ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் (George Jeyarajasingham, இறப்பு: 13 டிசம்பர் 1984) இலங்கை, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இலங்கைத் தமிழ் மனித உரிமை ஆர்வலரும், மெதடிச மதகுருவும் ஆவார். இவரும் மேலும் மூன்று பேரும் 1984 , டிசம்பர் 13 இல் வாகனம் ஒன்றில் பயணம் செய்யும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இவர்களின் உடல்கள் அவர்கள் சென்ற வாகனத்துடன் சேர்த்து எரியூட்டப்பட்டது.[1][2][3]

பின்னணி[தொகு]

சிறுபான்மை இலங்கைத் தமிழரான ஜெயராஜசிங்கம் இலங்கையின் கிழக்கே கோமாரி என்ற ஊரில் பிறந்தவர். இவர் மன்னார் மாவட்ட மெதடிசத் திருச்சபையைச் சேர்ந்தவர்.

ஜெயராஜசிங்கம் மன்னார் மாவட்டத்தில் முருங்கன் கிராமத்தில் உள்ள ஜீவோதயம் மெதடிச மையம் என்ற பண்ணைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். ஈழப்போரின் போது இப்பகுதியில் காணாமல் போனோர் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சமூகப் பணி, மற்றும் மதப்பணி ஆற்றுவதில் முன்னின்று உழைத்தார்.

1984 ஆம் ஆண்டில் இலங்கை படைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல்களில் பாதிப்படைந்த உள்ளூர் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் இவரும், வண். மேரி பஸ்தியானும் பல்வேறு உதவிகளை செய்து வந்தனர். 1984 ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மன்னார் படுகொலைகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு முன் இவர் சாட்சியமளித்தார்.[1][2][3]

படுகொலை[தொகு]

பாக்சு கிறிஸ்டி என்ற பன்னாட்டுக் கத்தோலிக்க அமைதி இயக்கத்தின் அறிக்கையின் படி, 1984 டிசம்பர் 13 இல் ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் தெரிவித்த சில முறைப்பாடுகள் தொடர்பாக இராணுவத்தினர் மேலதிகத் தகவல்களுக்காக அவரை அழைத்திருந்தனர். ஜெயராஜசிங்கம், அவரது மனைவி பிறிஜெட் ஜெயராஜசிங்கம் (ஒரு சிங்களவர்), சாரதி அப்துல் காதர் சுலைமான், முருங்கன் காவல்நிலையத்தைச் சேர்ந்த யேசுதாசன் ரோச் என்ற தமிழ்க் காவல்துறையினர் ஆகிய நால்வரும் மன்னாரில் இருந்து முருங்கன் செல்லும் வழியில் இலங்கைப் படைத்துறையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் வழிமறிக்கப்பட்டு, நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த உடல்களை வாகனத்துடன் சேர்த்து எரித்தனர். இந்நிகழ்வின் பின்னர் வண. மேரி பஸ்தியான் இறந்தவர்களின் உடல்களைக் கண்டுபிடித்து ஜீவோதயம் மெதடித்தப் பண்ணையியில் சேர்ப்பித்தார்.[1][2][3]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Speaking truth to power: the human rights situation in Sri Lanka
  2. 2.0 2.1 2.2 "Note to the incident at St. Patrick's". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 2006-03-26.
  3. 3.0 3.1 3.2 "Untold story by K. T. Rajasingam". Asia Times. Archived from the original on 2006-06-15. பார்க்கப்பட்ட நாள் 2006-01-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_ஜெயராஜசிங்கம்&oldid=3791994" இலிருந்து மீள்விக்கப்பட்டது