தாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாயம் ஆடப்படுகிறது
தாயம் ஆடப்படுகிறது

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இருவர் முதல் நால்வர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.

வரலாறு[தொகு]

தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது. இருப்பினும் இந்தியா வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு போன்றவை தமிழ் குறிப்பெயர்களாகும்.

  • மாபாரதத்தில் பாண்டவ மன்னர்கள் நாட்டையும், பாஞ்சலியையும் பணையமாக்கிய சகுனியின் வஞ்சக விளையாட்டாகவும்,
  • நளவெண்பாவில் நளன் கலியின் மூலம் புட்கரனால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
  • மேலும் அண்மைய ஆராய்ச்சிகளின் மூலம் மெக்ஸிகோவில் வாழ்ந்த மாயன்கள் இவ்விளையாட்டை விளையாண்ட குகைச்சித்திரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

தாய விளையாட்டு வகைகள்[தொகு]

ஐந்துக்கு ஐந்து கட்டங்களில்[தொகு]

நாம் இந்த விளையாட்டை மாரி காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடுவார்கள். ஐந்துக்கு ஐந்து சதுரங்களால் அமைந்த ஒரு கோட்டுத் தளத்தில் நான்கு பக்கமும் நாலு பேர் அமர்ந்து விளையாடலாம். எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாகவோ தனியாகவோ விளையாடலாம். கூட்டுச் சேர்ந்து விளையாடுவதைக் கன்னை கட்டுதல் என்றும் சொல்லப்படும்.

ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். இவற்றைத் தளத்தின் சதுரங்களினூடே பயணித்து மையத்திலிருக்கும் பழத்தை அடைந்து மீண்டு வருதலே விளயாட்டாகும். முதலில் நான்கு காய்களையும் மீண்டு கொண்டு வருபவர் வெற்றி பெறுவார்.

விளையாட்டுக் கருவி[தொகு]

சோகிகள்[தொகு]

நான்கு சோகிகளை ஒன்றாக எறிந்து பேறுகள் எடுக்கலாம்.

  • 1 சோகி திறந்து 3 சோகிகள் மூடி இருந்தால் அது தாயம் (1 எண்ணிக்கை)
  • 2 சோகிகள் திறந்து 2 சோகிகள் மூடி இருந்தால் அது இரண்டு (2 எண்ணிக்கை)
  • 3 சோகிகள் திறந்து 1 சோகி மூடி இருந்தால் அது மூன்று (3 எண்ணிக்கை)
  • 4 ம் திறந்து இருந்தால் அது வெள்ளை (4 எண்ணிக்கை)
  • 4 ம் மூடி இருந்தால் அது எட்டு (8 எண்ணிக்கை)

ஆட்டமிழக்காமல் இருக்க 1, 4 அல்லது 8 எறிய வேண்டும். 1, 4 அல்லது  8 எடுத்தால் தொடர்ந்து விளையாடலாம்.

2 அல்லது 3 எறிந்தால் ஆட்டமிழக்கப்படும். 2 அல்லது  3 எடுத்தால் அடுத்தவர் விளையாடுவார்.

காய்கள்[தொகு]

ஒவ்வொருவரும் நான்கு காய்களை வைத்திருக்க வேண்டும்.

மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள, வெவ்வேறு நிறங்களில், அல்லது வடிவங்களில் அல்லது உருவங்களில் இவை இருக்க வேண்டும்.

ஊரி, சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், வெறு சிறு விதைகள் என்பவை சில உதாரணங்கள்.

நகர்வுகள்[தொகு]

எண்ணிக்கை அளவுக்குக் காய்கள் நகர்த்தப்படலாம். ஒரு எண்ணிக்கை ஒரு காய்க்கு ஒரு முறை மட்டும் நகர்த்தப் பாவிக்கப்படும்.

விளையாட்டு ஆரம்பத்தில், இரு பகுதியும் தமது காய்களைத் தமது இல்லத்தில் (மனைக்கு வெளியே) வைத்திருப்பார்கள்.

கோட்டிற்குள் செல்வதற்குத் தாயம் அவசியம். இது முழுக்கு என்று சொல்லப்படும். முழுகிய பின்னர் எல்லா எறிவுகளுக்கும் காயை நகர்த்த முடியும்.

