திருத்தூதர் பணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருத்தூதர் பணிகள் (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின் மரியாவும் திருத்தூதர்களும் இறைவேண்டலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஓவியர்: தூச்சியோ டி போனின்செஞ்ஞா. ஆண்டு: 1308-1311. காப்பிடம்: சீயேனா, இத்தாலியா.

திருத்தூதர் பணிகள் அல்லது அப்போஸ்தலர் பணி (Acts of the Apostles) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஐந்தாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Práxeis tōn Apostólōn (Πράξεις των Αποστόλων) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Acta Apostolorum எனவும் உள்ளது [1]. இந்நூல் 28 அதிகாரங்களை உள்ளடக்கியது. வாழ்க்கை வரலாறு, புனைவு, அரும்செயல்கள் போன்றவை விரவியுள்ள இந்நூலில் தொடக்க காலத்தில் கிறித்தவம் பரவிய கதை உயிரோட்டத்தோடு எடுத்துரைக்கப்படுகிறது.

திருத்தூதர் பணிகள் நூலின் ஆசிரியர்[தொகு]

திருத்தூதர் பணிகள் என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே, மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாமே கண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். நாங்கள் பயணம் செய்தோம், நாங்கள் தங்கியிருந்தோம், நாங்கள் போதித்தோம்' போன்ற பகுதிகள் இந்நூலின் ஆசிரியர் தூய பவுலின் உடன்பணியாளர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இப்பகுதிகள் கீழ்வருமாறு:

  • திப 16:10-17;
  • திப 20:5-15;
  • திப 21:1-18;
  • திப 27:1-28:16.

திருத்தூதர் பணிகள் நூலின் ஆசிரியர் பற்றிய பிற குறிப்புகளை லூக்கா நற்செய்தி நூலின் முன்னுரையில் காண்க.

திருத்தூதர் பணிகள் நூல் எழுந்த சூழல்[தொகு]

இயேசு கிறித்துவோ அவர் வழியைப் பின்பற்றுபவர்களோ உரோமை அரசுக்கு எதிராகக் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என விளக்கம் அளிக்கவும், பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தேர்ந்துகொள்ளப்பட்ட புனித பவுல் யூதருக்கு எதிராகப் பெருந் தவறு ஒன்றும் செய்யவில்லை என்று எடுத்துரைக்கவும் இந்நூலை லூக்கா எழுதுகிறார்.

இச்சூழலில் நற்செய்திப் பணியும் இறைவார்த்தைப் போதனையும் சிறப்பிடம் பெறுகின்றன. தூய ஆவியார் [2] துணையுடன் கடவுளது மீட்புத் திட்டத்துக்குச் சான்று பகர்வது திருச்சபையின் கடமை என்பது தெளிவாகிறது. திருத்தூதர்கள் - குறிப்பாகப் பேதுருவும் [3] பவுலும் [4] - எவ்வாறு திருத்தொண்டாற்றினர் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. பவுல் உரோமையில் சான்று பகர்ந்து கொண்டிருப்பதே திருத்தூதர் பணிகள் நூலின் முடிவுரையாக அமைகின்றது.

இந்நூல் எழுதப்பட்ட காலம்[தொகு]

பெரும்பான்மை விவிலிய அறிஞர் கருத்துப்படி, இந்நூல் கி.பி. முதல் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கி.பி. 60-64 அளவில் இந்நூல் எழுந்தது என்று கூறுவர். இந்நூலில் எருசலேம் அழிந்த செய்தி (கி.பி. 70) இல்லை. அதுபோலவே தூய பவுலின் இறப்புப் பற்றிய குறிப்பும் இல்லை. பவுல் கி.பி. 67 அளவில் உரோமையில் இறந்தார் என்பது பெரும்பான்மை வரலாற்றாசிரியர் கருத்து.

இந்நூலின் அமைப்புமுறை[தொகு]

திருத்தூதர் பணிகள் நூலின் அமைப்புமுறையும் லூக்கா நற்செய்தி நூலின் அமைப்புமுறையும். ஒரே பாணியில் அமைந்துள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். லூக்கா நற்செய்தியில் 24 அதிகாரங்களும் திருத்தூதர் பணிகள் நூலில் 28 அதிகாரங்களும் உள்ளன. இரு நூல்களும் ஒரு குறிப்பிட்ட புவியியல் பின்னணியில் அமைந்துள்ளன. இதைச் சற்று விரிவாக நோக்கலாம்.

