ஜன் லோக்பால் மசோதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜன் லோக்பால் மசோதா (Jan Lokpal Bill) அல்லது குடி மக்கள் காப்பு முன்வரைவு இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா ஆகும்[1][1] பரணிடப்பட்டது 2011-04-08 at the வந்தவழி இயந்திரம். அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், கிரண் பேடி மற்றும் சந்தோஷ் ஹெக்டே போன்ற சமூக ஆர்வலர்களால் முன்மொழியப்பட்டு இன்றளவில் அது சட்ட வரைவாகவே உள்ளது.

ஊழலுக்கு எதிரான குரல் மக்களிடமிருந்து எழவேண்டும் அதுவும் அதிகாரமிக்க அமைப்பாக ஒரு மக்கள் குழு அமைத்து அந்த குழுவின் மூலமாகவே ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்மொழியப்பட்ட சட்ட வரைவு நிலையில் உள்ள மசோதாதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமுன்வரைவில் காணும் முதன்மை கூறுகள்[தொகு]

  1. நடுவண் அரசு ஊழலெதிர்ப்பு அமைப்பாக "லோக்பால்" (மக்கள் குறைகேட்பு ஆணையம்) நிறுவிடவும் அவருக்குத் துணைபுரிய மாநில அளவில் "லோக் ஆயுக்தா" (மக்கள் குறைகேட்பு அதிகாரி) நிறுவிடவும் வகைசெய்தல்.
  2. இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவண் தலைமைச் செயலகம் போல, லோக்பால் இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைச் செயலரால் கண்காணிக்கப்படும். இதன்மூலம் இந்த அமைப்பு அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனது புலனாய்வுகளில் எந்த அமைச்சரவைகளின் இடையூறும் இன்றி செயல்படும்.
  3. இதன் உறுப்பினர்கள் ஒளிவற்ற பங்குபெறும் செயல்பாட்டின் மூலம், நீதிபதிகள், தூய்மையான வரலாறுடைய இந்திய அரசு அதிகாரிகள், பொதுநபர்கள் மற்றும் அரசியலமைப்பின் கீழான அதிகாரிகளிலிருந்து நியமிக்கப்படுவர்.
  4. தேர்வாணைக்குழு ஒன்று குறுக்கப்பட்ட பட்டியலில் உள்ளோரை, பின்னாளில் பொதுவில் கிடைக்கக்கூடிய ஒளிப்பதிவுகளுடன், நேர்முகத் தேர்வு காணுதல்.
  5. ஒவ்வொரு மாதமும் தனது இணையதளத்தில் லோக் ஆயுக்தா தன்கீழுள்ள வழக்குகளின் பட்டியல், சுருக்கமான விவரங்கள், எடுக்கப்பட்ட செயல்களின் வெளிப்பாடு அல்லது எடுக்கவிருக்கும் செயல்கள் என பதிப்பிக்க வேண்டும்.மேலும் கடந்த மாதத்தில் பெறப்பட்ட குறைகள், நடப்பு மாதத்தில் தீர்வானவை மற்றும் நிலுவையிலுள்ளவை என அறிக்கை வெளியிடவேண்டும்..
  6. ஒவ்வொரு குறை/வழக்கும் ஓராண்டுக்குள் புலானாய்வு செய்யப்படவேண்டும். குற்ற விசாரணைகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மொத்தமாக இரண்டாண்டுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.
  7. ஊழல் குற்றவாளியின் தண்டனையின் அங்கமாக அவரால் அரசுக்கு ஏற்பட்ட அனைத்து நட்டங்களையும் ஈடு கட்டுதல் அமைய வேண்டும்.
  8. ஏதேனும் அரசாங்க வேலை வரையறுக்கப்பட்ட காலக்கெடுவினுள் முடிக்கப்படாவிட்டால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது "லோக்பால்" நிதி அபராதங்கள் விதித்து குறைபட்டவருக்கு அதனை ஈடாக கொடுக்க வகை செய்தல்.
  9. லோக்பால் அதிகாரிகள் மீது ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக ஒரு மாதத்திற்குள் புலனாய்ந்து குற்றம் இருப்பின் இரண்டாவது மாதத்திற்குள் அவர் நீக்கப்பட வேண்டும்.
  10. தற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்புகளான நடுவண் விழிப்புணர்வு ஆணையம், துறைசார் விழிப்புணர்வு அதிகாரிகள் மற்றும் சிபிஐயின் ஊழல் எதிர்ப்புத்துறை ஆகியன "லோக்பால்" அமைப்போடு இணைக்கப்பட வேண்டும். இதன்மூலம் லோக்பாலுக்கு எந்த அதிகாரி,நீதிபதி அல்லது அரசியல்வாதி குறித்த குறையையும் தன்னிச்சையாகவும் முழுமையாகவும் புலனாய்ந்து தண்டனை வழங்கும் முழுமையான கட்டமைப்பும் அதிகாரமும் கிடைக்கும்.
  11. லோக்பாலிற்கு ஊழல் பற்றிய தகவல்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவிப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் வேண்டும்.

