சோலைமலை நமசிவாயம்
சோலைமலை நமசிவாயம் Solamalay Namasivayam | |
---|---|
![]() | |
பிறப்பு | மே 6, 1929 சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | சிங்கப்பூரியர் |
கல்வி | பத்து சாலை தொடக்கப் பள்ளி கோலாலம்பூர், விக்டோரியா உயர்நிலைப் பள்ளி கோலாலம்பூர், சிங்கப்பூர் ஓவியக் கல்லூரி |
பணி | ஓவியர் |
அறியப்படுவது | உருவக ஓவியம், உருவம் வரைதல் |
சமயம் | இந்து |
சோலைமலை நமசிவாயம், (மலாய்: Solamalay Namasivayam) (சீனம்: 索拉马来那抹湿婆山药), மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் புகழ்பெற்று விளங்கும் ஓர் ஓவியர். உருவக ஓவியக் கலையில் சிறந்து விளங்கும் இவர், ’குழு 90’ எனும் ஓவியக் குழுவைச் சிங்கப்பூரில் தோற்றுவித்தவர்.[1] உருவக ஓவியத் துறையின் முன்னோடியாகவும் திகழ்கின்றார்.
வரலாறு[தொகு]
சோலைமலை நமசிவாயம், தமிழ் நாடு, சென்னையில், 1929-இல், குடும்பத்தில் மூத்த குழந்தையாகப் பிறந்தவர். அவருடன் பிறந்தவர்கள் 11 பேர். அவருடைய பெற்றோர் கட்டுமானத் துறையில் தொழிலாளர்களாக வேலை செய்தவர்கள். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது, 1931-இல் சென்னையில் இருந்து மலேசியா, கோலாலம்பூர் நகருக்கு வந்தார். அப்போது அவருடைய தந்தையார் மத்திய மின்வாரியத்தில் இயந்திரக் கைவினைஞராகச் சேவை செய்து வந்தார். கோலாலம்பூர், பத்து சாலை தொடக்கப் பள்ளியிலும், விக்டோரியா உயர்நிலைப் பள்ளியிலும் தன் கல்வியைத் தொடர்ந்தார்.[2]
விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில், யோங் தாய் எனும் ஆசிரியரிடம் இருந்து ஓவியக் கலையின் நுணுக்கங்களை அறிந்து கொண்டார்.[3]
ஜப்பானியர் காலம்[தொகு]
இரண்டாம் உலகப் போரின் போது, மலாயாவை ஜப்பானியர் ஆட்சி செய்த காலத்தில், சோலைமலை நமசிவாயத்தின் கல்வி தடைப்பட்டது. அவருடைய தந்தையார் பினாங்கு, பட்டர்வர்த் நகரத்திற்கு வேலை மாற்றம் செய்யப் பட்டார். அதனால், சோலைமலையும் ஒரு ஜப்பானிய பள்ளியில் கல்வியைத் தொடர வேண்டி வந்தது. அதன் பின்னர், 1943-இல், அவருக்கு 14 வயதாக இருக்கும் போது சயாம் மரண இரயில்பாதை நிர்மாணிப்பிற்கு அனுப்பப் பட்டார்.[2]
1945-இல், இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவிற்கு வந்ததும், சோலைமலை நமசிவாயம் மறுபடியும் விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் தன்னுடைய கல்வியைத் தொடர்ந்தார். அந்தக் காலகட்டத்தில், ஓவியக் கலையில் அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. நீர் வண்ண ஓவியங்களில் தீவிரமான ஈடுபாட்டைக் காட்டினார். 1947-இல் சீனியர் கேம்பிரிட்சு தேர்வில் தேர்வு பெற்றார். பின்னர், சோக்பின் பிரெஞ்சு நிறுவனத்தில் ஆய்வக உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.[4]
ஆஸ்திரேலியாவில் சிறப்புப் பயிற்சிகள்[தொகு]
1950-இல், தன் குடும்பத்தாருடன் சென்னைக்குத் திரும்பிய சோலைமலை நமசிவாயம், குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்கி திருமணம் செய்து கொண்டார். மறு ஆண்டு தன் மனைவியுடன் சிங்கப்பூருக்குத் திரும்பிய அவர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். தேர்ச்சி பெற்ற ஆசிரியரானார். சிங்கப்பூர் திரபல்கார் தொடக்க நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகத் தன் சேவையைத் தொடங்கிய அவர், தன்னுடைய மாணவர்களை ஓவியக் கலையில் சிறப்புறச் செய்தார். பின்னர், கொழும்பு கல்வித் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று கான்பரா, மெல்பேர்ண் நகர்களில் ஓவியக் கலையில் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார்.[5]
சிங்கப்பூருக்கு திரும்பியதும், கிரசெண்ட் பெண்கள் பள்ளி, கான் எங் செங் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் ஓவிய ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்னர், சிங்கப்பூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1987-இல் லாசாலே ஓவியக் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணி உயர்வு பெற்றார்.[6]
தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான சோலைமலை நமசிவாயம், சிங்கப்பூரில் உருவக ஓவியத் துறையின் முன்னோடியாகப் போற்றிப் புகழப் படுகிறார்.[7]
சான்றுகள்[தொகு]
- ↑ Wai Hon, Chia (2008), "Group 90 and the art of the nude", NUspiration, Singapore, pp. 1–2
- ↑ 2.0 2.1 Tan, Nancy (1997), S. Namasivayam (transcript), accession, no: 001896 (reel 2), Singapore: National Archives, 24 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது, 16 December 2014 அன்று பார்க்கப்பட்டது
- ↑ Tan, Nancy (1997), S. Namasivayam (transcript), accession, no: 001896 (reel 4), Singapore: National Archives, 1 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது, 16 December 2014 அன்று பார்க்கப்பட்டது
- ↑ Tan, Nancy (1997), S. Namasivayam (transcript), accession, no: 001896 (reel 3), Singapore: National Archives, 1 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது, 16 December 2014 அன்று பார்க்கப்பட்டது
- ↑ Tan, Nancy (1997), S. Namasivayam (transcript), accession, no: 001896 (reel 6), Singapore: National Archives, 1 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது, 17 December 2014 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "Five teachers to leave for Sydney". The Straits Times. 10 March 1957. p. 9.
- ↑ Tan, Nancy (1997), S. Namasivayam (transcript), accession, no: 001896 (reel 1), Singapore: National Archives, 1 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது, 17 December 2014 அன்று பார்க்கப்பட்டது