தலை வேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசிசிப்பியன் காலத்தில் துண்டிக்கப்பட்ட தலையுடன்; பாதிரியார் ஒருவரைக் காட்டும் செப்புத் தகட்டு இலக்கவியல் ஓவியம்

தலை வேட்டை அல்லது மனிதர் தலை வேட்டை ஆங்கிலம்: Headhunting; மலாய்: Pemburuan Kepala; இந்தோனேசியம்: Buruan Kepala) என்பது மனித மண்டை ஓட்டைப் பெறுவதற்காக மனிதர்களின் தலையைக் கொய்யும் பழக்கத்தைக் குறிப்பது ஆகும்.

வரலாற்றுக் காலங்களில் ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஓசியானியா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இந்தத் தலை வேட்டை நடைமுறையில் இருந்தது.[1]

இந்த நடைமுறை ஐரோப்பாவில் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பால்கன் தீபகற்பத்தில் (Balkan Peninsula) இருந்தது. இருப்பினும் அயர்லாந்து (Ireland) மற்றும் இசுக்கொட்லாந்து (Scotland) போன்ற நாடுகளில் 20-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் காலத்தின் போதும் நடைமுறையில் இருந்துள்ளது. சீன வீரர்கள் பலரும்; மற்றும் பொதுமக்கள் சிலரும் ஜப்பானிய போர் வீரர்களால் தலை துண்டிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்து உள்ளன.[2]

மலாயா அவசரகாலத்தின் போது பிரித்தானிய படைகள் போர்னியோவில் இருந்த இபான் தலை வேட்டையாளர்களைப் பணியில் அமர்த்தியதாகவும்; சந்தேகத்திற்கு உரியவர்களின் தலைகளைத் துண்டிக்க அனுமதித்ததாகவும் அறியப்படுகிறது.[3]

ஆசியா ஓசியானியா[தொகு]

ஒரு பழங்குடி கிராமத்தில் மனித மண்டை ஓடுகள். 1885-இல் நியூ கினியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

மெலனீசியா[தொகு]

தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளில் (Pacific Islands) உள்ள பல ஆசுத்திரோனீசிய மக்களால் (Austronesian People) தலைவேட்டை நடைமுறைப் படுத்தப்பட்டது.

நியூ கினி (New Guinea) உட்பட மெலனீசியாவில் (Melanesia) வாழ்ந்த பெரும்பாலான மக்களிடையே தலைவேட்டை ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்து உள்ளது.[4]

1901-இல், ஒரு சமயப் பணியாளர், பாப்புவா நியூ கினி நாட்டின் கோரிபாரி தீவில் (Goaribari Island) உள்ள ஒரு சமூகக் கூடத்தில் 10,000 மண்டை ஓடுகளைக் கண்டுபிடித்தார்.[5] வரலாற்று ரீதியாக, நியூ கினியில் உள்ள மரிண்ட்-அனிம் (Marind-anim) எனும் பழங்குடி மக்கள், தலை வேட்டை பழக்கத்தில் புகழ் பெற்றவர்கள்.[6]

நியூ கினி கொரோவாய் பழங்குடியினர்[தொகு]

1913-இல் பிலிப்பீன்சு பழங்குடி மக்களின் மனித மண்டை ஓடுகள்.

மேற்கு நியூ கினியின் தென்கிழக்கில் வாழும் கொரோவாய் (Korowai) பழங்குடியினர், ஏறக்குறைய 40 மீட்டர் உயரமுள்ள மர வீடுகளில் வாழ்கின்றனர். முதலில் இது ஒரு தற்காப்பு நடைமுறையாக நம்பப்பட்டது. ஆனால், அண்டைய பழங்குடி மக்களின் தலை வேட்டையாடுதலில் இருந்து தப்பிக்கும் ஒரு பாதுகாப்பு செயல்பாடு என பின்னர் தெரிய வந்தது.[7]

1961-இல் நியூ கினியில் ஒரு களப்பயணத்தில் இருந்தபோது காணாமல் போன அமெரிக்கரான மைக்கேல் ராக்பெல்லர் (Michael Rockefeller) என்பவர், தலை வேட்டைக்காரர்களால் கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சிலர் நம்புகின்றனர். இவர் நியூயார்க் ஆளுநர் நெல்சன் ராக்பெல்லரின் (New York Governor Nelson Rockefeller) மகன் ஆவார்.