சட்ட முன்வரைவினை வடிக்கும் கூட்டுக்குழு[தொகு]

ஜன் லோக்பால் மசோதாவின் வரைவினை வடிக்கும் கூட்டுக்குழுவில் பத்து அங்கத்தினர்களில் சரிசமமாக அரசு உறுப்பினர்களும் குடிமக்கள் சார்பாளர்களும் பங்கெடுப்பர்.[2] ஏப்ரல் 8, 2011 அன்று இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இந்தக் கூட்டுக்குழு அமைப்பது குறித்தான அலுவல்முறை அறிவிப்பை இந்திய அரசிதழில், வெளியிட்டுள்ளது. இதன் நகலொன்றை இங்கே காணலாம்.

தலைவர்[தொகு]

கூட்டுக்குழுவின் தலைமை ஓர் அரசியல்வாதியிடமும் இணைத்தலைமை ஓர் மக்கள் சார்பு செயலாக்கவாதியிடமும் இருக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அரசியல் வெளியிலிருந்து பிரணப் முக்கர்ஜியும் குடிமக்கள் தரப்பிலிருந்து சாந்தி பூசணும் தலைவர்களாக இருப்பார்கள்.

அரசு சார்பாளர்கள்[தொகு]

ஐந்து ஆய அமைச்சர்கள் வரைவுக்குழுவில் பங்கேற்பார்கள். அவர்கள்:

  1. பிரணப் முக்கர்ஜி, இந்திய நிதி அமைச்சர், இணைத்தலைவர்(சாந்தி பூசணுடன்)
  2. ப. சிதம்பரம், உள்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்
  3. வீரப்ப மொய்லி, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்
  4. கபில் சிபல், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், குழு அங்கத்தினர்
  5. சல்மான் குர்சித், நீர்வளத்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்

குடிமக்கள் சார்பாளர்கள்[தொகு]

ஐந்து மாண்புமிகு சமூக சேவகர்கள் வரைவுக்குழுவில் பங்கேற்பார்கள். அவர்கள்:

  1. சாந்தி பூசண், முன்னாள் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், இணைத்தலைவர் (பிரணப் முக்கர்ஜியுடன்)
  2. அண்ணா அசாரே, சமூக போராளி, குழு அங்கத்தினர்
  3. பிரசாந்த் பூசண், வழக்கறிஞர், குழு அங்கத்தினர்
  4. என். சந்தோசு எக்டே, லோக் ஆயுக்தா (கர்நாடகா), குழு அங்கத்தினர்
  5. அரவிந்த் கெஜ்ரிவால், RTI போராளி, டில்லி முதலமைச்சர், குழு அங்கத்தினர்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பிடிஎஃப் வடிவில் ஜன்லோக்பால் சட்ட முன்வரைவு" (PDF). Archived from the original (PDF) on 2011-04-08. பார்க்கப்பட்ட நாள் 2011-04-08.
  2. http://lawmin.nic.in/bills/lokpal.pdf

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன்_லோக்பால்_மசோதா&oldid=3572943" இலிருந்து மீள்விக்கப்பட்டது