சித்தூர் சுப்பிரமணியம்
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை | |
---|---|
![]() சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை (1943) | |
பிறப்பு | கனகையா சூன் 22, 1898 புங்கனூர், சித்தூர் மாவட்டம், இந்தியா |
இறப்பு | 1975 (அகவை 76–77) |
பணி | இசைக்கலைஞர், பாடகர், பாடலாசிரியர் |
அறியப்படுவது | கருநாடக இசைப் பாடகர் |
பெற்றோர் | பேரையா, முகிலம்மாள் |
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை (சூன் 22, 1898 - 1975) என்பவர் ஒரு கருநாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர்.
பிறப்பு[தொகு]
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் என்னும் ஊரில் பிறந்தார். தகப்பனார் பேரையா. தாயார் முகிலம்மாள். இவரது இயற்பெயர் கனகையா, ஆயினும் தனது குருவான நாயனாரின் இயற்பெயரான சுப்பிரமணியம் என்பதை தன் பெயராகக் கொண்டார்.
இசைப்பயிற்சி[தொகு]
தொடக்கத்தில் தனது பெற்றோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். ஐந்து வயதிலிருந்தே ஹரிகதை எனப்படும் இசைச் சொற்பொழிவுகள் செய்து வந்தார். பின்னர் காஞ்சிபுரம் நாயினாரிடம் 14 ஆண்டுகள் குருகுல வாச முறையில் இசை கற்றுக்கொண்டார்.
இசைப் பயணம்[தொகு]
கருநாடக இசை அறியாதவர்களும் மெய்ம்மறந்து கேட்கும் வண்ணம் இசை விருந்து படைக்க வல்லவர். அநுபவத்தையும் கற்பனை ஆற்றலையும் கலந்து மணிக்கணக்கில் இராகம் பாடுவார். இவரது இசைப் பாணி காஞ்சீபுரம் பாணி என தனித்தன்மை வாய்ந்தது. சென்னையில் வாழ்ந்து வந்த அவர் இந்தியா முழுவதும் சுமார் 50 ஆண்டுகள் கச்சேரிகள் செய்தார்.
அவர் தியாகராஜ கீர்த்தனைகளின் அறிவும், லய தேர்ச்சியும் நாடறிந்தவை. தியாகராஜர், முத்துஸ்வாமி ஆகியோரின் அரிய கீர்த்தனங்களை தேடி எடுத்துப் பாடுவதில் வல்லவர். தானே இயற்றிய சில கீர்த்தனைகளை அவர் கொலம்பியா இசைத்தட்டில் பதிவு செய்தார்.[1]
குருவாக[தொகு]
இவர் குருகுல முறையில் பல மாணாக்கர்களை உருவாக்கினார். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்: மதுரை சோமசுந்தரம், பாம்பே எஸ். இராமச்சந்திரன், சித்தூர் இராமச்சந்திரன், இவரது மகள் ரேவதி இரத்தினசுவாமி இன்னும் சிலர் இவரிடம் இசை கற்றார்கள்.[1] அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைப் பிரிவு தலைவராகப் பணியாற்றியதுடன் தென் இந்தியாவின் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில, மத்திய அரசு நிறுவனங்கள் என்பவற்றின் இசைத் துறையில் பணியாற்றியுள்ளார். திருப்பதி ஸ்ரீ வெங்கடேச்வரா இசைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றியதுடன் அக்காலத்தில் அன்னமாச்சார்யாவின் பல கீர்த்தனைகளுக்கு இசை வடிவமைத்தார். திருப்பதியில் தியாகராஜ இசை விழா நடத்தி தகுதியானவர்களுக்கு சப்தகிரி சங்கீத வித்துவான்மணி விருது வழங்கினார்.[2]
யாழ்ப்பாணத்தில்[தொகு]
இலங்கை, யாழ்ப்பாணம் இராமநாதன் சங்கீத அகாதமியின் தலைவராக 1967ஆம் ஆண்டிலிருந்து 1971 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது மகளும் சங்கீத வித்துவானுமாகிய ரேவதி இரத்தினசாமியின் இசைக் கச்சேரி 2013 அக்டோபரில் யாழ்ப்பாணம் இராமநாதன் அகாதமியில் நடைபெற்றது.[கு 1]
நூற்றாண்டு விழா[தொகு]
இவரது மகளும் மாணவியுமான ரேவதி இரத்தினசாமி "ஸ்ரீ சுப்பிரமணிய சங்கீத க்ஷேத்திர" என்ற அமைப்பினை ஏற்படுத்தி மாணவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்து வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் சித்தூர் சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா 2006ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.[1]
விருதுகள்[தொகு]
- சங்கீத கலாநிதி விருது, 1954. வழங்கியது சென்னை மியூசிக் அகாதமி
- இசைப்பேரறிஞர் விருது, 1964. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
- சங்கீத நாடக அகாதமி விருது, 1964. இந்திய இசை, நடன, நாடக தேசிய அகாதமி[4]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1965. வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- பத்மஸ்ரீ
குறிப்புகள்[தொகு]
- ↑ இந்தத் தகவல் ரேவதி இரத்தினசாமியிடமிருந்து தொலைபேசியில் பெறப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Carnatic classicist remembered" (in ஆங்கிலம்) இம் மூலத்தில் இருந்து 2017-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170722010834/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/carnatic-classicist-remembered/article3231142.ece.
- ↑ "Sixty years of service to music" (in ஆங்கிலம்) இம் மூலத்தில் இருந்து 2005-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050123094510/http://www.thehindu.com/thehindu/fr/2002/07/26/stories/2002072600910400.htm.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 23 டிசம்பர் 2018. http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
வெளி இணைப்புகள்[தொகு]
- புகழ் பெற்ற கலைஞர்கள்
- think loud (ஆங்கிலம்)
- A voice to remember (ஆங்கிலம்)
- யூடியூபில் எவரி நேரமு - சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை பாடிய ஒரு கீர்த்தனை