தபிதா பாபு

தபிதா பாபு (1845 – 1890) ‘அமிர்தவசனி’ என்ற முதல் பெண்கள் இதழை தமிழில் தோற்றுவித்தவர்[1].
இளமை காலம்
[தொகு]இவர், செப்டம்பர் 8, 1845ல், சென்னையில் பிறந்தார். பிறந்ததுமே தாயை இழந்தார். தந்தை ஹோசியா பீட்டர், வேப்பேரி புனித பால் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதே பள்ளியில் கல்வி பயின்றார் தபிதா.அதன் பின் கறுப்பர் நகரத்தின் ஹர்ட் என்ற அமெரிக்க மிஷனரியின் வீட்டில் வளர்க்கப்பட்டார். சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி வந்த தமிழ்ப் பண்டிதர் ஒருவர் மூலம் தமிழை முறையாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். அங்கே இவர் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியையும் கற்றுக்கொண்டார். அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் ஹர்ட் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். அடிக்கடி தபிதாவை அங்கு அழைத்துச் சென்றார். அதன் மூலம் அச்சகப் பணிகளைக் கற்றுத் தேர்ந்தார் தபிதா[2].
தபிதா, இலவச சர்ச் மிஷன் போர்டிங் பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மிஷனின் பெண்கள் பள்ளிகளின் பொறுப்பாளராக இருந்த ஆர்.எம். பாபுவுடன் அவருக்குத் திருமணமானது. திருமணத்திற்குப் பின் முழுக்க முழுக்க சர்ச் மிஷன் பள்ளிகளின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பாபு, தென்னிந்தியாவின் முதல் இந்தியக் கிறிஸ்தவ இதழான 'தி ஈஸ்டர்ன் ஸ்டார்' இதழின் நிர்வாக உரிமையாளராகவும் 'சத்திய தீபம்', இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். ஏற்கனவே அச்சகப் பணிகளில் நல்ல அனுபவம் பெற்றிருந்த தபிதா, இவ்விதழ்களின் வெளியீட்டிற்கு உதவினார்[3].
ஜெனானா கற்பித்தல்
[தொகு]பெண்கள் வீட்டிலிருந்தே கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்திலும், அவர்கள் அறிவை வளர்க்கும் ஆர்வத்திலும் 1865ல் 'அமிர்தவசனி' இதழைத் தொடங்கினார்[1]. ‘ஜெனானா கற்பித்தல்' என்ற கல்வி பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். தானே நேரடியாகப் பெண் குழந்தைகளின் வீட்டிற்குச் சென்று கல்வி போதித்தார். அதற்கென ஒரு குழு அமைத்துச் செயல்பட்டார். சென்னையில் ஜெனானா முறை கல்வியை முதன்முதலில் ஏற்படுத்தியவர் தபிதா பாபுதான். ஆறு பள்ளிகள் தபிதா பாபுவின் மேற்பார்வையில் இயங்கின. அதனைப் பரவலாக்கி, பெண்கள் கல்வி பயில்வதில் இருந்த தடைகளை நீக்க முயற்சித்தார். பெண்கள் பயிலும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களையே நியமித்தார். அதற்காகப் பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்க, 'மெட்ராஸ் கிறிஸ்தவப் பெண் பயிற்சி பள்ளி'யை 1871ல் தொடங்கினார். அதன்மூலம் பயிற்சி பெற்றவர்களை, பல்வேறு மிஷன்களின் ஜெனானா நிறுவனத்தில் போதிப்பதற்காக அனுப்பினார்[2].
இறப்பு
[தொகு]பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதிலும் அவர்களின் கல்வி, சமூக மேம்பாட்டிலும் அக்கறை கொண்டு செயல்பட்ட தபிதா பாபு, பிப்ரவரி 6, 1890ஆம் ஆண்டு காலமானார்[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழின் முதல் மகளிர் இதழ் ஆசிரியர்". Hindu Tamil Thisai. 2022-07-10. Retrieved 2025-03-31.
- ↑ 2.0 2.1 2.2 Murdoch, John (1896). Sketches of Indian Christians. Christian Literature Society of India.
- ↑ "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - தபிதா பாபு". www.tamilonline.com. Retrieved 2025-03-31.