1) லூக்கா நற்செய்தி முதலில் பாரளாவிய பின்னணியிலிருந்து தொடங்குகிறது; பின், இயேசு கலிலேயாவில் பணியாற்றுவதைக் காட்டுகிறது; அதைத் தொடர்ந்து இயேசு சமாரியாவிலும் யூதேயாவிலும் பணிசெய்ததைக் குறிப்பிடுகிறது; இறுதியில், இயேசு எருசலேம் சென்று, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில்.உயிர்துறந்து, சாவினினின்று உயிர்பெற்றெழுந்து, விண்ணகம் சென்றதை விவரிக்கின்றது.

  • பாரளாவிய பின்னணி; சிரியா, சின்ன ஆசியா அரசியல் பின்புலம்: இயேசு பிறந்தபோது உரோமைப் பேரரசன் யார், சிரியாவை ஆண்டது யார் போன்ற விவரங்கள் (லூக்கா 2:1-2; 3:1-2).
  • இயேசுவின் கலிலேயாவில் நற்செய்தி அறிவித்து, புதுமைகள் நிகழ்த்திப் பணியாற்றுகிறார்: (லூக்கா அதிகாரங்கள் 4 முதல் 9 வரை).
  • இயேசு சமாரியா, யூதேயா வழி பகுதிகளில் பணியாற்றிக்கொண்டே எருசலேம் நோக்கிச் செல்கிறார்: இயேசு வழியில் போதனை வழங்குகிறார்; அரும்செயல்கள் புரிகிறார் (லூக்கா அதிகாரங்கள் 9 முதல் 19 வரை).
  • எருசலேமில் இயேசு: (லூக்கா அதிகாரங்கள் 19 முதல் 24 வரை).

2) திருத்தூதர் பணிகள் நூல் மேற்கூறிய பாணிக்கு நேர்மாறாக, இறுதிக் கட்டத்திலிருந்து தொடங்கி முதல் கட்டத்திற்குத் திரும்புகிறது. முதல் காட்சி எருசலேம். அங்கே திருத்தூதர்கள் கூடியிருக்கின்றனர். இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்செய்தியை எருசலேமில் அறிவிக்கின்றனர். இரண்டாம் கட்டமாக சமாரியாவுக்கும் யூதேயாவுக்கும் சென்று நற்செய்திப் பணி புரிகின்றனர். அதன் பிறகு, சிரியா, சின்ன ஆசியா, ஐரோப்பா வழியாக நற்செய்தி உரோமையை வந்தடைகிறது; பாரளாவிய செய்தியாக மாறுகிறது.

  • எருசலேமில் திருத்தூதர் ஆற்றிய பணி: (திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் 1 முதல் 5 வரை).
  • எருசலேமிலிருந்து கிளம்பி, சமாரியா, யூதேயா பகுதிகளில் திருத்தூதர்கள் பணியாற்றுதல்: (திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் 6 முதல் 9 வரை).
  • திருத்தூதர்கள் சிரியாவிலும் சின்ன ஆசியாவிலும் நற்செய்தி அறிவித்து, ஐரோப்பாவில் கால்வைக்கின்றனர். அன்றைய உலகின் மையமாகக் கருதப்பட்ட உரோமைக்கும் நற்செய்தி பரவுகிறது; உலகளாவிய செய்தியாக மாறுகிறது: (திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் 9 முதல் 28 வரை).

மேலே காட்டிய விதத்தில் லூக்கா நற்செய்தி நூலையும் திருத்தூதர் பணிகள் நூலையும் அவற்றின் அமைப்புமுறை அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்விரு நூல்களின் ஆசிரியர் எருசலேம் நகருக்கு எத்துணை முதன்மை அளிக்கிறார் என்பது புலப்படும். இயேசுவின் வாழ்வும் பணியும் (சாவு, உயிர்த்தெழுதல் உட்பட) எருசலேமில் உச்சக்கட்டத்தை எய்துகின்றன; அதுபோல, திருத்தூதர்களின் பணியும் எருசலேமை மையமாகக் கொண்டு, படிப்படியாக (கலிலேயா, சமாரியா, யூதேயா, சிரியா, சின்ன ஆசியா, ஐரோப்பா வழியாக) உலகின் மையத்திற்கே சென்று எல்லா மனிதருக்கும் அறிவிக்கப்படுகின்ற நற்செய்தியாக மாறுகிறது.

இத்தகைய கட்டமைப்பு திருத்தூதர் பணிகள் நூலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்படுகிறது. திப 1:8 இவ்வாறு கூறுகிறது:


இயேசு திருத்தூதர்களை நோக்கி, "தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் (அதிகாரங்கள் 1-5) யூதேயா, சமாரியா முழுவதிலும் (அதிகாரங்கள் 6-9) உலகின் கடையெல்லை வரைக்கும் (அதிகாரங்கள் 10-28) எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார்.

