திருச்செந்தூர் அகவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்செந்தூர் முருகனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடப்பட்ட நூல் திருச்செந்தூர் அகவல். [1] [2]. இதனைப் பாடியவர் சிற்றம்பல நாடிகள் என வழங்குகின்றனர். இதில் உள்ள சொல்லாட்சி, நடை, கருத்தோட்டம் முதலானவை 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் இதனைப் பாடினார் எனக் கொள்ள இடம் தரவில்லை. 16 ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ள வைக்கிறது. [3]

நூல்[தொகு]

இந்த நூல் 426 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது. 'முருகப் பெருமான் எனக்கு மெய்ஞ்ஞானம் புகட்டினார். உலகத்தீரே! நீங்களும் அவனை வழிபட்டுப் பெறுங்கள்' எனக் கூறுவதாக நூல் அமைந்துள்ளது. முதல் 24 அடிகள் அவனது திருவுருவ அழகைப் பாராட்டுகின்றன. மானுடச் சட்டை சாத்தி அருள் வழங்க வந்துள்ளான். [4] 32 அறம் செய்க [5] குண்டலி எழுப்பும் கொள்கை [6] மும்மலமுடைய சகலன் நீ, உன் மலம் நீக்கி அருள மானுட வடிவில் வந்தோம் என முருகன் கூறுதல், [7] - என்றெல்லாம் இந்த நூல் குறிப்பிட்டுச் செல்கிறது.

பாடல் பகுதி - எடுத்துக்காட்டு [8]

ஓங்கும் பரைக்குள் உள் ஒளி ஆகித்
தேங்கும் ஆனந்தச் செழுஞ்சுடர் கண்டேன்
உள்ளொளிக்கு உவமை ஒன்றும் காணேன்
விள்ளவும் தரமோ? மீ மிசை விளங்கித்
தெளி படும் சுடரைச் சிவம் என்று உணர்ந்து
கண்படு ஞானக் கண்ணினால் கண்டேன்
பார்த்திடும் என்னைப் பசை அற விழுங்க
ஆர்த்து அதில் வீழ்ந்து ஆனந்தம் ஆனேன்
தன்னைத் தந்தான் என்னைக் கவர்ந்தான்
பின்னைப் பெறும் ஓர் பேற்றையும் காணேன்

சாத்திரமும், தோத்திரமும்

பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்குப் பின்னர் வைராக்கிய சதகம், கலைஞான தீபம் முதலான நூல்கள் தோன்றிச் சாத்திரமும் தோத்திமும் கலந்த நூல்களாக விளங்கின. அவற்றிற்குப் பின்னர் இந்த நூலே சாத்திரமும் தோத்திரமும் கலந்து விளங்கும் நூல்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 144. 
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 266. 
  3. 17, 18 ஆம் நூற்றாண்டு நூலாக வைத்தலும் பொருத்தமானதே
  4. பாடலடி 83
  5. பாடலடி 128
  6. பாடலடி 176
  7. பாடலடி 303
  8. பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்செந்தூர்_அகவல்&oldid=1436175" இலிருந்து மீள்விக்கப்பட்டது