உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் is located in தமிழ்நாடு
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்
பாலைவனநாதர் கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°55′51″N 79°16′14″E / 10.930968°N 79.270436°E / 10.930968; 79.270436
பெயர்
புராண பெயர்(கள்):பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம்
பெயர்:திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பாலைத்துறை, பாபநாசம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்
தாயார்:தவளவெண்ணகையாள், தவளாம்பிகை, தவளாம்பாள்
தல விருட்சம்:பாலை (இப்போதில்லை)
தீர்த்தம்:வசிஷ்டதீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம்
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:தமிழ்வருடபிறப்பு, நவராத்திரி, திருவாதிரை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

பாலைவனநாதர் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாச வட்டத்திலுள்ள திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரை தலம் சிவன் கோயிலாகும். பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்திருத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 19-ஆவது சிவத்தலமாகும்.

தல வரலாறு

[தொகு]

முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து அவரை அழிக்க துஷ்டவேள்வி நடத்தி, யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினர். இறைவன் அப்புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டார். மகாவிஷ்ணு, பிரம்மன், வசிஷ்டர், தௌமியர், அர்ச்சுனர் ஆகியோர் வழிபட்டதலம்.

பாண்டவர்களின் வனவாச காலத்தில், தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அருச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகிறது.

அமைவிடம்

[தொகு]

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திற்கு முன்பாக திருப்பாலைத்துறையில் இத்தலம் உள்ளது.

அமைப்பு

[தொகு]

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி உள்ளன. ராஜகோபுரத்தின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் உள்ளனர். கோயிலின் வலப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. சன்னதியின் முன்புறம் விநாயகர் உள்ளார். எதிரே நந்தி உள்ளது. அடுத்துள்ள கோபுரத்தை அடுத்துள்ள திருச்சுற்றில் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த லிங்கம், ராமலிங்கம், மகாலட்சுமி, மலையத்துவன் பூசித்த லிங்கம், 63 நாயன்மார்கள் உள்ளனர். மண்டபத்தில் நடராஜர் சன்னதியும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகின்றன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இத்தலத்து இறைவன் பாலைவனநாதர், இறைவி தவளவெண்ணகையாள்.

பாடியோர்

[தொகு]

இத்தலத்தைப் பற்றி திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.

சப்தஸ்தானம்

[தொகு]

திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகியவையாகும்.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்வருடபிறப்பு முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி, மார்கழி மாதம் நவராத்திரி, திருவாதிரை ஆகியவை திருவிழாக்களாக நடைபெறுகின்றன.

நெற்களஞ்சியம்

[தொகு]
திருப்பாலைத்துறையிலுள்ள தஞ்சை நாயக்க மன்னர் கால நெற்களஞ்சியம்

திருப்பாலைத்துறையில் தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பெற்ற 12 ஆயிரம் கலம் நெல்லை சேமிக்கும் அளவு கொண்ட மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது[3]. வட்ட அமைப்பில் கூம்பு வடிவக்கூரையுடன் ஏறத்தாழ 60 அடி உயரத்துடன் செங்கற்களால் இக்களஞ்சியம் கட்டப்பெற்றுள்ளது.[4] கோயிலின் இடப்புறத்தில் இந்த நெற்களஞ்சியம் அமைந்துள்ளது. இந்த நெற்களஞ்சியம் தற்போது பயன்பாட்டில் இல்லை.

கோவிந்த தீட்சிதர்

[தொகு]

திருப்பாலைத்துறை கோயில் கோபுரம், திருப்பாலைத்துறை நெற்சேமிப்புக்கிடங்கு தீட்சிதரின் முயற்சியில் கட்டப்பட்டவையாகும்.[5]

தல சிறப்புகள்

[தொகு]

சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணத் திருக்கோலத்தில் விளங்குகின்றனர். வேதம், வேதங்களின் நடுவணதாகிய யஜுர் வேதம், யஜுர்வேதத்தின் நடுவின் பஞ்சாக்ஷரம் விளங்குவது போல, திருமுறைகளில் தேவாரத்துள் நடுவணதாகிய அப்பர் தேவாரத்துள், குறுந்தொகையில், நடுப்பதிகமாகிய 51-ஆவது பதிகம் இத்தலத்துப் பதிகமாகும். இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள "விண்ணினார் பணிந்து" என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாக்ஷரம் விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய (பதிகத்திற்கு) உரிய தலம் ஆகும். கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது.

பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கள் உள்ளன.

இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோருடைய காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கல்வெட்டுக்களில் இவ்வூர், "நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர்" என்றும்; இறைவன் "திருப்பாலைத்துறை மகாதேவர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. முதற் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கருங்கல் திருப்பணியாக ஆக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.

திருத்தலப் பாடல்கள்

[தொகு]

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயவென்
றெண்ணி னார்க்கிட மாவெழின் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே.
தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
தடரும் போதர னாயருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற்
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே..

படத்தொகுப்பு

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
  3. "A comprehensive list of Chola inscriptions, Archeological Survey of India". whatisindia.com. Retrieved 16 July 2011.
  4. மகாமகம் 2004 சிறப்பு மலர்
  5. பாலாஜி, கோவிந்த தீட்சிதர், கல்கி, 29.2.2014

வெளியிணைப்புகள்

[தொகு]