மேற்கூறிய கட்டமைப்புத் தவிர திருத்தூதர் பணிகள் நூலைத் திருத்தூதர் பேதுரு ஆற்றிய பணிகள் என்றும் திருத்தூதர் பவுல் ஆற்றிய பணிகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகவும் பிரித்துப் பார்க்கலாம்.

இந்நூலின் உள்ளடக்கம்[தொகு]

தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் (1:8) என்று உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கூறியிருந்தார். அக்கூற்றே திருத்தூதர் பணிகள் நூலுக்கு மையச் செய்தியாக அமைகின்றது.

யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இறைவார்த்தைப் பணி வளர்ந்து பெருக, எங்கும் கிறித்தவ சபைகளாகிய திருச்சபைகள் நிறுவப்படுகின்றன. எனவே இந்நூலைத் தூய ஆவியின் பணிகள் எனவும் அழைக்கலாம்.

இந்நூலில் பேதுரு, ஸ்தேவான், பவுல் ஆகியோரின்.அருளுரைகள் இயேசு கிறிஸ்து பற்றிய கிறித்தியல்[5] விளக்கங்களை அளிக்கின்றன.

பேதுரு, பவுல் ஆகியோரின் மனமாற்ற அனுபவங்களும், எருசலேம் சங்கமும் [6] உலகெங்கும் உருவாகும் பொதுவான திருச்சபைக்கு வித்திடுகின்றன.

கிறித்தவர்களைப் பற்றித் தொகுத்துக் கூறுமிடங்களில் நட்புறவு, அப்பம் பிடுதல், இறைவேண்டல், சான்றுபகர்தல், தொண்டாற்றுதல், அன்புப் பகிர்வு போன்றவற்றைச் சீடர்களின் தனித்தன்மைகளாக இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதோ அப்பகுதிகள்:

  • திபா 11:27-30;
  • திபா 2:42-47;
  • திபா 4:32-37.

நூலின் விரிவான உள்ளடக்கம்: பகுப்பாய்வு[தொகு]

  • தெயோபில் என்பவருக்கு நூல் அர்ப்பணம்; முன்னுரை (1:1-2)
  • இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குத் தோன்றியது (1:3)
  • உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்க இயேசு திருத்தூதர்களுக்குப் பணிக்கிறார் (1:4-8)
  • இயேசு விண்ணகம் சென்றது (1:9)
  • இயேசு மீண்டும் வருவார் என்னும் வாக்குறுதி (1:10-11)
  • யூதாசுக்குப் பதில் மத்தியா திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் (1:12-26)
    • திருத்தூதர்கள் மேல்மாடியில் கூடுதல் (1:13)
  • தூய ஆவி பெந்தக்கோஸ்து நாளில் இறங்கிவருதல் (2:1-47)
    • நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கைமுறை (2:42-47)
  • தூய பேதுரு கால் ஊனமுற்ற பிச்சைக்காரருக்கு நலமளிக்கிறார் (3:1-10)
  • தூய பேதுரு சாலமோன் மண்டபத்தில் அருளுரை ஆற்றுகிறார் (3:11-26)
  • தூய பேதுருவும் தூய யோவானும் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் சான்று பகர்தல் (4:1-22)
    • "பேதுருவும் யோவானும், 'இறந்தோர் உயிர்த்தெழுவர்' என்று அறிவித்தனர்" (4:2)
  • நம்பிக்கை கொண்ட மக்களின் இறைவேண்டல் (4:23-31)
  • நம்பிக்கை கொண்டோர் தம் உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு, பகிர்ந்து வாழ்தல் (4:32-37)
  • பகிர்ந்துகொள்ள மறுத்த இருவர்: அனனியா, சப்பிரா (5:1-11)
  • அடையாளங்களும் அருஞ்செயல்களும் நிகழ்கின்றன (5:12-16)
  • திருத்தூதர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் (5:17-42)
  • திருத்தொண்டர்கள் நியமிக்கப்படுகின்றனர் (6:1-7)
  • தூய ஸ்தேபான் தலைமைச் சங்கத்தின் முன் நிறுத்தப்படுகிறார் (6:8-7:60)
  • சவுல் என்னும் இளைஞன்: சவுல் பற்றிய முதல் விவிலியக் குறிப்பு (7:58)
  • சவுல் எருசலேம் திருச்சபையைத் துன்புறுத்துகிறார் (8:1-3)
  • பிலிப்பு நற்செய்தி அறிவிக்கிறார் (8:4-40)
    • மாயவித்தைகளால் மக்களை மலைப்புக்குள்ளாக்கிய சீமோன் (8:9-24)
    • எத்தியோப்பிய நிதியமைச்சர் பிலிப்பின் கைகளால் திருமுழுக்குப் பெறுகிறார் (8:26-39)
  • தமஸ்கு செல்லும் வழியில் சவுல் உயிர்த்த இயேசுவைச் சந்தித்து, மனமாற்றம் அடைந்து, அழைப்புப் பெறுகிறார் (9:1-31, 22:1-22, 26:9-24)
  • தபித்தா என்னும் பெண்ணுக்குத் தூய பேதுரு உயிரளிக்கிறார் (9:32-43)

