சிவகவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகவி
(பொய்யாமொழிப் புலவர்)
இயக்கம்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புபட்சிராஜா பிலிம்சு
கதைஇளங்கோவன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
செருக்களத்தூர் சாமா
என். எஸ். கிருஷ்ணன்
டி. பாலசுப்பிரமணியம்
எஸ். ஜெயலட்சுமி
டி. ஆர். ராஜகுமாரி
டி. ஏ. மதுரம்
நடனம்வழுவூர் பி. இராமையா பிள்ளை
விநியோகம்நாராயணன் கம்பனி, சென்னை
வெளியீடு1943
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிவகவி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சிவபக்தியை, சிவசோதனையை மாயாஜாலக் காட்சிகளின் மூலம் சொல்லும் இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், டி. பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராஜகுமாரி, டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பக்ஷிராஜா பிலிம்ஸாரால் தயாரிக்கப்பட்டது. ராமையா பிள்ளை இத்திரைப்படத்தின் நடனங்களை அமைத்திருந்தார்.[1]

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தொண்டை நாட்டிலே வயிரபுரம் என்னும் ஊரில் அம்பலத்தரசன் (எஸ். ராஜம்) என்னும் சிறுவனும், அவ்வூர் அதிபதி காளிங்கராயனின் மகள் அமிர்தவல்லியும் (எஸ். ஜெயலக்ஷ்மி) இன்னும் பல மாணவ மாணவியரும் ஒரு உபாத்தியாயரிடம் (வி. சுந்தரமய்யர்) கல்வி கற்று வருகின்றனர். கல்வி பயின்ற காலம் போக மற்ற வேளையில் உபாத்தியாயரின் சோளக்கொல்லையை மாணவர் காவல் புரிகின்றனர்.[2]

ஒரு முறை அமிர்தவல்லி, அம்பலத்தரசனின் முறை. அம்பலத்தரசன் கண்ணயர்ந்த சமயம் காளிங்கராயனுக்குச் (நாட்டு அண்ணாஜிராவ்) சொந்தமான குதிரைகள் பயிரை மேய்ந்து அழித்து விடுகின்றன. கண் விழித்த அம்பலத்தரசன் குதிரையை விரட்ட, குதிர அவனைத் துரத்துகிறது. ஒரு காளி கோயிலினுள் ஓடி, தேவியிடம் முறையிடுகிறான். தேவி தோன்றி, அம்பலத்தரசனை "உன் வாக்கு பொய்க்காது, உலகம் உன்னைப் பொய்யாமொழி சிவகவி என்று போற்றும்" என அனுக்கிரகித்து மறைகிறாள். தேவி அருள் பெற்ற பொய்யாமொழி (தியாகராஜ பாகவதர்) குதிரையை வசைபாட அது இறக்கிறது. அமிர்தவல்லி குதிரையை உயிர்ப்பிக்க வேண்டுகிறாள். "ஏழையை அலட்சியம் செய்யாதே, தெய்வத்தை இகழாதே" என்கிற வாக்குறுதியை அமிர்தவல்லியிடம் பெற்று மற்றொரு பாட்டுப் பாடிக் குதிரையை உயிர்ப்பிக்கிறான்.[2]

ஒரு முறை மாரியாயி வேடத்தில் வந்த காளி தேவியை அமிர்தம் பரிகசிக்க, அவள் முகத்தில் வைசூரி தோன்றுகிறது. சிவகவி அவளின் வைசூரியைப் போக்கி பிறகு அவளையே மணக்கிறான். ஜீவனத்திற்கு வழியில்லாததால் வீடு, நகைகளை விற்கிறான் சிவகவி. தனது சினேகிதி யோகாம்பாளின் (டி. ஏ. மதுரம்) போதனையால், கவிபாடி திரவியம் சிவகவியைத் தேடும்படி தூண்டப்படுகிறாள் அமிர்தம். இதே சமயம் சம்பந்தம்பிள்ளை (வாசுதேவ பிள்ளை) என்பவர் முருகக் கடவுள் மேல் உலா பாடித் தரும்படியும் அதற்குப் பதினாயிரம் வராகன்கள் தருவதாகவும் சொல்ல சிவகவி வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ என்று பாடுகிறான். இதனால் தம்பதியினருக்குள் சச்சரவு ஏற்பட்டு சிவகவி வீட்டை விட்டு வெளியேறுகிறான்.[2]

