செயகாதவன்
| செயகாதவன் Jayakatwang Śrī Jayakatyĕng Bupati Gelanggelang | |||||
|---|---|---|---|---|---|
| கேடிரி அரசர் | |||||
| ஆட்சிக்காலம் | 1292–1293 | ||||
| பிறப்பு | கிழக்கு ஜாவா | ||||
| இறப்பு | c.1293 ஊஜோங் காலோ, சுராபாயா, கிழக்கு ஜாவா, இந்தோனேசியா | ||||
| குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
| Dynasty | ஈசான அரச மரபு | ||||
| மதம் | இந்து பௌத்தம் | ||||
செயகாதவன் அல்லது பூபதி கேலாங் கேலாங் (ஆங்கிலம்: Jayakatwang அல்லது Bupati Gelanggelan; இந்தோனேசியம்: Śrī Jayakatyĕng) (இறப்பு: 1293) என்பவர் இந்தோனேசியா, கிழக்கு ஜாவா, சுராபாயாவில் இருந்த கேடிரி இராச்சியத்தின் (Kingdom of Kediri) குறுகிய கால மன்னராக ஆட்சி செய்தவர் ஆவார். கேடிரி இராச்சியத்தின் இரண்டாவது குறுகிய கால இராச்சியம்; கேலாங்-கேலாங் இராச்சியம் (Gelang-Gelang Kingdom) என்றும் அழைக்கப்பட்டது.
சிங்காசாரியின் கடைசி மன்னரான கீர்த்தநகரன் என்பவரை வீழ்த்திய பிறகு செயகாதவன் ஆட்சிக்கு வந்தார்.[1] இறுதியில், ஜாவா தீவை ஆக்கிரமித்த மங்கோலிய யுவான் அரச மரபின் துருப்புக்களைப் பயன்படுத்திக் கொண்ட கீர்த்தநகரனின் மருமகன் ராதன் விஜயனால் செயகாதவன் தோற்கடிக்கப்பட்டார்.
பின்னர் ராதன் விஜயன், மங்கோலியர்களுக்கு எதிராகப் போரிட்டார்.[2]:199 அதன் பின்னர் ஜாவா தீவை மையமாகக் கொண்டு, ஒரு பெரிய பேரரசான மஜபாகித் பேரரசையும் நிறுவினார்.
பின்னணி
[தொகு]1271-ஆம் ஆண்டு முதல், செயகாதவன் கேடிரி இராச்சியத்தின் ஆளுநராக இருந்தார்.[1] அந்தக் கட்டத்தில் கேடிரி அரசு, சிங்காசாரியின் அடிமை மாநிலமாக இருந்தது.[3] 1222-ஆம் ஆண்டு கென் அரோக் என்பவரால் தூக்கியெறியப்படும் வரை, கேடிரி அரசு என்பது ஜாவாவில் ஆதிக்கம் செலுத்தும் இராச்சியமாக இருந்தது. கென் அரோக் என்பவர் சிங்காசாரியின் முதல் அரசர் ஆவார்.
செயகாதவன் அநேகமாக கேதிரி அரச மரபின் வழித்தோன்றலாக இருக்கலாம்.[4] அந்த வகையில் அவர், ஜாவாவின் அதிகாரத்தையும் ஆட்சியையும் கைப்பற்றி தனது அரச மரபை மீட்டெடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டிருந்தார்.
