திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் மங்கைமடம் அருகே திருநாங்கூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக மதங்கீசுவரர் உள்ளார். இறைவி மாதங்கீசுவரி ஆவார். கோயிலின் தல மரம் வன்னி ஆகும். கோயிலின் தீர்த்தம் மதங்க தீர்த்தமாகும். திருவெண்காட்டில் சிவன் மாதங்கி திருமணத்தின்போது சிவன் மாதங்கியிடம் எவ்வித சீரும் வாங்காததால், திருமணத்திற்கு வந்திருந்தோர் அதைப் பற்றி குறையாகக் கூறினர். மாதங்கியை தான் மணப்பதால் இருவரும் ஒருவரே என்று சிவன் கூறி நந்தியை சிவலோத்திற்கு அனுப்பி செல்வத்தை எடுத்துவரும்படிக் கூறி, இறைவியிடம் தந்தார். இதை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் இரு நந்திகள் முன்னும் பின்னுமாகக் காணப்படுகின்றன. மதங்க நந்தி இறைவனைப் பார்த்த நிலையிலும், சுவேத நந்தி மறு பக்கம் திரும்பியிருப்பதைக் காணலாம். பிரதோஷத்தின் போது இரு நந்திகளுக்கும் சிறப்பு பூசை செய்கின்றனர்.[1]

அமைப்பு[தொகு]

மூலவர் சன்னதியில் மேலுள்ள விமானம் ஏகதள அமைப்பைச் சார்ந்தது. இங்குள்ள விநாயகர் வலஞ்சுழி மாதங்க விநாயகர் எனப்படுகிறார். திருச்சுற்றில் ஆனந்த வடபத்ர காளியம்மன் எட்டு கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி ஊஞ்சலில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். மதங்க முனிவர் சன்னதியும் திருச்சுற்றில் உள்ளது. தேவகோஷ்டத்தில் பிரம்மா அமர்ந்த கோலத்தில் உள்ளார். இறைவி தனி சன்னதியில் உள்ளார்.[1]

திருவிழாக்கள்[தொகு]

வைகாசியில் திருக்கல்யாணம், கார்த்திகை, சிவராத்திரி, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]