பி. ஜெயச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெயச்சந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பி. ஜெயச்சந்திரன்
பின்னணித் தகவல்கள்
பிறப்புமார்ச்சு 3, 1944 (1944-03-03) (அகவை 80) கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1967–நடப்பு
இணையதளம்http://www.jayachandransite.com

பி. ஜெயசந்திரன் (மலையாளம்: : പി.ജയചന്ദ്ര൯, ஆங்கில மொழி: P. Jayachandran; பிறப்பு: மார்ச் 3, 1944) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். அவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும் தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள மாநில திரைப்பட விருதை நான்குமுறையும் பெற்றுள்ளார். 1997 ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஜெயச்சந்திரன் எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவிற்கும் பிறந்தவர். அன்னையின் தூண்டலால் ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கப் பயின்றார். எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத்தொடங்கினார். இரிஞ்சாலகுடாவில் வளர்ந்த ஜெயச்சந்திரன் அங்குள்ள தேசியப் பள்ளியில் படித்து வந்த நேரத்தில் பள்ளிப் போட்டிகளில் மிருதங்கம் மற்றும் மெல்லிசையில் பல பரிசுகளைப் பெற்று வந்தார். மாநில பள்ளிச்சிறுவர்களுக்கான ஓர் போட்டியில் 1958ஆம் ஆண்டு சிறந்த மிருதங்கக் கலைஞராக பரிசு பெற்றார். இதேப் போட்டியில் பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சிறந்த செவ்விசைப் பாடகராக தேர்வு பெற்றார்.

விலங்கியலில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு 1965 இல் ஜெயச்சந்திரன் சென்னை வந்து சேர்ந்தார்.

திரை வாழ்வு[தொகு]

1965 இல் இந்திய பாக்கித்தான் போர் நிதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஜெயச்சந்திரன் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏ. வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர். எஸ். பிரபு ஆகியோர் ஜெயச்சந்திரனை அவர்களின் குஞ்சாலி மரக்கார் என்ற மலையாளப் படத்தில் பாட வைத்தார்கள். இப்படம் வெளிவரும் முன்னரே ஜெயச்சந்திரன் பாடிய களித்தோழன் படம் வெளி வந்தது. 1972ஆம் ஆண்டு "பணிதீராத வீடு" என்ற மலையாளத் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடிய நீலகிரியுடே என்ற பாடலுக்காக முதல் கேரள மாநில விருது பெற்றார்.1985ஆம் ஆண்டு "ஸ்ரீ நாராயண குரு" என்ற மலையாளத் திரைப்படத்தில் அவரது பாடல் சிவசங்கர சர்வ சரண்ய விபோ, தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றுத் தந்தது. ஏ. ஆர். ரகுமான் இசையில் கிழக்குச்சீமையிலே படத்தில் அவரது பாடல் கத்தாழம் காட்டுவழி தமிழ்நாடு மாநில திரைப்படவிருது பெற்றது.

1975ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர். கே. சேகர் இசையமைத்த "பெண்படா" என்ற மலையாளத் திரைப்படத்தில் வெள்ளி தேன் கிண்ணம் போல் என்ற இவரது பாடல், ஒன்பது வயதில் திலீப் சேகர் என்ற ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த முதல் பாடலாகக் கருதப்படுகிறது.

  1. 1973ம் ஆண்டு வெளியான அலைகள் தமிழ் படத்தில் ""பொன்னென்ன பூவென்ன பெண்ணே..."" என்ற பாடலை எம் எஸ் வி இசையில் அறிமுகம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "First song of the legendary composer A.R.Rahman".

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜெயச்சந்திரன்&oldid=3916743" இலிருந்து மீள்விக்கப்பட்டது