கேடிரி, சிங்காசாரிக்கு மேற்கே சுமார் 80 கி.மீ தொலைவில் பிரந்தாஸ் ஆற்றங்கரையில் வளமான அரிசி உற்பத்தி செய்யும் பகுதியில் அமைந்து உள்ளது. ஆனாலும் அருச்சுனோ-வெலிராங் மலை (Arjuno-Welirang) மற்றும் காவி மலை (Mount Kawi) ஆகிய மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
சிங்காசாரிக்கு எதிராக கிளர்ச்சி
[தொகு]கீர்த்தநகரன், சிங்காசாரியின் ஐந்தாவது ஆட்சியாளர்; மற்றும் முந்தைய அரசரான விசுணுவருதனாவின் (Wisnuwardhana) (ஆட்சி: 1248–1268) மகன் ஆவார். கீர்த்தநகரன் 1254-ஆம் ஆண்டு முதல் சிங்காசாரியின் அதிகாரத்தை மிகத் திறமையுடன் தக்க வைத்துக் கொண்டார். 1268-இல் அவரின் தந்தை விசுணுவருதனா காலமானார். அதன் பின்னர் கீர்த்தநகரன், அதிகாரப்பூர்வமாக ஆட்சிக்கு வந்தார்.[5]:188
சீனாவில், சொங் அரசமரபு ஆட்சிக்கு வந்த பிறகு, மங்கோலிய யுவான் அரசமரபு, தென்கிழக்கு ஆசியாவில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது. 1289-ஆம் ஆண்டில், செங்கிஸ் கானின் பேரனான குப்லாய் கான், தனது தூதர்களைச் ஜாவாவிற்கு அனுப்பி, மரியாதை நிமித்தம் யுவான் அரசமரபிற்கு அடிபணியுமாறு கோரினார். கீர்த்தநகரன் இந்தக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். சீனத் தூதர்களைக் கைது செய்து அவர்களில் ஒருவரின் முகத்தில் முத்திரை குத்தி; காதுகளை வெட்டி; சிதைந்த முகத்துடன் சீனாவிற்குத் திருப்பி அனுப்பி வைத்தார்.[6]

மங்கோலியர்களுடன் மோதல்
[தொகு]

மங்கோலியர்கள் தன்னைத் தண்டிக்க ஓர் இராணுவப் படையை அனுப்புவார்கள் என்பதை உணர்ந்து கொண்ட கீர்த்தநகரன் தனது அதிகாரத்தை வலுப்படுத்த முயன்றார். 1292-ஆம் ஆண்டு கீர்த்தநகரனைத் தண்டிக்க, தொலைதூர பூமத்திய ரேகை தீவுகளுக்கு எதிராக ஒரு வலுவான கடற்படை பயணத்தைத் தொடங்க குப்லாய் கான் உத்தரவிட்டார்.[5]:198
இதற்கிடையில், ஜாவா முழுவதையும் கீர்த்தநகரன் தன் முழு ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துவிட்டார். ஆனாலும் மங்கோலிய கடற்படைகள் வருவதற்கு முன்பு, சிங்காசாரியில் எதிர்பாராத ஓர் அரசியல் திருப்பம் ஏற்பட்டது. அதுவே சிங்காசாரி அரசின் வரலாற்றை மாற்றி அமைத்த நிகழ்வு என்றும் சொல்லலாம். அந்தக் காலக்கட்டத்தில், கேடிரி இராச்சியத்தின் இளவரசரும், சிங்காசாரியின் மிகவும் சக்தி வாய்ந்த அடிமை ஆட்சியாளர்களில் ஒருவருமான செயகாதவன் (Jayakatwang) தன் தலைவர் கீர்த்தநகரனுக்கு எதிராகக் கலகம் செய்ய முடிவு செய்தார்.
ஜெயகாதவன் கிளர்ச்சி
[தொகு]அந்த நேரத்தில் கீர்த்தநகரனின் துருப்புக்கள் சுமாத்திராவில் ஜம்பி சுல்தானகத்திற்கு எதிராகப் போரில் ஈடுபட்டு இருந்தன. கீர்த்தநகரனின் இராணுவத்தின் பெரும்பகுதி சுமாத்திராவில் இருந்ததால் சிங்காசாரியின் பாதுகாப்பு பலவீனம் அடைந்த நிலையில் இருந்தது. செயகாதவன் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு கீர்த்தநகரனுக்கு எதிராக ஓர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடங்கினார்.[6]
செயகாதவன் முதற்கட்டமாக ஒரு பெரிய திடீர்த் தாக்குதலைத் தொடங்கினார். சிங்காசாரியின் தலைநகர் கூத்தாராஜா (Kutaraja) பாதுகாப்பற்ற நிலையில் சிக்கிக் கொண்டது. மலைப்பாங்கான தெற்குப் பகுதியிலிருந்து ஜெயகாதவன் தலைநகரைத் தாக்கினார்.[7] 1292 மே அல்லது சூன் மாதத்தில் சிங்காசாரியில் உள்ள கீர்த்தநகரனின் அரண்மனையில் இருந்த அரசவை உறுப்பினர்கள் பலருடன் கீர்த்தநகரனும் கொல்லப்பட்டார். பின்னர் செயகாதவன் தன்னை ஜாவாவின் ஆட்சியாளராகவும், மீட்டெடுக்கப்பட்ட கேடிரி இராச்சியத்தின் மன்னராகவும் அறிவித்துக் கொண்டார்.[5]:199
ராதன் விஜயன்
[தொகு]செயகாதவனின் தாக்குதலில் உயிர் தப்பிய கீர்த்தநகரனின் உறவினர்களில்; கீர்த்தநகரனின் மருமகன் ராதன் விஜயன் என்பவரும் ஒருவர் ஆவார். செயகாதவனின் தாக்குதலில் இருந்து தப்பித்த ராதன் விஜயன் மதுரா தீவுக்குச் தப்பிச் சென்றார். அங்கு அப்போதைய மதுரா தீவு ஆட்சியாளரான ஆரிய வீரராஜா (Aria Wiraraja) என்பவரிடம் ராதன் விஜயன்,அடைக்கலம் பெற்றார். ஆரிய வீரராஜாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, செயகாதவன் ராதன் விஜயனை மன்னித்தார். பின்னர் செயகாதவன், பிரந்தாஸ் கழிமுகத்தில் உள்ள தாரிக் காட்டில் (Tarik forest) ராதன் விஜயனுக்கு, ஒரு கிராமத்தை உருவாக்கும் அளவிற்கு நிலம் கொடுத்தார்.