  • நூற்றுவர் தலைவரான கொர்னேலியு மனம் மாறுகிறார்; திருமுழுக்குப் பெறுகிறார் (10:1-8, 24-48)
  • தூய பேதுரு கண்ட காட்சி (10:9-23, 11:1-18)
  • அந்தியோக்கியா நகரில் கிறித்தவ சமூகம் உருவாகிறது; திருச்சபை நிறுவப்படுகிறது (11:19-30)
    • அந்தியோக்கியாவில் இயேசுவின் சீடர்கள் முதல்முறையாகக் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெறுகிறார்கள் (11:26)
  • தூய யாக்கோபு கொல்லப்படுகிறார் (12:1-2)
  • பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் (12:3-19)
  • ஏரோது மன்னனின் (முதலாம் அகிரிப்பா) இறப்பு (ஆண்டு: கி.பி. 44) (12:20-25)
    • "இது மனிதக் குரல் அல்ல; கடவுளின் குரல்" (12:22)
  • தூய பவுலும் பர்னபாவும் நற்செய்தியைப் பரப்புதல்: பவுலின் முதல் தூதுரைப் பயணம் (13-14)
    • "பவுல் என்னும் சவுல் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்" (13:9)
    • "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" (14:11)
  • எருசலேம் சங்கம் (15:1-35)
  • பவுலும் பர்னபாவும் பிரிதல் (15:36-41)
  • பவுலின் இரண்டாம், மூன்றாம் தூதுரைப் பயணங்கள் (16-20)
    • "ஒருநாள் வரும்...கடவுள் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார்" (17:30-31)
  • பவுல் எருசலேமுக்குச் செல்கிறார்; யாக்கோபைச் சந்திக்கிறார் (21)
  • கைது செய்யப்பட்ட பவுல் மக்கள்முன்னும் தலைமைச் சங்கத்தின் முன்னும் தம் நிலையை விளக்குகிறார் (22-23)
  • ஆளுநர் பெலிக்சின் முன் பவுல் தம் நிலையை விளக்குகிறார் (24)
  • பவுல் சீசரின் விசாரணையை நாடுகிறார்; அகிரிப்பா பெர்னிக்கியிடம் கொண்டுவரப்படுகிறார் (25)
  • அகிரிப்பா முன் பவுல் தம் நிலையை விளக்குகிறார் (26)
  • பவுல் உரோமைக்குச் செல்கிறார் (27-28)
  • மால்தா தீவில் பவுல்; அவர் உரோமையை அடைந்து அங்கு நற்செய்தியை அறிவிக்கிறார் (28)
    • "பவுலுக்குத் தீங்கு எதுவும் ஏற்படாததைக் கண்டு...அவர் ஒரு தெய்வம் என்று சொல்லத் தொடங்கினார்கள்" (28:6}}

திருத்தூதர் பணிகள் நூலின் உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (இயேசுவின் விண்ணேற்றம்) 1:1-11 214
2. திருத்தூதர்கள் எருசலேமில் சான்று பகர்தல் 1:12 - 8:3 214 - 227
3. திருத்தூதர்கள் யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல் 8:4 - 12:25 227 - 237
4. திருத்தூதர்கள் உலகின் கடையெல்லைவரை சான்று பகர்தல் 13:1 - 28:31 237 - 268

ஆதாரங்கள்[தொகு]

  1. திருத்தூதர் பணிகள்
  2. தூய ஆவி
  3. புனித பேதுரு
  4. புனித பவுல்
  5. கிறித்தியல்
  6. எருசலேம் சங்கம்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தூதர்_பணிகள்&oldid=1479511" இலிருந்து மீள்விக்கப்பட்டது