செஞ்சந்தனம்
செஞ்சந்தனம் | |
---|---|
![]() | |
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தின் தலக்கோனா காட்டில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
துணைக்குடும்பம்: | Faboideae |
சிற்றினம்: | Dalbergieae |
பேரினம்: | ஒருசிறகி |
இனம்: | P. santalinus |
இருசொற் பெயரீடு | |
Pterocarpus santalinus இகலி |
செஞ்சந்தனம் அல்லது செம்மரம் (Pterocarpus santalinus; ஆங்கில மொழி: Red Sandalwood; தெலுங்கு: రక్తచందనము, (ரக்தசந்தனமு); (சிங்களம்: රතු හඳුන්, (ரது ஹந்துன்)) எனப்படுவது இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒருசிறகித் தாவர இனமொன்றாகும்.[1] இது தமிழில் செம்மரம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.[2] இது தென்னிந்தியாவில் தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையில் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் மாத்திரமே காணப்படுகிறது.[3][4] அத்துடன் இலங்கை, பாக்கித்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் செஞ்சந்தனம் வளர்கிறது.
இது நன்கு ஒளி தேவைப்படக்கூடியதான, 8 மீ உயரம் வரை வளரும் சிறிய தாவரம் ஒன்றாகும். இதன் தண்டு 50-150 செமீ விட்டம் வரை தடிக்கக்கூடியது. கன்றாக இருக்கும் போது விரைவாக வளரும் இது, பசளை குறைந்த மண்ணிலாயினும் மூன்றாண்டுகள் ஆகும் போதே 5 மீ உயரத்தை எட்டிவிடும். செஞ்சந்தன மரங்கள் பனியைத் தாங்குவதில்லை. வெப்பநிலை -1 °C இலும் குறைவடையும் போது இது செத்துவிடுவதுண்டு. எதிரடுக்குகளாகவும் மும்மூன்று இலைகளாகவும் காணப்படும் இதன் இலைகள் 3-9 செமீ வரை வளரக்கூடியன. செஞ்சந்தனப் பூக்கள் சிறு சிறு கொத்துக்களாகவே தோன்றும். இதன் பழங்கள் 6-9 செமீ நீளமான சிரட்டைகளுள் ஒன்று அல்லது இரண்டு விதைகளைக் கொண்டிருக்கும்.[5][6][7]
பயன்பாடு[தொகு]
செஞ்சந்தனக் கட்டைகள் வரலாற்றுக் காலம் முழுவதும் சீனாவில் மிக மதிப்புள்ளவையாக இருந்துள்ளன. சீன மொழியில் சித்தான் (紫檀) என அழைக்கப்படும் இது மிங் மற்றும் கிங் அரச மரபுகளின் ஆட்சிக் காலங்களில் பெரிதும் மதிக்கப்பட்டது. அக்காலத்திற் சீனாவிற் செய்யப்பட்ட செஞ்சந்தனத் தளவாடங்கள் மேலை நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கப்பட்டன[4]. செஞ்சந்தனம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே மிகப் பெறுமதியான மரங்களுள் ஒன்றாகத் திகழ்ந்துள்ளது. சபஃ (ஷீபா) நாட்டின் அரசி பல்கீஸ் என்பவரால் சுலைமான் மன்னருக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளிலும் சந்தனக் கட்டைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது[8]. செஞ்சந்தனத்தின் விளைச்சல் குறைவும் அரியதாயிருப்பதும் காரணமாக, இதனாற் செய்யப்பட்ட தளவாடங்களைக் காண்பது மிகக் கடினம் என்பது மாத்திரமன்றி, அவ்வாறானவை மிகப் பெறுமதி கூடியவையாகவும் உள்ளன[8]. 17 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் இத்தாவரம் மிகவும் அருகிவிட்டிருந்தமை காரணமாக, செஞ்சந்தனத்தாற் செய்யப்பட்ட தளவாடங்கள் கிங் அரச மரபின் பேரரசு இல்லங்களுக்கு மாத்திரமே சொந்தமாகக் கொள்ளத் தக்கவாறு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
செஞ்சந்தனம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மிக உன்னதமான ஒன்றாகும். இதனாற் பெறப்படும் எண்ணெய் நறுமணம் மிக்கதும் பயன் மிக்கதும் ஆகும். செஞ்சந்தன எண்ணெய் மருந்துக்காக மாத்திரமன்றி அத்தர் வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது[4].
