ஜவரே கவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவெ கௌடா ஜவாரே கௌடா
பிறப்பு(1915-07-06)6 சூலை 1915
சக்கரே
இறப்பு30 மே 2016(2016-05-30) (அகவை 100)
மைசூர், கர்நாடகம், இந்தியா
பணிநூலாசிரியர், பேராசிரியர், உபவேந்தர்
விருதுகள்பத்மசிறீ, கருநாடக இரத்தினா, பம்பா பிரசசுத்தி

ஜவரே கவுடா (Javare Gowda) என்று சுருக்கமாக அழைக்கப்படும், தேவே கௌடா ஜவரே கௌடா (Deve Gowda Javare Gowda, 6 சூலை 1915 - 30 மே 2016), ஒரு இந்திய கன்னட எழுத்தாளர் ஆவார். இவர், ஆசிரியர்களான, டி. என். ஸ்ரீகாந்தையா, குவெம்பு ஆகியோரின் சீடராக இருந்தார். [1] [2] இவரது இலக்கிய வாழ்க்கை பல தசாப்தங்களாக பரவியுள்ளது. இவர் கன்னட மொழியில் முப்பத்தி நான்கு சுயசரிதைகளையும் சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட பிற படைப்புகளையும் எழுதினார். கன்னட மொழியை மேம்படுத்துவதற்காக பிரச்சாரம் செய்தார். இலக்கியம் மற்றும் கல்வியில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக பம்பா பிரசஸ்தி (1998), பத்மஸ்ரீ (2001) மற்றும் கர்நாடக ரத்னா (2008) போன்ற விருதுகளைப் பெற்றார். இவர் 2015 இல் ஒரு நூற்றாண்டு கடந்தவராக இருந்தார். மற்றும், மே 30, 2016 அன்று இறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கவுடா, கர்நாடக மாநிலத்தின் ராமநகர மாவட்டத்தின் சன்னபட்னா வட்டத்திலுள்ள சக்கரே என்ற கிராமத்தில் 1915 ஜூலை 6 ஆம் தேதி பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு மூன்று உடன்பிறப்புகள் இருந்தனர். இவரது பெற்றோர் அனைவருக்கும் கல்வி கற்பிக்க முடியாததால், இவரது மூத்த சகோதரர் மட்டுமே பள்ளிக்குச் சென்றார். கவுடா ஆடுகளை மேய்ப்பார். கல்வியின் மீது ஆர்வம் கொண்ட கவுடா, ஆடுகளைத் தனியே மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, அதற்கு பதிலாக ஒரு பள்ளி ஜன்னலுக்கு அருகில் வெளியில் இருந்து ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு வருவார். அத்தகைய ஒரு நாளில் ஆடுகள் ஒரு செல்வந்த நில உரிமையாளரின் பண்ணையில் நுழைந்து பயிரை அழித்தபோது, இவரது தந்தை இவரை அடித்து விட்டார். பள்ளி முதல்வர் இவரை மீட்டு மூன்றாம் வகுப்பில் அனுமதித்தார். மேலும் இவருக்கு சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினார் என்பதை இவர் ஒரு நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார்.

கல்வி, தொழில் மற்றும் நடவடிக்கைகள்[தொகு]

கவுடா பின்னர் பெங்களூரில் இடைநிலை வகுப்புகளுக்குப் படித்து மைசூரில் இளங்கலை பட்டம் (பி.ஏ.) முடித்தார். அவர் தனது இளங்கலை பட்ட படிப்பை, வரலாற்றோடு தனது முக்கிய பாடமாக செய்ய விரும்பினார், ஆனால் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் குவெம்பு அதைக் கற்பிப்பார் என்பதை அறிந்ததும் கன்னடத்தைத் தேர்ந்தெடுத்தார். கவுடா, மாணவராக குவெம்புடன் தொடர்பு கொள்வதற்கு முன்பே அவரின் படைப்புகளைப் படித்திருந்தார். 1941 இல் பி.ஏ முடித்த பின்னர், கன்னடத்தில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகள், (எம்.ஏ.) எந்தவொரு கல்லூரியிலும் விரிவுரை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லாததால், பெங்களூரில் உள்ள விதான சௌதாவில் உள்ள செயலகத்தில் ஒரு எழுத்தர் பணியை மேற்கொண்டார். இவர் அதே நேரத்தில் சட்டம் பயின்றார், ஆனால் பெங்களூரு மத்திய கல்லூரியில் கன்னட விரிவுரையாளர் பதவியைப் பெற்றபோது அதைத் தொடரவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு , மைசூர் மகாராஜா கல்லூரியில் கற்பித்தார். இங்கே, அவர் மீண்டும் குவெம்புவுடன் தொடர்புடையவரானார். இது, இவரது "கல்வி மற்றும் ஆன்மீக செறிவூட்டலுக்கு" பெருமை சேர்த்தது.[3]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு[தொகு]

