செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா

பிறப்பு (1906-08-25)ஆகத்து 25, 1906
செங்கோட்டை,
திருவிதாங்கூர் சமஸ்தானம்
இறப்பு திசம்பர் 2, 1933(1933-12-02) (அகவை 27)
சென்னை,
இந்தியா
தொழில் மேடை நடிகர், பாடகர்
துணைவர் கிட்டம்மாள்(1923-1925)

கே. பி. சுந்தராம்பாள் (1927-1933)

எஸ். ஜி. கிட்டப்பா (S. G. Kittappa) என்று அழைக்கப்பட்ட செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (25 ஆகத்து 1906 – 2 திசம்பர் 1933) திரைப்படக் காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு செவ்வியல் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் திரைப்பட நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கிட்டப்பா செங்கோட்டையில் பிறந்தவர். இயற்பெயர் இராமகிருஷ்ணன். அப்பொழுது செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி அம்மாள். இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். அதுவே கிட்டப்பா என்ற பெயராக நிலைத்து விட்டது. குடும்பத்தின் வறுமையினால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும் நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. மிகச் சிறிய வயதிலேயே நாடகங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்தார். இவர் 6 -ஆம் வயதில் முதன்முதல் மேடையேறினார். தனது 8-ஆவது வயதில் சிலோனில் நடைபெற்ற நாடகங்களில் நடித்தார். அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு இவரது கலைத்திறமையைப் பாராட்டித் தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப் படுத்தியது. பாடகியாக வளர்ந்து கொண்டிருந்த கே. பி. சுந்தராம்பாளுக்கும் இவருக்கும் 1927இல் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் காதல் திருமணமாகும். திருமணத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து நடித்த பல நாடகங்கள் அமோகவெற்றி பெற்றன. ஓயாத உழைப்பே இவரது உடல் நலத்துக்குக் கேடாக அமைந்தது. திருவாரூரில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து இவரது உயிர் பிரிந்தது. 1933இல் இவர் இறந்தபோது இவருக்கு வயது 28தான்.[1][2]

புகழ்பெற்ற பாடல்கள்[தொகு]

செ.க.கிட்டப்பா பாடிய பல்வேறு பாடல்களில் புகழ்பெற்ற பாடல்கள் சில பின்வருமாறு:[3]

  1. அன்றொருநாள் குட்டி அருஞ்சிறையிலிட்டேன் நான்

மேற்கோள்கள்[தொகு]

  1. N. Rajagopalan (1992). Another Garland: Biographical Dictionary of Carnatic Composers & Musicians, Bopok II. Carnatic Classicals. பக். 302 - 302. https://archive.org/details/anothergarlandbo014528mbp. 
  2. Biswajit Sinha (2007). "S. G. Kittappa". South Indian theatre. Raj Publications. பக். 782. ISBN 8186208542, ISBN 9788186208540. 
  3. சாரு நிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2008,

வெளி இணைப்புகள்[தொகு]