திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி கிராமத்தில் அமைந்த சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் என்றழைக்கப்பட்டது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக திருநோக்கிய அழகியநாதர் உள்ளார். இறைவி மருநோக்கும் பூங்குழலி ஆவார். கோயிலின் தல மரம் பாரிஜாதம் ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக லட்சுமி தீர்த்தம் உள்ளது. மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, சோம வாரம் உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.[1]

அமைப்பு[தொகு]

சிவன் கோயிலில் பெரும்பாலும் வில்வம் கொண்டு அருச்சனை செய்யப்படும். ஆனால் இக்கோயிலில் துளசியைக் கொண்டு அருச்சனை செய்கின்றனர். நடராஜர் ஒலி வடிவாக இசைக்கல் நடராஜராகக் காணப்படுகிறார். மரகதத்தால் ஆன லிங்கம் இக்கோயிலில் உள்ளது. பிரம்மா சிவனின் கோபத்தை அனலாகத் திரட்டி கடலுக்குள் செலுத்தினார். கடலுக்குள் புகுந்த அனல் குழந்தையாகப் பிறக்கவே அதற்கு ஜலந்தரன் என பெயரிட்டனர். ஜலந்தரன் முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தொந்தரவு கொடுத்தான். அவனை அழிப்பதற்கு அவனுடைய மனைவியான பிருந்தையின் பதிவிரதத்தை அழிக்கவேண்டும் என்று திருமால் அறிந்தார். அதனை அறிந்த அவள் தீயில் புகுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். ஜலந்திரனும் தன் வலிமையை இழந்து சிவனிடம் தோற்றான். சிவன் பூமியில் ஒரு வட்டத்தை வரைந்து ஜலந்திரனை எடுக்கக் கூறியபோது அது சக்கரமாகி அழித்தது. பிருந்தையின் சாம்பலில் திருமால் கலந்தார். வைகுண்டம் இருண்டது. அப்போது பார்வதி, லட்சுமியிடம் திருப்பாச்சேத்தி இறைவனை வழிபட்டால் அவளுடைய கணவனை அடையலாம் என்று கூறவே திருமகளும் அவ்வாறே செய்தார். சிவன் சில விதைகளை கொடுத்து பிருந்தையில் சாம்பலில் தூவச் சொ அதிலிருந்து துளசி தோன்றவே, திருமால் சிவனை அருச்சித்துவிட்டு மீதியை மாலையாக்கி அணிந்தார். அதனால் சோம வாரத்தில் இறைவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]