சு. அறிவுக்கரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. அறிவுக்கரசு
செயலவைத் தலைவர்,
திராவிடர் கழகம்
பதவியில்
> 11 மார்ச் 2014 (?) – 22 சனவரி 2024
தலைவர்கி. வீரமணி
பின்னவர்ஆ. வீரமர்த்தினி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 நவம்பர் 1940
கடலூர், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு22 சனவரி 2024(2024-01-22) (அகவை 83)
கடலூர், தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
அரசியல் கட்சி திராவிடர் கழகம்
உறவுகள்மருமகன்கள், பெயரக் குழந்தைகள்
பிள்ளைகள்மணிநிலவன் (மகன்)
பெற்றோர்(s)தையல் நாயகி (தாய்)
சுப்பிரமணியன் (தந்தை)
முன்னாள் கல்லூரிஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் (முதுகலை சமூகவியல், ஆய்வியல் நிறைஞர்)

சு. அறிவுக்கரசு (1 நவம்பர் 1940 - 22 சனவரி 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயல்பாட்டாளர், எழுத்தாளர், மற்றும் பேச்சாளர் ஆவார். திராவிடர் கழகத்தின் (தி.க.) செயலவைத் தலைவராகத் தன் மறைவு வரை பணியாற்றினார்.

தொடக்க வாழ்க்கை[தொகு]

அறிவுக்கரசு கடலூரில் 1 நவம்பர் 1940 அன்று தையல் நாயகி - சுப்பிரமணியன் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை, சுயமரியாதைக் கொள்கைளில் பற்றுக் கொண்டு வாழ்ந்தவர்.

பள்ளிக் கல்வியைக் கடலூரில் பயின்ற அறிவுக்கரசு சமூகவியலில் முதுகலைப் பட்டத்தையும், எம்.பில்.என்னும் ஆய்வுப் பட்டத்தையும் (அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றபின்) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

இவர் இணையர் ரஞ்சிதம், 2003-இல் காலமானார்.[1] இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.[1]

அரசுப் பணி[தொகு]

இளநிலை எழுத்தர் என்னும் தொடக்க நிலைப் பதவியிலிருந்து திட்ட அலுவலக ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், பொறுப்பு மாவட்ட ஆட்சியர்[1] என்னும் உயர் பதவிகள் வரை (கெசட் பதவி) உயர்ந்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் பொதுச் செயலாளராகவும் மாநிலத் தலைவராகவும் இருந்தார். இச்சங்கத்தின் சார்பாக வெளிவந்த 'பொது ஊழியன்' என்னும் இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார்.

இயக்கப்பணி[தொகு]

பொது ஊழியன், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய இதழ்களில் பகுத்தறிவுக் கருத்துகளையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் எழுதினார். சர்வாகான், மதிமன்னன், அரசு, கட்டியக்காரன் பாடினி செங்கோ ஆதிரை அனிச்சம் ஆகிய புனைப் பெயர்களில் எழுதினார்.

பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் (தி.க.) ஆகிய அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றும் மேடைகளில் இயக்கக் கொள்கைகளைப் பரப்புரை செய்தார். தம் இளைய மகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் கொள்கை நோக்கில் செய்து வைத்தார். தம் பிள்ளைகளுக்கும் பெயரப் பிள்ளைகளுக்கும் தூயத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டியுனார்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு (தி.மு.க.) ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார்.

எழுதிய நூல்கள்[தொகு]

இவர், 37 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • பெரியார் பன்முகம்
  • பெரியார் மானுடம்
  • பெண்
  • அறிவோம் இவற்றை
  • இந்து ஆத்மா நாம்
  • தென்றல்ல புயல்
  • புராணங்கள் 18+1
  • அச்சம் + அறியாமை = கடவுள்
  • அம்பேத்கர் வாழ்வும் பாடமும்
  • அவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்
  • முட்டையும் தட்டையும்
  • உலகப் பகுத்தறிவாளர்கள்
  • ஆலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்
  • திராவிடர் கழகம் கட்சி அல்ல புரட்சி இயக்கமே
  • இந்து மாயை
  • அதற்கு வயது இதுவன்று
  • நீதிக்கட்சியும், சமூக நீதியும் (2024)

மறைவும் பின்நிகழ்வுகளும்[தொகு]

கடலூரில் வாழ்ந்துவந்த அறிவுக்கரசு, 22 சனவரி 2024 அன்று தன் 84-ஆம் அகவையில் காலமானார்.[1][2]

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 2 அன்று தி.க. செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி தேர்வானார்.[3]

புகழ்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம், அறிவுக்கரசுக்கு மதிப்புறு முனைவர் (Doctor of Literature) பட்டத்தை 2022ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது.[1]

உசாத்துணை[தொகு]

சு.அறிவுக்கரசு பவழ விழா மலர் , வெளியீடு: அறிவகம் 66,மின் நகர் திருப்பாதிரிப்புலியூர் கடலூர்-2

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 https://www.viduthalai.page/2024/02/blog-post_30.html. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. Venkat Raman. "Subramanian Arivukkarasu, a bastion of equity passes away".
  3. "திராவிடர் கழக செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார் – தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!". ' 'விடுதலை' '. 3 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._அறிவுக்கரசு&oldid=3930012" இலிருந்து மீள்விக்கப்பட்டது