கவுடா சாவித்ரம்மாவை மணந்தார். இவர்களது மகன் ஜே.சஷிதர் பிரசாத் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தார். [4] கவுடா 2015 இல் ஒரு நூற்றாண்டு கண்டவர் ஆனார். இந்த நிகழ்வில் கன்னட கத்தோலிக்க கிறிஸ்தவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு வாழ்த்து நிகழ்ச்சியில், கடந்த 25 ஆண்டுகளாக அனைத்து இந்து கடவுள்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவை வணங்குவதாக குறிப்பிட்டார். இவரது வீட்டில் உள்ள பூசை அறையில் இந்து கடவுள்களின் புகைப்படங்களும் சிலைகளும் இருந்தன. அங்கு வாடிகனிலிருந்து இவருக்கு கிடைத்த ஜெபமாலையும் இருப்பதைக் காணலாம்.

ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இதய செயலிழப்பு காரணமாக, மே 30, 2016 அன்று மைசூரில் காலமானார். இவர், மருத்துவமனையில் மே 28 அன்று அனுமதிக்கப்பட்டார். இவரது இறுதி சடங்குகள் மைசூரின் குவெம்பு அறக்கட்டளையில் நிகழ்த்தப்பட்டன. அவரது உடல், ஜெயலட்சுமிபுரத்திலுள்ள இவரது இல்லத்திலும் மற்றும் சந்திரகலா மருத்துவமனையிலும் மக்களின் பார்வைக்காக, காட்சிக்கு வைக்கப்பட்டது.எச்.டி.தேவேகவுடா, எச்.டி. குமாரசாமி, எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் எம்.வீரப்பா மொய்லி போன்ற அரசியல்வாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். [5]

விருதுகள் மற்றும் பாராட்டுகள்[தொகு]

கவுடா தனது முதல் முனைவர் பட்டத்தை தர்வாத்தின் கர்நாடக பல்கலைக்கழகத்தில் 1975 இல் பெற்றார். 1998 ஆம் ஆண்டில், மைசூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார், 2006 இல் சிமோகாவில் உள்ள குவெம்பு பல்கலைக்கழகத்தால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஹம்பி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட நாடோஜா விருதையும் பெற்றார். அவரது நூற்றாண்டு விழாவில், கன்னட மற்றும் கலாச்சாரத் துறைக்கு, இயக்குனர் கேசரி ஹார்வூ 30 நிமிட ஆவணப்படம் தயாரித்தார். மேலும்,

  • 1998 இல் பம்பா பிரசஸ்தி [6]
  • 2001 இல் பத்மஸ்ரீ [7]
  • 2003 இல் கோரூர் விருது [8]
  • 2008 இல் கர்நாடக ரத்னா போன்ற விருதுகளையும் பெற்றார். [9]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "De. Ja. Gow. turns 100". The Hindu. 7 July 2015. http://www.thehindu.com/news/cities/bangalore/de-ja-gow-turns-100/article7393416.ece. பார்த்த நாள்: 30 May 2016. 
  2. "Javare Gowda goes on dawn-to-dusk fast". The Hindu. 30 May 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article3247070.ece. பார்த்த நாள்: 31 January 2006. 
  3. Dr Veena Bharathi (2015). Ordinary Feet, Extra-Ordinary Feat. Vij Books India Pvt Ltd.. பக். 47–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789384318789. https://books.google.com/books?id=yg-qCQAAQBAJ&pg=PA47&dq=javare+gowda&hl=en&sa=X&ved=0ahUKEwjs7OifiIvNAhXEMo8KHSLJCoAQ6AEINzAF#v=onepage&q=javare%20gowda&f=false. 
  4. "Javare Gowda fasts for son Shashidhar Prasad's cause". தி இந்து. 26 August 2010. பார்க்கப்பட்ட நாள் 3 June 2016.
  5. "Kannada writer Javare Gowda laid to rest". தி இந்து. 1 June 2016. பார்க்கப்பட்ட நாள் 3 June 2016.
  6. Javare Gowda chosen for Pampa award பரணிடப்பட்டது 16 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  7. . 27 January 2001. http://www.thehindu.com/thehindu/2001/01/27/stories/0227000u.htm. 
  8. . 15 September 2003. http://www.thehindu.com/2003/09/15/stories/2003091502270500.htm. 
  9. . 16 January 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/karnataka-ratna-award-for-javare-gowda-veerendra-heggade/article684254.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவரே_கவுடா&oldid=2962375" இலிருந்து மீள்விக்கப்பட்டது