வஞ்சியாக ராஜகுமாரி

மதுரை சென்ற சிவகவி பாண்டிய மன்னனின் சோதனைகளில் வெற்றி பெற்று, அவனுடைய உதவியால் தமிழ்ச் சங்கத்தைத் தாபித்து அதற்குத் தலைவனும் ஆகின்றான். அங்கிருந்து சோழ தேசத்தின் வழியாக வரும்போது சோழ மந்திரி சீநக்கனும் (செருக்களத்தூர் சாமா) சிவகவியும் நண்பர்களாகின்றனர். ஒரு நாள் இரவில் மந்திரியும் சிவகவியும் கட்டிலில் படுத்து பேசிக்கொண்டே இருக்கும் போது சிவகவி உறங்கிவிடுகிறார். மந்திரி எழுந்து நிலா ஒளியை ரசிக்க சென்றுவிடுகிறார்.இதை அறியாத மந்திரி மனைவி சிவகவியோடு கட்டிலில் படுத்து உறங்குகிறார். இதைக் கண்ட மந்திரி முன்பு ஒரு முறை சிவகவி சொன்னதுபோல் பெண்களை நம்புவது இல்லை என கூறியதை நினைவில் கொண்டு அவர்களை சந்தேகம் கொள்ளாமல் உடன் படுத்து இரங்குகிறார்.உடனே விழித்த சிவகவி, இது என்ன உமது கட்டிலில் உமது மனைவியுடன் நான், நான் எந்த தவறும் செய்யவில்லை என சொல்ல மந்திரி நாம் பேசிக்கொண்டிருக்கும் பொது நீ களைப்பினால் தூங்கினது நான் அறிவேன்.என் மனைவியும் நீ என்று அறியாமல் உன் அருகில் உறங்கியத்தையும் நான் இங்கிருந்து கண்டுகொண்டே இருந்தேன் . நான் உங்களை சந்தேகம் கொள்ளமாட்டேன். என கூறி அவர்களோடு உறங்குகிறார்.ராஜசபைப் புலவர்கள் சிவகவியிடம் பொறாமை கொள்ளுகின்றனர். இவர்களுக்குள் விரோதம் ஏற்படுத்தும் பொருட்டு, வஞ்சி (டி. ஆர். ராஜகுமாரி) என்பவள் சிவகவியை ஊரைவிட்டுத் துரத்த முயற்சி செய்து, சிவகவிக்கும், சீநக்கனின் மனைவி வல்லிக்கும் (எம். எஸ். திரிபுராம்பாள்) அந்தரங்க நட்புண்டென்று வதந்தியைப் பரவச் செய்து, பிறகு விதியாகிய பாம்பினால் கடியுண்டு மடிகிறாள். சிவகவி நகரை விட்டுப் புறப்படுகிறான். சிவகவியை தேடும் படி யோகம் தன் கணவனை (N S கிருஷ்ணன் ) அனுப்புகிறாள். அவன் சிவகவி இருக்கும் ஊரில் அவன் சிவகவியைப்பற்றி கேட்ட கதையை அவன் மனைவியிடம் கூறுகிறான்.சிவகவிக்கு ஏற்பட்டிருக்கும் அபவாதத்தைப் பற்றி சிவகவியின் மனைவி அமிர்தத்திடம் யோகாம்பாள் கோள் சொல்கிறாள்.[2]

