சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் நுழைவாயில்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் என்பது தமிழ் நாட்டில், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிறுவாச்சூர்] எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது பெரம்பலூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் மதுரகாளியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்காகச் சோலை முத்தையா கோயில் அமைந்துள்ளது. இவரே செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனின் காவல் தெய்வமாக விளங்குபவர். இவர் அருகிலேயே அகோர வீரபத்திரர் நிற்கிறார். .[1]

சிறப்பு[தொகு]

மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி, செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமி மலை கோவில் திசையை நோக்கி தீபாராதனையை காட்டியபிறகே, மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கம். மதுரகாளியம்மன் கோவிலில் எந்த திருவிழா நடந்தாலும், முதல் மரியாதை செல்லியம்மனுக்குத்தான் கொடுக்கப்படுவது வழக்கம்.

வழிபாட்டு நாட்கள் & நேரம்[தொகு]

மதுரகாளியம்மன் திருக்கோயில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளிலும் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். [2] கோயில் நடை திறந்திருக்கும்.

சிறப்பு வழிபாட்டு நாட்கள்[தொகு]

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் மற்றும் நவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற சிறப்பு நாட்களிலும், தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு நாட்களிலும், ஆடி பதினெட்டாம் பெருக்கு, தீபாவளித் திருநாள், கார்த்திகை தீபம், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம் ஆகிய நாட்களில் திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்[தொகு]

இக்கோயிலில் மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர். இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள்.

  1. வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே இக்கோயில் திறந்திருக்கும்; மற்ற நாட்களில் அம்மன் அருகிலிருக்கும் மலையில் வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை.
  2. மாவிளக்கு ஏற்றி வழிபடுவது இங்கு முக்கிய நேர்த்திக் கடனாகக் கருதப்படுகின்றது. இந்த மாவிளக்கிற்கான மாவை பக்தர்கள் அவரவர் வீடுகளிலிருந்து கொண்டுவரும் அரிசியை இங்கு தண்ணீரில் ஊறவைத்து, அதற்கென்றே வைக்கப்பட்டுள்ள உரல்களில் இடித்து மாவாக்குகிறார்கள். மாவிடிக்க முடியாத நிலையிலுள்ளவர்களுக்கு உதவ ஆட்களும் இருக்கின்றனர்.
  3. இங்கு மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கத் தேர் உள்ளது.
  4. இக்கோயிலில் அன்னதானம் திட்டம் நடைமுறையில் உள்ளது.

திருவிழாக்கள்[தொகு]

ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையன்று மதுரகாளியம்மனுக்கு பூச்சொரிதல் திருவிழாவும் பின்னர் அம்மனுக்குக் காப்புக் கட்டி திருவிழாவும் தொடங்கும். 8-ஆம் நாள் திருவிழாவான செவ்வாய் அன்று மாலையில், சுத்துப்பட்டு சனங்களெல்லாம் பெரிய சாமி கோயில் மலையடிவாரத்தில் கூடுவர். அன்று இரவு சிறப்பு பூஜையும் மறுநாள் அதிகாலையில் கடாவெட்டு நடைபெறும். மலைக்கோயில் பூஜைகள் அதோடு நிறைவு பெறும். புதன்கிழமை அன்று, பக்தர்கள் மதுரகாளி வாசலில் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். வியாழனன்று செல்லியம்மன், பெரியசாமி, மதுரகாளி உள்ளிட்ட தெய்வங்களின் தேர்பவனியும் வெள்ளிக்கிழமையன்று ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். சனிக்கிழமை நடைபெறும் மஞ்சள் நீராட்டுடன் அந்த ஆண்டின் திருவிழா நிறைவடையும்.

தல வரலாறு[தொகு]

தன் கணவனை ஆராயாமல் கொன்ற பாண்டியனிடம் நீதிகேட்டு, கோபத்துடன் மதுரையை எரித்தாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது வழியில் இருந்த செல்லியம்மன் கோயிலில் அன்றிரவு தங்கத் தீர்மானித்தாள். அங்கு தங்கியிருந்தபோது, அன்றிரவு செல்லியம்மன் தன் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, கண்ணகியிடம் வந்து, “பெண்ணே நீ இங்கு தங்கக் கூடாது” என்றார். காரணம் கேட்ட கண்ணகியிடம், தான் ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருப்பதாகவும், தனது பக்தியால் தன்னிடம் பல வரங்களைப் பெற்ற அவன், ஒரு கட்டத்தில் மந்திரங்கள் மூலம் தன்னையே அவனுக்கு அடிமையாக்கி விட்டதாக கூறினார். மேலும் தனது அழிவுச் செயல்களுக்கு அவன் தன்னைப் பயன்படுத்தத் துடிப்பதாகவும். இந்த நிலையில் நீ இங்கு இருப்பதை பார்த்தால் அது உனக்கு ஆபத்து என்றார்.

செல்லியம்மனின் நிலையைக் கண்டு கண்ணகி மனம் வருந்தினாள். சற்று நேரத்தில் கோயிலுக்கு வந்த மந்திரவாதி, செல்லியம்மனை வெளியே வருமாறு அழைத்தான். திடீரென அவன் எதிரில் வாளோடு வந்த கண்ணகி, அவன் கழுத்தைத் துண்டித்தாள். வந்தது கண்ணகியல்ல, அவள் உருவத்தில் குடியேறிய காளியம்மன்தான் என்பதை உணர்ந்த மந்திரவாதி அவளிடம் இறுதியாக ஒரு வரம் வேண்டினான். அதன்படி இந்த ஆலயத்தில் தனக்கு ஒரு சமாதி அமைக்கப்பட வேண்டும் என்றும். பக்தர்கள் எல்லாம் அதன்மீது கால் வைத்துவிட்டு அம்மனை தரிசிக்க வர வேண்டும் என்றும். அதுவே தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் என்றான்.

கண்ணகி உருவில் இருந்த காளியம்மனும் இதற்கு ஒத்துக்கொண்டாள். மனம் நெகிழ்ந்த செல்லியம்மன், கண்ணகியின் உதவியைப் போற்றும் வண்ணம், “இனி இந்த சிறுவாச்சூர் உனக்கானது. மதுரகாளியம்மனாக நீயே இங்கு எழுந்தருள்வாயாக. பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எதற்கும் இங்கு இனி இடம் கிடையாது. சூனியங்கள் இங்கு நடைபெறாது. நான் காட்டுக்கு நடுவே அமைந்துள்ள பெரியசாமிக் குன்றுக்குச் செல்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்’’ என்று கூறி மறைந்தாள்.

கண்ணகியும் இதற்கு ஒத்துக்கொண்டாள் எனினும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தான் சிறுவாச்சூரில் இருப்பதாக வாக்களித்தாள். அதனால்தான் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இங்கு பூசை நடக்கிறது. மேலும் பூசையின்போது மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி அதை செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமிக் குன்றின் திசையை நோக்கிக் காட்டிவிட்டு பிறகே மதுரகாளியம்மனின் திருவுருவத்துக்குக் காட்டுகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. வாரத்தில் இருதினங்கள் மட்டுமே திறக்கும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயம்!
  2. அருள்மிகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்
  3. ஜி.எஸ்.எஸ் (30 ஆகத்து 2018). "கண்ணகி காப்பாற்றிய செல்லியம்மன்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் இணையதளம் பரணிடப்பட்டது 2008-03-20 at the வந்தவழி இயந்திரம்