பொன்னம்பலம் இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேர் பொன் இராமநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேர் பொன்னம்பலம் இராமநாதன்
Sir Ponnambalam Ramanathan
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்
பதவியில்
1879–1892
பதவியில்
1922–1924
இலங்கை அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1892–1902
முன்னையவர்சேர் சார்ல்ஸ் பீட்டர் லயார்ட்
பின்னவர்ஜேம்ஸ் பெரெய்ரா
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் இலங்கை கல்விமான்களின் பிரதிநிதி
பதவியில்
1911–1921
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் வலிகாமம் வடக்கு பிரதிநிதி
பதவியில்
1924–1930
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1851-04-16)ஏப்ரல் 16, 1851
இறப்புநவம்பர் 26, 1930(1930-11-26) (அகவை 79)
தேசியம்இலங்கைத் தமிழர்
உறவுகள்சேர் பொன்னம்பலம் அருணாசலம்
முன்னாள் கல்லூரிரோயல் கல்லூரி, கொழும்பு
சென்னை பிரெசிடென்சி கல்லூரி
வேலைஅரசியல்வாதி, கிரவுன் கவுன்சில்
தொழில்வழக்குரைஞர்

சேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராகக் கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியர் கல்லூரி) கற்றார். 13 ஆவது வயதில், மாநிலக் கல்லூரியில் கல்வி கற்பதற்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.

அரசியல் சேவை[தொகு]

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1897ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50வது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக செல்லப் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே தெரிவுச்செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்குப் பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.

சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாற்றில்[தொகு]

1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது.[1] இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துகொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது.

இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.

பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர்.

சமூக சேவை[தொகு]

இராமநாதனால் உடுவிலில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியின் இன்றைய தோற்றம்

இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.

சமய சேவை[தொகு]

அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார்.

தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.

1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார்.

யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காகக் கொழும்பு காலிமுகத் திடலில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது உருவச்சிலை 1946 நவம்பர் 26 இல் ஆளுநர் என்றி மொங்க்-மேசன் மூரினால் திறந்து வைக்கப்பட்டது.[2]

விமர்சனங்கள்[தொகு]

இலங்கையில் பெண்கள் வாக்குரிமை வழங்குவதை பொன். இராமநாதன் கடுமையாக எதிர்த்தார். இது தொடர்பாக இவர் கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்துகின்றார்.[3]

அவரது காலத்தில் இலங்கையில் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்த இராமநாதன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது எனவும், படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தேச வழமைச் சட்டத்தை முன்னிறுத்தி டொனமூர் ஆணைக் குழு முன் வாதிட்டார்.[4]

இவரது நூல்கள்[தொகு]

  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898)
  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902)
  • The Culture of the Soul Among Western Nations (1906)
  • The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905)
  • On Faith or Love of God (1897)
  • The Gospel of Jesus According to St. Matthew, as Interpreted to R. L. Harrison by the Light of the Godly Experience of Sri Paránanda
  • The Judgments of the Supreme Court of Judicature: And of the High Court of Appeal of the Island of Ceylon, Delivered Between the Years 1820-1833
  • Riots and martial law in Ceylon, 1915
  • Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon...: 1860, 1861 and 1862. 1880
  • The Spirit of the East Contrasted with the Spirit of the West: Being a Lecture Delivered ... Before the Brooklyn Institute of Arts and Sciences at Its Open Meeting of the Season of 1905-6
  • Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon: During the Years 1860, 1861 and 1862 : with an Appendix Containing Cases Decided During that Period by the Judicial Committee of the Privy Council on Appeal from the Supreme Court of Ceylon
  • On the Ethnology of the "Moors" of Ceylon
  • பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914)
  • திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919)
  • ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம்

தேர்தல் வரலாறு[தொகு]

பொன்னம்பலம் இராமநாதனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1911 சட்டவாக்கப் பேரவை[5][6][7] படித்த இலங்கையர் 1,645 தெரிவு
1917 சட்டவாக்கப் பேரவை[8] படித்த இலங்கையர் 1,704 தெரிவு
1924 சட்டவாக்கப் பேரவை வட மாகாணம் (வடக்கு) தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sangam.org/articles/view2/?uid=1068
  2. "Principal Ceylon Events, 1946". Ferguson's Ceylon Directory, Colombo. 1947. 
  3. காலந்தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்!-(திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றி சில குறிப்புகள்-: லெனின் மதிவானம்
  4. சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.
  5. Wisumperuma, Dhanesh (11 December 2011). "Cast(e) in favour". The Nation (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141023063515/http://www.nation.lk/2011/12/11/eyefea6.htm. 
  6. Ramanathan, P. (2 January 2000). "One of the "greatest" Ceylonese". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/000102/sup6.html. 
  7. Sabaratnam, T.. "Chapter 16: The Arunachalam Factor". The Sri Lankan Tamil Struggle. http://sangam.org/2010/11/Tamil_Struggle_16.php. 
  8. Vythilingam 1977, ப. 361.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னம்பலம்_இராமநாதன்&oldid=3574332" இலிருந்து மீள்விக்கப்பட்டது