ஜானகி ஆதி நாகப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவான்ஸ்ரீ
பத்மஸ்ரீ
ஜானகி ஆதி நாகப்பன்
பிறப்புபெப்ரவரி 25, 1925
கோலாலம்பூர், மலேசியா
இறப்புமே 9, 2014(2014-05-09) (அகவை 89)
கோலாலம்பூர், மலேசியா
தேசியம்மலேசியத் தமிழர்
அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு, மலேசிய இந்திய காங்கிரஸ் உருவாக்கியமை.
பட்டம்துணைத்தளபதி
ஜான்சி ராணிப் படை
இந்தியத் தேசிய இராணுவம்
புவான்ஸ்ரீ
பத்மஸ்ரீ
அரசியல் கட்சிமலேசிய இந்திய காங்கிரசு
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
டான்ஸ்ரீ ஆதி நாகப்பன்
பிள்ளைகள்ஈஸ்வர் நாகப்பன்

புவான்ஸ்ரீ பத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (25 பிப்ரவரி 1925 – 9 மே 2014 ) மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். மலாயா என்று அழைக்கப்பட்ட மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர். சுபாஷ் சந்திர போஸ்யின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர்.தன்னுடைய 18 வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையிற் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாகக் களம் கண்டவர். சுபாஷ் சந்திர போஸ்யின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயற்பட்டவர். இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்.

வரலாறு[தொகு]

சுபாஷ் சந்திர போஸ், மலாயாவில் இருந்த இந்தியர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்குத் தங்களால் இயன்றதை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே ஜானகி ஆதி நாகப்பன், தான் அணிந்திருந்த தங்கக் கம்மல்களைக் கழற்றிக் கொடுத்தார்.

இந்திய நாட்டுப் பற்று[தொகு]

சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவிற்கு வந்து பேருரைகள் ஆற்றியபோது தமிழர்கள் தங்கள் வீடுகளில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர். நகையும் தமிழரும் பிரிக்க முடியாதவையாக இருந்த கால கட்டத்தில், இருந்ததை எல்லாம் மலாயாத் தமிழர்கள் சுபாஸ் சந்திரபோசிடம் அள்ளிக் கொடுத்தனர். அப்போது மலாயாத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுப் பற்று மட்டுமே முதன்மையானதாக விளங்கியது.

1946 ஆகஸ்ட் மாதம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது அது இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்திய தேசிய இராணுவத்திற்காகவும், சிறைக்குச் சென்றவர்களை மீட்பதற்காகவும் தொடங்கி வைத்த கட்சியாகவே இருந்தது. மலேசிய இந்தியர்களை வழிநடத்த ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்று அப்போதைய சுதந்திரப் போராளிகள் முடிவு எடுத்தனர்.

இந்திய தேசிய இராணுவத்தில் சேவை[தொகு]

இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என்றும் முடிவு செய்தார். அவருடைய குடும்பத்திலிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜானகி ஆதி நாகப்பனின் தந்தையாருக்கு இது பிடிக்கவில்லை. ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.

மலாயாவில் சப்பானியர்கள் ஆட்சி செய்தபோது, இந்தியாவைப் பிரித்தானியர்கள் ஆட்சியிலிருந்து விடுவிக்க இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய இராணுவத்தில் முதன்முதலில் சேர்ந்த மலாயாப் பெண்களில் ஜானகி ஆதி நாகப்பனும் ஒருவராவார். அவர் வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். முதல் நாள் படையிற் கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்து ஜானகி ஆதி நாகப்பன் அழுததாகவும் சொல்லப்படுகின்றது. ஜானகி ஆதி நாகப்பனாற் போர்ப்படையின் கடுமையான விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நெறி முறைகளுக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை. தொடக்க காலத்தில் மிகவும் அவதியுற்றார்.

காலப் போக்கில் இராணுவ வாழ்க்கை அவருக்குப் பழகிப்போனது. படை அதிகாரிகளுக்கான தேர்வில் ஜானகி ஆதி நாகப்பன் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார்[1].

பத்மஸ்ரீ விருது[தொகு]

ஆயுதம் ஏந்திய ஜான்சி ராணிப் படைக்குத் துணைத் தளபதியாகப் பதவி ஏற்ற ஜானகி ஆதி நாகப்பன், பர்மா-இந்தியா போர் முனையிற் போரில் ஈடுபட்டார்.[2] காயம் அடைந்து பரிகாரமும் பெற்றுள்ளார்.[3]

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அவரின் அரிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருதை வழங்கிக் கௌரவித்து இருக்கிறது. 1997ஆம் ஆண்டு தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தளிப்பில், இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன், ஜானகி ஆதி நாகப்பனுக்கு அந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெறும் முதல் மலேசியர் எனும் பெருமையும் இவரையே சாரும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜானகி ஆதி நாகப்பன் சமூக பொதுச் சேவைகளிற் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். 1946ஆம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரசின் முதற் தலைவர் ஜான் திவியுடன் இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.காவை உருவாக்கினார்.

மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்[தொகு]

ம.இ.காவின் மகளிர் பகுதி சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980 ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார். அந்தப் பதவியை 1986 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் வகித்தார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி இவர்தான்.

1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற ம.இ.கா. அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ ஆதி நாகப்பனுக்கும் இவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர்களுக்கு 1949 இல் திருமணம் நடைபெற்றது.

டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது[தொகு]

டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் அரசியல் ஈடுபாட்டிற்கும் பொதுப் பணிகளுக்கும் தொடக்க காலத்திலிருந்து பேருதவியாக இருந்து வந்தார். இவருடைய கணவரின் பெயரில் ஆண்டுதோறும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அந்த விருது வழங்கப் படுகிறது.ஆதி நாகப்பன் தமபதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருடைய பெயர் ஈஸ்வர் நாகப்பன்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானகி_ஆதி_நாகப்பன்&oldid=3309959" இலிருந்து மீள்விக்கப்பட்டது