உங்கள் காயைத் தந்திரமாக நகர்த்துவதற்கு உங்கள் எறிதல்களைப் பொருத்தமாகத் தெரிவு செய்ய வேண்டியிருக்கும்.

ஒருவர் பக்கம் இருக்கும் நடுப் பெட்டியிலிருந்து (மனை)  தொடங்கி வலஞ்சுழியாகச் சென்று, வெளிப் பெட்டிகளால் சுற்றி மீண்டும் உங்கள் மனைக்கு வரும்போது, மனைக்குட் செல்லாமல் உட் பெட்டிகளுக்குச் சென்று எல்லாப் பெட்டிகளினூடும் சுற்றி நகர்ந்து  பழத்தை அடைய வேண்டும்.

பழுத்த காய்களைத் தாயம் மூலம் முதலில் இறக்கியவர் வென்றவராவார்.

உங்கள் நகர்வு முடிந்த்ததும் அடுத்தவர் விளையாடலாம்.

இறுக்கமும் வெட்டும்[தொகு]

கோட்டில் நுழைந்த பின், தடைகள் (எதிராளிகளின் காய்கள்) இல்லா விட்டால் எல்லா எறிதல்களும் நகர்வுக்குப் பயன்படும். ஒரு எண்ணிக்கை நகர்வின் ,

முடிவிடத்தில் அடுத்தவர் காய் இருந்தால், அங்கே இருந்தவர் வெட்டப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்.   ஒரு நகர்வின் முடிவிடத்திற்கு முன்பே

அடுத்தவர் காய் இருந்தால், நகர்வு தடுக்கப்படும். இது இறுக்கு நிலை எனப்படும். ஆனால், அடுத்தவர் காய், மனைகளில் இருந்தால் வெட்டும் இல்லை, தடையும் இல்லை. மனைகளிலும், பழத்திலும் எல்லோரும் பாதுகாப்பாக ஒன்றாக இருக்கலாம்.

வெற்றி[தொகு]

பழத்தை அடைந்து முதலில் தனது காய்களை வீட்டுக்கு இறக்குபவர் அல்லது இறக்கும் சோடி வெற்றி பெறும்.

சில மேலதிக சட்டங்கள்[தொகு]

  • எதிராளியை வெட்ட முன்னர் எந்தக் காயும் பழுக்க முடியாது
  • ஒரு காய் வெட்டினால் மற்றக் காய்கள் வெட்ட வேண்டிய அவசியம் இல்லை
  • கன்னைகள் ஒருவரை ஒருவர் வெட்ட முடியாது
  • கன்னைகளில் ஒருவர் தனது பழங்களை இறக்கிய பின்னர், மற்றவருக்காக தனது முறை விளயாட்டை விளையாடலாம்

தாயக் கட்டை[தொகு]

பொதுவாக தாயக் கட்டைகள் மரத்திலோ அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோ செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7x7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச் சிரட்டையில் போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம் காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம் காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.

நான்முக தாயக் கட்டை[தொகு]

நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.

அறுமுக தாயக் கட்டை[தொகு]

அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்.

சோழி உருட்டல்[தொகு]

ஆறு சோழிகளை உருட்டி தாயம் விளையாடுவதும் உண்டு

தாயக் கட்டம்[தொகு]

இந்தியாவில் ஒவ்வொறு பகுதியிலும் ஒவ்வொறு வகையாக கட்டங்களை அமைத்து தாயம் விளையாடப்படுகிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலானோர் இரு வகைக் கட்டங்களை அமைத்தே விளையாடுகின்றனர். முதல் வகை தாயக் கட்டம் காய்களை வைக்கும் பகுதி உட்புறமாக நாற்புறமும் ஆறு x மூன்று கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் வகை தாயக் கட்டம் ஏழு x ஏழு சதுரமாக அமைக்கப்பட்டிருக்கும். தாயக் கட்டத்தை வெறும் தரையில் வரைந்தோ அல்லது மரப் பலகையில் வரைந்தோ விளையாடப்படுகிறது.

