சுவாதி கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாதி கொலை வழக்கு என்பது 24 சூன் 2016 அன்று, சென்னை நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையத்தில் சுவாதி எனும் பெண்மணி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கினைக் குறிக்கும்.[1]

கொலை விவரம்[தொகு]

சென்னையிலுள்ள இன்போசிசு தகவல் தொழினுட்ப நிறுவன ஊழியரான சுவாதி, நாள்தோறும் நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையத்தில் புறநகர் தொடருந்தில் ஏறி பணிக்கு சென்றுவரும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார். சூன் 24 அன்று காலை 6 மணிவாக்கில் தொடருந்திற்காக காத்துக் கொண்டிருந்த வேளையில், இளவயது கொலையாளி ஒருவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலையாளி விவரம்[தொகு]

சூலை 1, 2016 இரவு செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் எனும் சிற்றூரில் 24 அகவையுடைய இராம்குமார் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டார். கைதினைத் தவிர்க்க குற்றவாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் காவற்துறையால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[2][3]

கொலைக்கான காரணம்[தொகு]

கொலைக்கான காரணத்தை தமிழக காவற்துறை இதுவரை கண்டறியப்படவில்லை.

புலனாய்வு விவரம்[தொகு]

சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துகளை அடுத்து, புலனாய்வு செய்யும் பொறுப்பு இரயில்வே காவற்துறையிடமிருந்து சென்னை நகர காவற்துறைக்கு முறைப்படி மாற்றப்பட்டது.[4]

பாதுகாப்பு குறித்தான கண்டன விமர்சனங்கள்[தொகு]

பெருமளவில் மக்கள் கூடும் ஒரு தொடருந்து நிலையத்தில் கண்காணிப்புக் காமிராக்கள் அமைக்கப்படாதிருந்தது குறித்து குமுகாயத்தின் பல்வேறு அமைப்புகள் தமது கண்டன விமர்சனங்களை தெரிவித்தன.[5]

பொதுமக்களின் செயற்பாடுகள் குறித்தான விமர்சனங்கள்[தொகு]

கொலை நிகழ்வு நடந்த நேரத்தில் அங்கிருந்தோர் கொலையைத் தடுக்கவோ, கொலையாளியைப் பிடிக்கவோ முயற்சி செய்யவில்லை; கொலைத் தாக்குதலுக்குள்ளான பெண்ணைக் காப்பாற்ற முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் குமுகாயத்தின் பல்வேறு அமைப்புகளால் எழுப்பப்பட்டன.

அஞ்சலிக் கூட்டங்கள்[தொகு]

கொலையைக் கண்டித்து, சென்னை நகரில் அஞ்சலிக் கூட்டங்கள் இடம் பெற்றன.[6]

ராம்குமார் மரணம்[தொகு]

சுவாதியின் கொலை வழக்கை தமிழக காவல் துறை சரியாக விசாரிக்கவில்லை, பல உண்மைகளை இவர்கள் மறைத்துவிட்டனர். இதனால் இந்த வழக்கை சிபியையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராம்குமாரின் அம்மா நீதிமன்றத்தில் முறையிட்டார்.[7]

இதற்கிடையில் சென்னை புழல் சிறைச்சாலையில் குற்றவாளி என்று கைதுசெய்யப்பட்டிருந்த ராம்குமார் 2016 செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி சிறை வளாகத்தில் இருந்த மின்சார பெட்டியில் கைவைத்து இறந்துவிட்டதாகச் சிறைத்துறையினர் அறிவித்தனர். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Techie hacked to death". தி இந்து. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
  2. "Swathi's murderer arrested in Tirunelveli". தி இந்து ஆங்கிலம். சூலை 2, 2016. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
  3. "சுவாதி கொலை வழக்கு:செங்கோட்டையில் சந்தேக நபர் கைது". தினமணி. 2 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
  4. "Swathi murder case: Chennai city police take over investigation". தி இந்து. 27 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
  5. "Chennai's Nungambakkam railway station does not have CCTV cameras". தி இந்து. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
  6. "A cry for justice". தி இந்து. 30 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2016.
  7. பல உண்மைகளை போலீஸார் மறைத்துவிட்டனர்: சுவாதி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் - ராம்குமாரின் தாயார் மனு தாக்கல்
  8. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை தி இந்து தமிழ் 18 செப்டம்பர் 2016

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_கொலை_வழக்கு&oldid=3108200" இலிருந்து மீள்விக்கப்பட்டது