ஜ. ரா. சுந்தரேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ. ரா. சுந்தரேசன் (சூன் 1, 1932 - திசம்பர் 7, 2017) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

தனிப்பட்ட எழுத்தாளராக அறியப்பட்டதற்கும் மேலாக, நெடுங்காலம் குமுதம் என்னும் தமிழ் வார இதழில் ஆற்றிய பணிகளுக்காகவே இவர் அதிகம் அறியப்படுகிறார். அவ் வார இதழில் பல சிறுகதைகளும் தொடர்கதைகளும் புதினங்களும் மற்றும் அதன் சகோதரப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்த மாலைமதியில் பல குறு புதினங்களும் எழுதியுள்ளார்.

இவரது, அப்புசாமி மற்றும் சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் இறவாப் புகழ் பெற்றுள்ளன. 1963ஆம் ஆண்டில் இவ்விரு கதாப்பாத்திரங்களையும் கொண்டு முதல் கதையைக் குமுதத்தில் எழுதினார். தொடர்ந்து பற்பல நகைச்சுவைச் சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை உருவாக்கினார். இவற்றில் சில ஜெயராஜ் ஓவியம் கொண்டு சித்திரக் கதைகளாகவும் வெளி வந்துள்ளன.'அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்', 'மாணவர் தலைவர் அப்புசாமி', 'அப்புசாமியும் 1001 இரவுகளும்' ஆகியவை பிரபலமானவை. தற்போது அப்புசாமி.கொம் என்ற நகைச்சுவை வலைத்தளத்தை நடத்தி வந்தார்.

'அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை' என்ற அமைப்பையும், 'அக்கறை' என்ற அமைப்பையும் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். சிறந்த இசைக் கலைஞர்களைக் கொண்டு 'அப்புசாமி - சீதாப்பாட்டி இசைக் கூடல்' என்ற அமைப்பை துவங்கி நடத்தி வந்தார்.

படைப்புகள்[தொகு]

  1. பாசாங்கு
  2. மனஸ்
  3. கதம்பாவின் எதிரி
  4. முள்ளின் காதல்
  5. தேடினால் தெரியும்
  6. மாணவர்தலைவர் அப்புசாமி
  7. அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
  8. ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்
  9. சீதாப்பாட்டியின் சபதம்
  10. அப்புசாமி படம் எடுக்கிறார்
  11. ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
  12. அப்புசாமியும் கலர் டி.வி.யும்
  13. அப்புசாமியின் தாலிபாக்கியம்
  14. ஆகாசவாணியில் அப்புசாமி
  15. அப்புசாமி பரீட்சை எழுதுகிறார்
  16. அப்புசாமியும் அற்புதவிளக்கும்
  17. பாமரகீதை
  18. பெண் பார்த்தல் ஒரு பேத்தல்
  19. அப்புசாமி 80 (இரு தொகுப்புகள்)

மறைவு[தொகு]

பாக்கியம் ராமசாமி 2017 டிசம்பர் 7 நள்ளிரவு சென்னையில் காலமானார். பாக்கியம் ராமசாமிக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜ._ரா._சுந்தரேசன்&oldid=3676118" இலிருந்து மீள்விக்கப்பட்டது