தமிழிசை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்னும் மூன்றாகும். இதில் இயற்றமிழ் பண்ணோடு புணர்ந்து தாளத்தோடு நடைபெறும்போது அது இசைத்தமிழாக உருவெடுக்கிறது. அத்தகைய தமிழிசை, தமிழனின் வாழ்வியலோடு பண்டு முதல் பின்னிப் பிணைந்து வந்திருக்கிறது.


சங்க காலம்[தொகு]

பழந்தமிழ் மக்கள் நுட்பமான இசைப்புலமையும், இசை இலக்கண அறிவும் பெற்றிருந்தனர். கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுந்த நூல்களான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் இது பற்றிக் கூறுகின்றன.

பழந்தமிழ் மக்கள் இயற்கையில் எழும் ஒலிக் கூறுகளை நுண்மையாக ஆராய்ந்தனர். அதனை ஒட்டி இனிமையான ஓர் இசை முறையை உருவாக்கினர். படிப்படியாகப் பண்படுத்திய அந்த இசை முறையைப் "பண்" என்று அழைத்தனர். வாழும் நிலத்திற்கேற்பப் பண்களை வகைப்படுத்தினர். நேரத்திற்குப் (காலத்திற்குப்) பொருந்த பண்கள் பாடினர். சுவைக்குத் தகுந்த பண்கள் பாடினர். பண்கள் 103 என்றும் வகுத்தனர்.

கலைஞர்கள்[தொகு]

செயல்முறைத் தகைமைக்கு ஏற்பக் கலைஞர்கள் வெவ்வேறு வகுப்பினராகத் தொழில்பட்டனர். பாட்டுப் பாடியவர்கள் பாணர். கூத்து ஆடியோர்கள் கூத்தர். கருவி இசைத்தோர் யாழ்ப்பாணர், பறையர், துடியர், கிணைஞர் என்றவாறு அவரவர் கருவிப் பெயர் கொண்ட வகுப்பினர் ஆயினர். மேலும் இசைப் பொழிவுக் கலைஞர், குரலிசைக் கலைஞர், கொன்னக்கோல் கலைஞர், குழலிசைக் கலைஞர் ஆகியயோரும், இசை வளர்த்த நங்கையர்களும் இருந்துள்ளனர்.

இசைக்கருவிகள்[தொகு]

நரம்புக் கருவி, காற்றுக் கருவி, தோற்கருவி ஆகியவற்றை முறையே யாழ், குழல், முழவு எனப் பொதுப்படக் கூறினர். இவை ஒவ்வொன்றிற்கும் உரிய பல்வேறு வகைக் கருவிகளை உருவாக்கினர். இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவை உதவின.

இசை நூல்கள்[தொகு]

முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, சிற்றிசை, பேரிசை, பரிபாடல், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், தாளசமுத்திரம், சச்சபுட வெண்பா, இசைநுணுக்கம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுள்துறைக் கோவை முதலான பண்டைய இசைத் தமிழ் நூல்களாகும். இவற்றுள் சில காலத்தால் அழிந்துபட்டன.

சிலப்பதிகாரம் (காப்பிய காலம் )[தொகு]

குரலானது, துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு நிலைகளாகத் தமிழிற் சுட்டப்படுகிறது. சிலப்பதிகாரம் தமிழிசை இலக்கண நூல் என்றே போற்றப்படுகிறது. அதற்குரிய அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றன.

பக்தி இலக்கிய காலம்[தொகு]

இடைக்காலத்தில் இசையோடு தமிழ் பாடிய ‘தேவார திருவாசகம்’ தமிழிசை வளர்ச்சியைக் காட்டக் கூடியனவாகும். திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் தேவாரத்திற்குரிய பண்களை வகுத்து அவற்றை அதன்படி பாடி, நாடெங்கும் பரப்பி வந்துள்ளனர். பரிபாடலும், தேவாரமும் இங்ஙனம் பண்முறைப் படி தொகுக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி இசைத்தமிழை வளர்த்தார். ஆயிரத்தெட்டு மேளகர்த்தாப் பண்களுக்கும் அவர் திருப்புகழ் பாடினார்.

தற்காலம்[தொகு]

இசைத்தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியோர்:

  1. திருவாரூர் இராமசாமி பிள்ளை
  2. பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
  3. இராமகவி
  4. ஆனை ஐயா
  5. பட்டாபிராமய்யர்
  6. கனம் கிருஷ்ண ஐயர்
  7. பராங்குசதாசர்
  8. நீலகண்ட சிவம்
  9. பட்டணம் சுப்ரமணிய ஐயர்
  10. செவற்குளம் கந்தசாமிப் புலவர்
  11. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  12. சுந்தர முதலியார்
  13. ஆறுமுக உபாத்தியாயர்
  14. முருகேச கவிராயர்
  15. சுப்பிரமணிய பண்டிதர்
  16. செய்யூர் செங்கல்வராய சாஸ்திரி
  17. அகத்தியலிங்க கவிராயர்
  18. இராசப்ப முதலியார்
  19. சின்னசாமி நாயுடு
  20. சரவணபவ தாசர்
  21. வ. த. சுப்ரமணிய பிள்ளை
  22. நமச்சிவாய நாவலர்
  23. குப்புசாமி கிராமணி
  24. காஞ்சி சபாபதி முதலியார்
  25. கிருஷ்ணசாமி ஐயா
  26. வேலாயுதக் கவிராயர்
  27. கோவிந்தராச தேசிகர்
  28. சண்முக முதலியார்
  29. சாமிநாத தாசர்
  30. பாலசுப்ரமணிய முதலியார்
  31. காமியப்பக் கவிராயர்
  32. முத்துசாமிக் கவிராயர்
  33. வடலூர் வள்ளலார் இராமலிங்கர் (கீர்த்தனைகள்)
  34. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (காவடிச் சிந்து)
  35. குணங்குடி மஸ்தான் சாகிபு
  36. கோட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்
  37. கவி குஞ்சரபாரதி
  38. முத்துத் தாண்டவர்
  39. பாபநாசம் சிவன்
  40. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  41. பாரதியார்
  42. தேசிக விநாயகம் பிள்ளை பல கீர்த்தனைகளை இயற்றினார்.
  43. பாரதிதாசன்
  44. சுத்தானந்த பாரதியார்
  45. பெரியசாமித்தூரன் தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.

தமிழிசை இயக்கம்[தொகு]

அண்ணாமலை அரசர் 1943-இல் தமிழிசை இயக்கத்தைத் தொடங்கித் தமிழிசை வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்தார். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியாரும், கோவை சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரும், இரசிகமணி டி.கே.சியும், கல்கியும் தமிழிசை இயக்கத்தை முன்னின்று செயல்படுத்தினார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழிசை_வரலாறு&oldid=1437844" இலிருந்து மீள்விக்கப்பட்டது