தமிழிசை மூவர் மணிமண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழிசை மூவர் மணிமண்டபம், தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. தமிழிசை மூவர்களான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரின் நினைவாக தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள இம்மணிமண்டபம் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 தேதியன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவால் காணொலி மூலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த திமுக அரசின் காலத்தில் இம்மணிமண்டபம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக சிதம்பரம்- மயிலாடுதுறை முக்கிய சாலையோரம் 19160 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட்டு, 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் மணிமண்டபப் பணிகள் தொடங்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. எனினும் இதன் திறப்புவிழா 2013 ஆம் ஆண்டுதான் நடைபெற்றுள்ளது. 4772 சதுர அடியில் இந்த மணிமண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தின் முகப்பில் தமிழிசை மூவரின் வெண்கலத்தினாலான முழு உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு சுவரங்களின் அடையாளமாக மண்டபத்தின் மையத்தில் ஏழு கலசங்கள் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]