உள்ளடக்கத்துக்குச் செல்

திகோனா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திக்கோனா
Tikona
மாவல்
திக்கோனா கோட்டை
திக்கோனா Tikona is located in மகாராட்டிரம்
திக்கோனா Tikona
திக்கோனா
Tikona
ஆள்கூறுகள் 18°37′54″N 73°30′46″E / 18.6317°N 73.5128°E / 18.6317; 73.5128
வகை கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் இந்திய அரசு
மக்கள்
அனுமதி
அனுமதி உண்டு
நிலைமை அழிந்த நிலை
இட வரலாறு
கட்டிடப்
பொருள்
கல் மற்றும் செங்கல்
உயரம் 3580 அடிகள்

வித்தன்காட் என்றும் அழைக்கப்படும் திகோனா(Tikona), என்பது மகாராட்டிராவின் புனே மாவட்டத்திலுள்ள மாவல் எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கோட்டை ஆகும். இது புனேவிலிருந்து 60 கி.மீ. தொலைவிலுள்ள கம்சேத் அருகே அமைந்துள்ளது. கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் திகோனா-பெத் என்று அழைக்கப்படுகிறது. 3500 அடி உயரமுள்ள மலையானது பிரமிடு வடிவத்தில் உள்ளது. திகோனா என்ற பெயருக்கு "முக்கோணம்" என்று பொருள்.

கோட்டைக்குள் பெரிய கதவுகள், திரியம்பகேசுவர மகாதேவர் கோயில், ஏழு குளங்கள் மற்றும் சில குகைகளும் உள்ளது. பவனா அணை, துங் கோட்டை, லோகாகாட் மற்றும் விசாபூர் கோட்டை[1] ஆகியவைகளும் இதன் அருகே உள்ளது.

வரலாறு

[தொகு]
கோட்டைக்குச் செல்லும் படிகள்.

இந்தக் கோட்டையின் தோற்றம் குறித்து அதிகம் அறியப்படவில்லை. கிபி ஏழாம்-எட்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஒரு புத்த விகாரம் இந்தக் கோட்டையில் உள்ளது.[2] 1585 ஆம் ஆண்டில் நிசாம் சாகி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் மாலிக் அகமது நிசாம் சா கோட்டையைக் கைப்பற்றி அதை தனது பகுதிகளுடன் இணைத்தார். 1657 ஆம் ஆண்டில், சத்ரபதி சிவாஜி, நிசாமின் கட்டுப்பாடிலிருந்த கொங்கண் பகுதிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். அவர் கர்னாலா, லோகாகாட், மகூலி, சோன்காட், தாலாகாட் மற்றும் விசாபூர் ஆகிய கோட்டைகளுடன் திகோனாவையும் கைப்பற்றினார்.[3] இந்த கோட்டை அப்பகுதியில் ஒரு முக்கிய இடமாக இருந்தது. பவனா, மாவல் பகுதி முழுவதற்கும் கட்டுப்பாட்டு மையமாக இருந்தது. 1660 ஆம் ஆண்டில், மாவல் பிராந்தியத்தைச் சேர்ந்த தேஷ்முக் குடும்பத்தினர் திகோனா கோட்டையின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றனர். கோட்டை நீண்ட காலமாக தமலே தேஷ்முக் குடும்பத்தின் கீழ் இருந்தது. முகலாயப் பேரரசின் முக்கியப் படைத்தலைவர்களில் ஒருவரான முதலாம் ஜெய் சிங் 1665இல் இப்பகுதியின் மீது படையெடுத்து உள்ளூர் கிராமங்களைத் தாக்கினார். 1665 ஜூன் 12 அன்று கையெழுத்திடப்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி, முகலாயத் தளபதி குபாத் கானிடம் திகோனா கோட்டை ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது மராட்டியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.[4] 1682இல் சம்பாஜி ஔரங்கசீப்பின் மகன் அக்பரை சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அக்பருக்கு திகோனா கோட்டையில் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், காலநிலை அவருக்கு பொருந்தாததால் அவர் ஜெய்தாப்பூருக்கு மாற்றப்பட்டார். 1818இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு மராட்டிய இராணுவத்தின் வசம் இக்கோட்டை இருந்தது.

அணுகல்

[தொகு]

புனேவில் இருந்து 51 கி.மீ. தொலைவில் கம்சேத் என்ற ஊரை அடைந்து அங்கிருந்து கோட்டை அமைந்துள்ள திகோனா-பெத் பகுதிக்குச் செல்லலாம். கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகிலோ அல்லது கோட்டையின் உச்சியில் உள்ள குகைகளிலோ இரவு தங்கலாம். திகோனா-பெத்திலுள்ள உள்ளூர் கோட்டை மறுசீரமைப்புக் குழுவைச் சேர்ந்த கிராமவாசிகள் இரவு தங்குவதற்கும் உணவு ஏற்பாடுகளுக்கும் நியாயமான விலையில் செய்து தருகின்றனர். கம்சேத்திலிருந்து வரும் வழியில் இருக்கும் பெத்சே குகைகளையும் பார்வையிடலாம்.

புகைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Visit this pyramid-shaped hill fort near Pune:https://www.hindustantimes.com/pune-news/visit-this-pyramid-shaped-hill-fort-near-pune-which-is-a-trekking-destination/story-vx5P42s4TykRRZjNtqmbTL.html
  2. "Indian Archaeology 1969-70 - A review" (PDF). p. 25. Archived from the original (PDF) on 10 April 2009. Retrieved 24 July 2011.
  3. http://trekshitiz.com/ trekshitiz/Ei/Tikona-Trek-Pune-District.html
  4. "Tikona". Retrieved 24 July 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திகோனா_கோட்டை&oldid=4252601" இலிருந்து மீள்விக்கப்பட்டது