பொன்னில்லாமல் வீடுவந்து சேர்கிறான் சிவகவி. கணவனை அமிர்தம் கடிந்துபேசி, வீட்டை விட்டுப் போகும்படி சொல்கிறாள். உடனே சிவகவி பொன் பொன் என்று கூற வீட்டின் கூரையில் இருந்து பொன் கொட்டுகிறது. பின் சிவகவி அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்.உடனே அங்கு வந்த யோகம் அமிர்தத்திடம் நலம் விசாரிக்க இப்படி நலம் விசாரிக்க வந்து தானே எனக்கு இல்லாததும் பொல்லாததும் சொல்லிகொடுத்து என் வாழ்கையே கெடுத்துவிட்டாய் என கூற இருவருக்கும் வாய் தகறாரு வர யோகம் வெளியேறுகிறாள்.பின் அமித்தம் பொற்காசுகளை கையிலெடுத்து பொன் பொன் என்று கூற பொன்னை விரும்பிய அமிர்தம் பொன்னைப் பெற்றுப் பைத்தியம் பிடித்து ஆற்றில் இறங்கி மூழ்கி இறக்கிறாள்.[2]

நண்பனைப் பிரிந்த துயரால் சீநக்கன் உயிர் விடுகிறான். வல்லி உடன்கட்டை ஏறுகிறாள். ஓடோடியும் வந்த சிவகவி, தானும் அந்த தீயில் புகுந்த சமயம் முருகன் (மாஸ்டர் சேதுராமன்) தோன்றி எல்லோரையும் ஆசீர்வதிக்கிறான்.மூவரும் உயிர் பெற்று எழுகின்றனர் கதை இனிதே முடிகிறது.[2]

நடிகர்கள்[தொகு]

நடிகர்கள்

நடிகைகள்

தயாரிப்பு[தொகு]

சிவகவி திரைப்படத்தின் படப்பிடிப்பு 1942 இல் இராசா சாண்டோவின் இயக்கத்தில் தொடங்கியிருந்தது. ஆனாலும், தராரிப்பாளர் எஸ். எம். சிறீராமுலு நாயுடுவுடன் ஏற்பட்ட சில முரண்பாடுகளால்,[1] ராஜா சாண்டோ நீக்கப்பட்டு, சிறீராமுலுவே இயக்குநர் பொறுப்பையும் ஏற்றார்.[1][3] [4] இளங்கோவன் திரைக்கதை, வசனத்தை எழுதினார்.[5]

டி. ஆர். ராஜகுமாரிக்கு இது ஒரு தொடக்ககாலப் படங்களில் ஒன்றாகும். இத்திரைப்படத்தில் இவர் தேவதாசியாக பாகவதரின் மீது காதல் கொண்டவராக நடித்தார். சு. ஜெயலட்சுமி பாகவதரின் மனைவியாக நடித்தார்.[6][7] ஜெயலட்சுமியின் சகோதரர் சு. ராஜம், தந்தை சுந்தரம் ஐயர் ஆகியோரும் நடித்திருந்தனர்.[8]

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்[தொகு]

இப்படத்தின் பாடல்கள் கொலம்பியா இசைத்தட்டுகளில் வெளிவந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்ற, ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]

