சோனென்புளூம் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு ஆப்பிரிக்கக் களத்தில் ரோம்மல்

சோனென்புளூம் நடவடிக்கை (Operation Sunflower, இடாய்ச்சு: Unternehmen Sonnenblume) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு படை நகர்த்தல் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் தோல்வியடையும் நிலையில் இருந்த பாசிச இத்தாலியின் படைகளுக்கு உதவ நாசி ஜெர்மனியின் ஆப்பிரிக்கா கோர் படைப்பிரிவு தளபதி எர்வின் ரோம்மல் தலைமையில் கடல் வழியாக வடக்கு ஆப்பிரிக்காவுக்கு வந்து சேர்ந்தது.

அச்சு நாடுகளில் ஒன்றான இத்தாலி செப்டம்பர் 1940ல் நேச நாடுகளுடன் நட்புறவுடன் இருந்த எகிப்து மீது படையெடுத்தது. இதற்கு பிரிட்டானியப் படைகள் தலைமையிலான நேச நாட்டுப் படைகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இத்தாலி நிலைகுலைந்தது. இத்தாலியின் வடக்கு ஆப்பிரிக்க காலனியாகிய லிபியாவின் பெரும் பகுதிகளை நேச நாட்டுப் படைகள் கைப்பற்றின. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி தனக்கு உதவுமாறு இட்லரிடம் முறையிட்டார். இட்லரும் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் இத்தாலிக்கு உதவ ஜெர்மானியப் படைப்பிரிவுகளை அனுப்பினார். பெப்ரவரி 6, 1941ல் இத்தாலியின் நேப்பிள்ஸ் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ஜெர்மானியப் படைகள் பெப்ரவரி 11ம் தேதி லிபியாவை அடைந்தன. இந்த படை நகர்த்தல் நிகழ்வுக்கு சோனென்புளூம் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இந்நடவடிக்கை மேலும் சில மாதங்கள் நீடித்து கூடுதல் படைப்பிரிவுகள் லிபியாவுக்கு அனுப்பபட்டன. இதில் 5வது இலகுரக டிவிசன், 21வது பான்சர் (கவச) டிவிசன், 15வது கவச டிவிசன் ஆகியவை இடம் பெற்றிருந்தன. ஆப்பிரிக்கா கோர் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ஜெர்மானியப் படைக்குத் தளபதியாக புகழ்பெற்ற ஜெர்மானியத் தளபதி ரோம்மல் அனுப்பபட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனென்புளூம்_நடவடிக்கை&oldid=1496586" இலிருந்து மீள்விக்கப்பட்டது