டபீர் பண்டிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சாவூர் மராத்திய மன்னர் பிரதாபசிம்மன் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறந்த அரண்மனை நிர்வாக அலுவலராக விளங்கியவர் டபீர் பண்டிதர் ஆவார்.

விசுவநாத பண்டிதர்[தொகு]

அரண்மனை நிர்வாக அலுவலராக விளங்கிய விசுவநாத பண்டிதர் என்பவர் நிருவாகத் திறமையால் அமைச்சராக பதவி உயர்வினைப் பெற்றார். அதன் பின்னர் அரசரின் அன்பான ஆதரவால் டபீர் பண்டிதர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டார். டபீர் என்பது பாரசீகச் சொல் ஆகும். இச்சொல்லிற்குச் செயலர் என்று பொருள் கூறுவர். இவரது இயற்பெயர் நாரோ பண்டிதர் என்பதாகும். இவரது பேரன்களாக நாரோ விசுவநாதத், நாநாஜி கங்காதர் ஆகிய இருவரும் வாழ்ந்துள்ளனர். [1]

டபீர் முறி[தொகு]

இவர் அமைச்சர் பதவியேற்றபோது ஆற்காட்டு நவாப்பின் படையெடுப்பால் தஞ்சையில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அதனால் கி.பி.1771இல் ‘அமானி‘ என்ற முறை செயல்படுத்தப்பட்டது. ஆனால் டபீர் பண்டிதர் புது செயல் முறையாக பத்து ஆண்டுகளின் மொத்த வருமானத்தை அறிந்து அதன் சராசரியைக் கணக்கிட்டு அதன்படி நிலத்தைப் பயிரிடுபவர் அரசிற்குத் தரவேண்டும் என்று ஆணையிட்டார். இவரது நிருவாகத் திட்டமானது ‘டபீர் முறி‘ எனப்பட்டது. [1]

பணிகள்[தொகு]

இவர் சமயப்பணியிலும், நிருவாகப் பணியிலும் அதிக ஆர்வம் காட்டியவர் என்பதை அவரது அறக்கொடைகளும் பரிசுகளும் உணர்த்துகின்றன.

சங்கர மடம்[தொகு]

டபீர் பண்டிதர், பிரதாபசிம்மனின் ஆணைப்படி காஞ்சி சங்கர மடத்தைக் கும்பகோணத்துக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்தார். தமது பெயரால் உருவாக்கப்பட்டிருந்த டபீர் அக்கிரகாரத்தில் இடமும் வழங்கினார். இவ்விடத்தில் காஞ்சி மடத்திற்குரிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. கும்பகோணத்தில் சங்கர மடம் இருந்த காலத்தில் தஞ்சாவூர் மராத்திய அரச குடும்பத்தினரிடம் செல்வாக்குடன் திகழ்ந்த சங்கர மடாதிபதிகள், கும்பகோணம் மகாமக விழாவினை நடத்துவதிலும் முதன்மையான பங்கு வகித்தனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 சு.சாந்தி, டபீர் பண்டிதரும் கும்பகோணமும், மகாமகம் 2004 சிறப்பு மலர்
  2. எஸ்.இராமச்சந்திரன், தஞ்சை டபீர் பண்டிதர், மகாமகம் 1992 சிறப்பு மலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டபீர்_பண்டிதர்&oldid=1728110" இலிருந்து மீள்விக்கப்பட்டது