூர்த்தி அருகில் உள்ளனர். பல்லவர் காலப்பணியாக கோயில் உள்ளது. உத்திராயணம், தட்சிணாயணம் ஆகிய இரு காலங்களிலும் சூரிய நிழல் லிங்கத்தின்மீது விழுவதைக் காணலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புலிக்கால் முனிவர் வணங்கிய திருப்புலிவனநாதர்!". இந்து தமிழ் திசை. 2023-07-06. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.
  2. 2.0 2.1 2.2 அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்