விதி முறைகள்[தொகு]

பின்வரும் விதி முறைகள் நான்முக தாயக்கட்டையை கொண்டு 3x6 கட்டத்தில் விளையாடுவதற்கேற்றது:

  • இரண்டு முதல் நான்கு ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை துவக்கவேண்டும்.
  • ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனித்தனியான காய் வகைகளை தேர்வு செய்து கொள்ளவேண்டும். காய்கள் உருவத்திலோ அல்லது நிறத்திலோ வேறுபட்டு இருப்பது நல்லது.
  • ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் ஆறு காய்களைக் மனைப் பகுதியில் வைத்து ஆட்டத்தைத் துவக்க வேண்டும்.
  • தாயம் இட்டபின்னேதான் மனையிலிருந்து முதற்கட்டத்தில் காய்களை வைக்க வேண்டும். முதற்காய்க்கான தாயம் விழும் வரை 5, 6, மற்றும் 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. 2, 3, மற்றும் 4 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் இல்லை. ஒரு ஆட்டத்தில் முதற்காய்க்கான தாயம் விழும் முன் மறு ஆட்டத்திற்கான எண்கள் விழுந்து பின் தாயம் விழுந்தால், மறு ஆட்டத்திற்கான எண்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • காய்களை நகர்த்தும் திசையை மேலுள்ள வரைப்படத்தில் காணலாம் (பச்சைக் கோடுகள்).
  • ஒரு கட்டத்தில் ஒரு ஆட்டக்காரரின் காய்களே இருக்க முடியும். வேறு ஆட்டக்காரரின் காய்கள் அதே கட்டத்தில் நுழைந்தால் முதலிருந்த காய்கள் வெட்டப்பட்டு மனைக்கு திருப்பி அனுப்பப்படும்.
  • சில கட்டங்களின் குறுக்கே இரு கோடுகள் இருக்கும். இக்கட்டங்கள், மலை என்றழைக்கப்படும். இக்கட்டத்தில் வந்து நிற்பதற்கு மலையேறுதல் என்று பெயர். இவை சிறப்புக் கட்டங்கள். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்க முடியும். அதாவது, இக்கட்டங்களில் ஒரு ஆட்டக்காரரின் காயை இன்னொரு ஆட்டக்காரரால் வெட்டப்பட முடியாது.
  • 1, 5, 6, அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. பிறர் காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு.
  • உதாரணத்திற்கு, ஒரு ஆட்டக்காரர் 5, 4 என்ற எண்களை தன்னுடைய ஒரு ஆட்டத்தில் இடுகிறார் என வைத்துக்கொள்வோம். 5க்கு ஒரு காயையும் 4க்கு வேறொரு காயையும் அவரால் நகர்த்த முடியும்.
  • காய்கள் ஒரு முறை சுற்றி வந்த பின் திரும்பவும் மனைக்குள் செல்லவேண்டும். ஆனால் வேறு ஆட்டக்காரரின் காய்களை முன்னமே வெட்டவில்லையென்றால் மனைக்குள் செல்ல முடியாது.
  • அவ்விதம் மனைக்குள் செல்ல முடியாத காய்கள் கடைசிக் கட்டத்திலேயே தங்கி விடும். சிலர் விதிமுறையை மாற்றி காய்களை சுற்றி சுற்றி வரவைப்பதும் உண்டு.
  • காய்கள் மனைப் பகுதியில் உள்ள கட்டத்துக்குள் ஏறிய பின் மீண்டும் மனைக்குள் புகுந்தால் அக்காய்களை பழம் என கருதி ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதை பழம் எடுத்தல் என்றழைப்பர்.
  • ஒரு ஆட்டக்காரருக்கு நகர்த்துவதற்கு காய்கள் இருந்தும், அவர் ஒரு சுற்றில் இடும் எண்களுக்கு அவரால் காய்களை நகர்த்த முடியவில்லையென்றால், அவ்வாட்டத்திற்கு அவரால் காய்களை நகர்த்த இயலாது.
  • முதலில் எந்த ஆட்டக்காரர் ஆறு காய்களையும் பழமாக மாற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவார்.
  • சில சமயங்களில் நான்கு பேர் கொண்ட ஆட்டத்தில், எதிரெதிரே அமர்ந்திருப்பவர்கள் ஓரணியாகக் கொண்டு அவர்களில் ஒருவரின் மனையை தங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஈரணியாக ஆடுவது உண்டு. இதன் மூலம் நான்கு பேர் கொண்ட ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கமுடியும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயம்&oldid=3416392" இலிருந்து மீள்விக்கப்பட்டது