செம்மரத்தால் சிலைகள், மரப்பாச்சி பொம்மைகள், தேர்ச் சிற்பங்கள், உண்கலத் தட்டுகள் முதலானவை செய்யப்படுகின்றன. இச்செம்மரங்கள் அணுக்கதிர் வீச்சை தடுக்கும் வல்லமை[9] உள்ளதாகக் கருதப்படுவதால் அடிக்கடி கடத்தப்படுகின்றது.[9][10][11][12][13][14]
செஞ்சந்தனத் தரம் பிரித்தல்[தொகு]

செஞ்சந்தன மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 750 மீ உயரமாகவுள்ள கரிய களிமண் நிலத்திலேயே வளர்கின்றன. ஓரளவு உலர்ந்த காலநிலையே இவற்றின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. செஞ்சந்தனக் கட்டைகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அலை அலையான வடிவங்கள் காணப்படும். கூடுதலான அலைவடிவங்களைக் கொண்ட செஞ்சந்தனக் கட்டைகள் "அ" தரத்தினவாக மதிப்பிடப்படுகின்றன. செஞ்சந்தனக் கட்டைகளின் அலைவடிவங்கள் கூடும்போது அவற்றின் தரமும் பெறுமதியும் மிகக் கூடுதலாகும்.
காப்புநிலை[தொகு]
கட்டைகளுக்காக செஞ்சந்தன மரங்கள் கூடுதலாக வெட்டப்படுகின்றமை காரணமாக இது ஐயுசிஎன் செம்பட்டியலில் அருகிவிட்ட இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[15]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ International Legume Database & Information Service: Pterocarpus santalinus
- ↑ "அப்படி என்னதான் இருக்கிறது செம்மரத்தில்?". கட்டுரை. தி இந்து தமிழ். 10 அக்டோபர் 2015. 20 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "செஞ்சந்தனம் அற்றுப்போன இனமாக மாறிவிடும் சாத்தியம் பற்றிய IBNlive.com தளத்தின் கட்டுரை". 2009-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 4.2 http://www.chinese-furniture.com/cgi-bin/ccf.cgi?stt=stp&pgn=newsletter_archive/newsletter_2.html&id= Chinese Furniture.com newsletter; Volume 1, Number 2; Accessed 2007-04-05
- ↑ Herbalcureindia: செஞ்சந்தனம் பரணிடப்பட்டது 2010-03-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ FAO Ecocrop: செஞ்சந்தனம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Auroville: அரித்துச் சென்ற மண்ணை மீளமைப்பதன் மூலம் தரிசு நிலங்களை மீட்டுருவாக்கல் (pdf கோப்பு) பரணிடப்பட்டது 2007-06-23 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 8.0 8.1 http://www.wctg.net/zitan.html பரணிடப்பட்டது 2007-05-18 at the வந்தவழி இயந்திரம்; Accessed 2007-04-06
- ↑ 9.0 9.1 "செம்மரத்திற்கு அணுக்கதிர் வீச்சை தடுக்கும் வல்லமை : இலங்கைக்கு கடத்தல் அதிகரிப்பு". 2012-04-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கரகாட்டக்காரி அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்பில் செம்மரம் கடத்தல்". 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "செம்மரங்களை கடத்த, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவிற்குச் சென்று, போலீசாரிடம் சிக்கி உயிரை இழந்து வருகின்றனர்". 9 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழகத்தை சேர்ந்த 230 செம்மரம் வெட்டும் தொழிலாளர்கள் கைது". 9 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "பூண்டி காப்புக்காட்டில் செம்மரம் கடத்தல் கும்பல் சிக்கியது 2 வேன், ஆயுதங்கள் பறிமுதல்". 2021-07-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "செம்மரம் கடத்தல்". 2014-06-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ [1]