சிவகவி பாடல்கள்
எண் பாடல் பாடியவர்(கள்) இராகம்-தாளம்
1 பொழுது விடிந்த துறங்குவதேன் - ராகமாலிகை (பூபாளம், மலையமாருதம், சாமா, மோகனம், கமாசு, சாவேரி, கேதாரம்)
2 பயிரைத்தின்னும் மாட்டை என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் -
3 வதனமே சந்த்ர விம்பமோ தியாகராஜ பாகவதர் சிந்துபைரவி, திச்ரம்
4 திருவருள்தர இன்னும் மனமில்லையானால் தியாகராஜ பாகவதர் குறிஞ்சி, ஆதி
5 வாய்த்த வயிரபுர மாகாளி தியாகராஜ பாகவதர் கேதாரகௌளம்
6 மாயி மகம்மாயி மாகாளி காளி -
7 மனங்கனிந்தே ஜீவதானம் தந்தருள்வாய் தியாகராஜ பாகவதர் ரதிபதிப்பிரியா, ஆதி
8 வசந்தருது மனமோகனமே தியாகராஜ பாகவதர், சு. ஜெயலட்சுமி -
9 ஆராட்டமுடன் வாராய் மாதாவே என். எஸ். கிருஷ்ணன் -
10 அம்பா மனங்கனிந்துனது கடைக்கண்பார் தியாகராஜ பாகவதர் பந்துவராளி, ஆதி
11 சம்போ சங்கர கௌரீசா தியாகராஜ பாகவதர் -
12 வள்ளலைப் பாடும் வாயால் தியாகராஜ பாகவதர் செஞ்சுருட்டி, ஆதி
13 இன்னும் மௌனமேன் ஈசனே மகேசா டி. சுப்புலட்சுமி மணிரங்கு, ஆதி
14 கூத்தாள் முகத்திரண்டு கூர்வேலாம் தியாகராஜ பாகவதர் சரசாங்கி
15 வாசமலர் மடந்தை போல்வார் தியாகராஜ பாகவதர் ஆனந்தபைரவி, சாரங்கா
16 உங்களிலே யானொருவன் ஒப்பேனோ தியாகராஜ பாகவதர் அம்சத்வனி, மத்யமாவதி
17 தமியேன் பைந்தமிழ் அன்னையின் தியாகராஜ பாகவதர் சகானா, ரூபகம்
18 போதும் போதுமே வாழ்ந்த வாழ்வினி என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் -
19 குளிர்ந்த முகமனும் இன்சொலும் தியாகராஜ பாகவதர் கரகரப்பிரியா
20 எல்லாம் சிவன் செயலென் றெண்ணி தியாகராஜ பாகவதர் தோடி, திரிபுடை
21 உள்ளம் தன் நிலை தளர்ந்ததே டி. ஆர். ராஜகுமாரி உசேனி, ரூபகம்
22 கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே தியாகராஜ பாகவதர் நாட்டக்குறிஞ்சி, ஆதி
23 பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் தியாகராஜ பாகவதர் காம்போஜி, காபி
24 சுவப்பன வாழ்வில் மகிந்து தியாகராஜ பாகவதர் விஜயநாகரிபுவனாகாந்தாரி
25 முருகா முருகா முருகா எனக்கொரு கதி அருள் சு. ஜெயலட்சுமி கானடா, ஆதி
26 சிதையே - ஏ சிதையே தியாகராஜ பாகவதர் சுத்தசாவேரி, ஆதி
27 சிறீகல்யாண குண மகிபனே தியாகராஜ பாகவதர் ராகமாலிகை

வெளியீடு[தொகு]

சிவகவி 1943 ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்டது.[9] இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று தென்னிந்தியாவின் பல திரையரங்குகளில் மிக நீண்ட காலம் ஓடியிருந்தது.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ராண்டார் கை (26 September 2008). "Sivakavi 1943". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200827061318/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/sivakavi-1943/article3023385.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 சிவகவி பாட்டுப்புத்தகம். Madras: Caxton press. 1943. 
  3. 3.0 3.1 ராண்டார் கை (11 June 2010). "Baker-turned-filmmaker". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200827061320/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Baker-turned-filmmaker/article16249879.ece. 
  4. Dhananjayan 2014, ப. 50.
  5. Randor Guy (26 August 2011). "Wordsmith". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170404211345/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/wordsmith/article2398014.ece. 
  6. Ashok Kumar, S.R. (22 July 2007). "Yesteryear actor dead". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170322060629/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Yesteryear-actor-dead/article14801338.ece. 
  7. Randor Guy (20 March 2009). "Artist's brush with celluloid". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200827061320/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Artistrsquos-brush-with-celluloid/article15937654.ece. 
  8. Randor Guy (5 February 2010). "Rajam's romance with cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200704162129/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Rajams-romance-with-cinema/article15693108.ece. 
  9. "Sivakavi". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 10 April 1943. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19430409&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகவி&oldid=3719392" இலிருந்து மீள்விக்கப்பட்டது