திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006

ஆள்கூறுகள்: 8°33′58″N 81°13′59″E / 8.566°N 81.233°E / 8.566; 81.233
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2006 திருகோணமலை படுகொலைகள்
இடம்திருக்கோணமலை, இலங்கை
நாள்2 சனவரி 2006
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழ் மாணவர்கள்
தாக்குதல்
வகை
ஆயுதங்களால் படுகொலை
ஆயுதம்தானியங்கித் துப்பாக்கிகள்
இறப்பு(கள்)5
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
சிறப்பு அதிரடிப் படை

திருகோணமலை மாணவர் படுகொலை என்பது 2006 சனவரி 2 ஆம் நாள் இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.[1]

நிகழ்வு[தொகு]

படுகொலைகள் 2006 சனவரி 2 திங்கட்கிழமை இடம்பெற்றன. இம்மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஆவர். இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலித் தீவிரவாதிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினர்.[1][2]

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:

  • மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)
  • யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)
  • லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)
  • தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)
  • சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)

தாக்கங்கள்[தொகு]

இலங்கை அரசு[தொகு]

இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பிணை ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.[2] நீதிமன்ற விசாரணைகள் இதுவரை முடியாத போதும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு இம்மாணவர்களின் படுகொலைகளுக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரே முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.[2]

தொடர்புள்ள நிகழ்வுகள்[தொகு]

இறந்த மாணவர் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் தமது சாட்சியத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவருக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டது.[3]

எல்லைகளற்ற செய்தியாளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4]

விசாரணை[தொகு]

இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் நடைபெற்று வந்தது. இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.[1][2] இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 சூலை 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை ஆகத்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.[5][6] கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திருகோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.[7] 2019 சூலை 3 அன்று திருகோணமலை பிரதான நீதவான் முகம்மது அம்சா குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்து, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் உட்பட 13 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.[8][9]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Is the State complacent?". The Nation. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2007-01-30.
  2. 2.0 2.1 2.2 2.3 "Unfinished Business of the Five Students and ACF Cases– A Time to call the Bluff". Archived from the original on 2016-03-28. பார்க்கப்பட்ட நாள் 2013-07-05.
  3. "'Murder of five Tamil youths highlights need to end impunity' – Govt must protect witnesses to Trinco killings – HRW". Human Rights Watch. Archived from the original on 2009-01-08. பார்க்கப்பட்ட நாள் 2007-01-30.
  4. "Tamil journalist gunned down in Trincomalee after covering paramilitary abuses". எல்லைகளற்ற செய்தியாளர்கள். Archived from the original on 2007-02-28. பார்க்கப்பட்ட நாள் 2007-01-31.
  5. 12 policemen arrested over Trinco students killing, டெய்லி மிரர், சூலை 5, 2013
  6. Trinco students murder: STF officers further remanded, டெய்லிமிரர், சூலை 18, 2013
  7. Trinco students’ killing: STF personnel granted bailed, டெய்லி மிரர், அக்டோபர் 14, 2013
  8. "திருகோணமலை மாணவர் படுகொலை- குற்றம்சாட்டப்பட்ட அனைத்து படையினரும் விடுதலை". வீரகேசரி. 3 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2019.
  9. "Gruesome killing of five Tamil students in Trinco 13 years ago". டெய்லி மிரர். 6-07-2019. பார்க்கப்பட்ட நாள் 6-07-2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]