தென்கிழக்கு ஆசியா[தொகு]

இபான் கடல் தயாக்குகளால் கொய்யப்பட்ட புனான் பழங்குடி மக்களின் தலைகள்

தென்கிழக்கு ஆசியாவில், மூருட், டூசுன் லொத்துடு (Dusun Lotud), இலோங்கோடு (Ilongot), இகோரோட் (Igorot), இபான், தயாக்கு, பெரவான் (Berawan), வானா (Wana) மற்றும் மப்புரோண்டோ (Mappurondo) பழங்குடியினர் தலை வேட்டை மற்றும் பிற நடைமுறைகளையும் பின்பற்றி வந்து உள்ளனர்.

இந்த குழுக்களில், தலையை வேட்டையாடுவது பொதுவாக ஒரு சடங்கு நடவடிக்கையாக இருந்தது. மாறாக போர் அல்லது சண்டையின் செயலாக அல்ல. ஒரு போர்வீரர் ஒரு தலையை மட்டுமே கொய்வது வழக்கமாக இருந்தது.[8]

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை மேற்கு சுமாத்திரா நியாசு தீவில் (Nias Island), இந்தத் தலைவேட்டை செயல்பாடு ஆங்காங்கே தலைமறைவாகத் தொடர்ந்தது. கடைசியாக அப்படி ஒரு நிகழ்ச்சி 1998-ஆம் ஆண்டில் நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

போர்னியோ சரவாக்[தொகு]

போர்னியோவில் ஒரு தயாக்கு தலை வேட்டையாளர்

போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியான சரவாக்கில், வெள்ளை ராஜா ஜேம்சு புரூக் மற்றும் அவரின் சந்ததியினர் ஒரு வம்சாவழி அரசியல் நிர்வாகத்தை நிறுவினார்கள். இரண்டாம் உலகப் போருக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் தலை வேட்டை பழக்கத்தை ஒழித்தனர்.

சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா (Rajah of Sarawak) எனும் புரூக் பரம்பரையைத் தோற்றுவித்தவர்; அதன் முதல் ராஜாவாக சரவாக் இராச்சியத்தில் கோலோச்சியவர்.

1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர். அந்தக் காலக் கட்டத்தில் சரவாக் கடல் பகுதிகளில் கடற்கொள்ளைகள் பரவலாக இருந்தன. அந்த கடற்கொள்ளைகளை அடக்குவதில் ஜேம்சு புரூக் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

ஜேம்சு புரூக்கின் வருகைக்கு முன், 1863-ஆம் ஆண்டில் மேற்கு கலிமந்தான் (West Kalimantan) பகுதியில் இருந்து, இபான் மக்கள் சரிபாசு ஆறு மற்றும் இரசாங் ஆற்றின் மேல்பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

அந்தப் பகுதிகளில் வாழ்ந்த காயான், செரு (Seru), மற்றும் புக்கித்தான் (Bukitan) போன்ற சிறிய பழங்குடியினரைத் தாக்கினார்கள். அத்துடன் அவர்கள் மீது தலைவேட்டையும் நடந்து உள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. Hutton, J. H. "The Significance of Head-Hunting in Assam." The Journal of the Royal Anthropological Institute of Great Britain and Ireland, vol. 58, 1928, pp. 399–408.
  2. E-Modigliani, "Un viaggio a Nias," Fratelli Treves Editori Milano 1890
  3. Harrison, Simon (2012) (in English). Dark Trophies: Hunting and the Enemy Body in Modern War. Oxford: Berghahn. பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78238-520-2. 
  4. Some Head-Hunting Traditions of Southern New Guinea, by Justus M. van der Kroef, American Anthropologist, New Series, Vol. 54, No. 2 (Apr. – Jun. 1952), pp. 221–235
  5. Laurence Goldman (1999).The Anthropology of Cannibalism. p.19.
  6. Nevermann 1957: 9
  7. "Head-Hunters Drove Papuan Tribe Into Tree-Houses". Sciencedaily.com. 1998-03-09. பார்க்கப்பட்ட நாள் 2010-05-25.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. Puccioni, Vanni. (2013). Fra i tagliatori di teste : Elio Modigliani : un fiorentino all'esplorazione di Nias Salatan, 1886. Marsilio. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-88-317-1710-6. இணையக் கணினி நூலக மையம்:909365265. 

சான்றுகள்[தொகு]

  • Nevermann, Hans (1957) (in de). Söhne des tötenden Vaters. Dämonen- und Kopfjägergeschichten aus Neu-Guinea. Das Gesichtder Völker. Eisenach • Kassel: Erich Röth-Verlag.  The title means Sons of the killing father. Stories about demons and headhunting, recorded in New Guinea.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலை_வேட்டை&oldid=3676813" இலிருந்து மீள்விக்கப்பட்டது