சிறீரங்கபட்டின உடன்படிக்கை
சிறீரங்கபட்டின உடன்படிக்கை (Treaty of Seringapatam) என்பது மூன்றாம் ஆங்கில-மைசூர்ப் போரை முடிவுக்கு கொண்டுவந்த ஒரு ஒப்பந்தமாகும். இதில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பாக காரன்வாலிஸ் பிரபுவும், ஐதராபாத் நிசாம் மற்றும் மராட்டியப் பேரரசின் பிரதிநிதிகள் மற்றும் மைசூர் பேரரசின் ஆட்சியாளரான திப்பு சுல்தான் ஆகியோர் கையொப்பம் இட்டனர். இது திப்புசுல்தான் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக பெரிய அவமானம் ஆகும். இந்த உடன்படிக்கை ஆங்கிலேயர்க்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. மைசூர் ஆட்சியாளர் திப்புசுல்தானும் காரன்வாலிஸ் பிரபுவும் இந்த உடன்படிக்கையில் 1792 மார்ச் 18 ஆம் நாள் கையெத்திட்டனர். இவ் உடன்படிக்கை திப்புசுல்த்தானின் முழு அதிகாரத்தையும் கட்டுப்படுத்தியது.
பின்னணி
[தொகு]திப்பு சுல்தான் 1789-இல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் நட்பு நாடான திருவிதாங்கூரின் மீது தாக்குதல் நடுத்தியதால் போர் மூண்டது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற சண்டைக்குப்பின், காரன்வாலிசு பிரபுவின் தலைமையிலான ஆங்கிலப்படை அதன் நட்பு நாடுகளான மராத்தியப் பேரரசு, ஐதராபாத் அரசு ஆகியவற்றின் உதவியுடன் மைசூர் அரசின் தலைநகரான சீரங்கப்பட்டிணத்தை 1792-இல் முற்றுகையிட்டது.[1] போரினால் ஏற்படும் பேரிழப்புகளைத் தவிர்க்க காரன்வாலிசு சமாதானப் பேச்சுக்கு அழைத்தார். இதன் விளைவாக மார்ச்சு 18-ஆம் நாள் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
உடன்படிக்கையின் அம்சங்கள்
[தொகு]
ஒப்பந்த விதிமுறைப்படி திப்புசுல்தான் போர் இழப்பீடாக மூன்றுகோடியே முப்பது லட்சம் ரூபாய் வழங்கவேண்டும், இழப்பீடு கொடுத்துமுடிக்கும்வரை தன் மூன்றில் இரண்டு புதல்வர்களையும் பிணையக்கைதிகளாக ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கவேண்டும்,[2][3] மராத்திய பேஷ்வாக்கிற்கு துங்கபத்திரை நதிக்கரை வரையிலான பகுதிகளைக் கொடுக்க வேண்டும், ஐதராபாத் நிஜாமுக்கு கிருஷ்ணாவிலிருந்து பெண்ணாறு நதி வரையிலான நிலப்பகுதி நிலமும், பெண்ணாற்றின் தென் கரையில் உள்ள கடப்பா மற்றும் கந்திகோட்டா கோட்டைகளும் வழங்கப்பட்டன. கிழக்கிந்திய நிறுவனமானது திருவாங்கூர் இராச்சியம் மற்றும் காளி நதி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட மலபார் கடற்கரை மற்றும் திண்டுக்கல் மாவட்டம், பாராமகால் ஆகிய பெரும் பரப்பளவிலான பகுதிகளைப் பெற்றது.[2] குடகு பகுதிக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்,[2] பிரான்ஸ் நாட்டுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைசூர் அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பாதியை இழந்தது.