பிரந்தாஸ் கழிமுகத்தில், ராதன் விஜயன் ஒரு புதிய குடியேற்றத்தை உருவாக்கினார். அந்தக் குடியேற்றம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, பின்னர் காலத்தில் மஜபாகித் எனும் மாபெரும் பேரரசாக மாறி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.[5]:199–200
குப்லாய் கான் படையெடுப்பு
[தொகு]1293-இல், கிழக்கு ஜாவாக்கு படையெடுத்து வந்த குப்லாய் கானின் ம்ங்கோலியப் படையில் 1000 கப்பல்களில் 20,000 - 30,000 வீரர்கள் இருந்தனர். ஒரு வருடத்திற்கு போதுமான உணவுப் பொருட்கள், ஆயுதத் தளவாடங்கள், மருந்து வகைகள் 500 கப்பல்களில் கொண்டுவரப்பட்டன.[8]
ம்ங்கோலியப் படையுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட ராதன் விஜயன், செயகாதவனின் ஆட்சியின் கீழிருந்த சிங்காசாரி அரசை முற்றுகையிட்டார். ராதன் விஜயனும் அவரது மங்கோலிய கூட்டணியும், சுராபாயா பிரந்தாஸ் கழிமுகத்தில் செயகாதவனின் கடற்படையைத் தோற்கடித்தனர். செயகாதவன் கைது செய்யப்பட்டு, பின்னர் மார்ச் 1293-இல் தூக்கிலிடப்பட்டார்.[1][2]:201
செயகாதவன் வீழ்ச்சிக்குப் பின்னர், எவரும் எதிர்பார்க்காத நிலையில் ராதன் விஜயன் ம்ங்கோலியப் படையைத் திருப்பித் தாக்கினார்.[5]:200–201
அந்தக் கட்டத்தில், தொலைதூரப் பயணத்தின் காரணமாக ம்ங்கோலியப் படையினர் பலகீனமாக இருந்தனர். தங்களுக்கு ஒத்துவராத காலநிலையாலும்; போர்க் காலத்தில் ஏற்பட்ட கொள்ளை நோய்களாலும்; ஏற்கனவே ஆற்றல் இழந்த நிலையில் வலி குன்றிப் போயிருந்த மங்கோலியப் படைகள்[6] ஜாவாவில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.[9] இதன்பின்னர், கர்த்தராயச செயவர்த்தனன் எனும் பெயருடன் ராதன் விஜயன், மஜபாகித் எனும் புதிய பேரரசின் மன்னராக முடிசூடிக் கொண்டார்.[5]:201,232-233
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Spuler, Bertold; F.R.C. Bagley (31 December 1981). The Muslim world : a historical survey, Part 4. Brill Archive. p. 244. ISBN 978-90-04-06196-5.
- 1 2 Coedès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
- ↑ Kipfer, Barbara Ann (2000). Encyclopedic dictionary of archaeology. Springer. p. 329. ISBN 978-0-306-46158-3.
- ↑ Poesponegoro, Marwati Djoened (1992). Sejarah nasional Indonesia: Jaman kuna. Balai Pustaka. p. 443. ISBN 978-979-407-408-4.
- 1 2 3 4 5 6 Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press.
- 1 2 3 Rossabi, Morris (1988). Khubilai Khan: His Life and Times. University of California Press.
- ↑ Irapta 2005, ப. 87.
- ↑ Grousset, Rene (1988), Empire of steppes, Wars in Japan, Indochina and Java, New Jersey: Rutgers University Press, p. 288, ISBN 0-8135-1304-9.
- ↑ "Beginning of the Mongol Collapse," Columbia University, [Asian Topics Online http://afe.easia.columbia.edu/mongols/china/china4_a.htm].
நூல்கள்
[தொகு]- Coedès, George (1968). The Indianized States of South-East Asia. University of Hawaii Press.
- Irapta, Angelina Chavez (2005). Introduction to Asia: History, Culture, and Civilization. Rex Bookstore, Inc.
- Kinney, Ann R.; Klokke, Marijke J.; Kieven, Lydia (2003). Worshiping Siva and Buddha: The Temple Art of East Java. University of Hawaii Press.
சான்றுகள்
[தொகு]- Willard A. Hanna (2004). Bali Chronicles. Periplus, Singapore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7946-0272-X.