சிங்கப்பூரில் இந்து சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிங்கப்பூரில் இந்து மதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மழை தெய்வமான மாரியம்மனுக்காக எழுப்பப்பட்டுள்ள சிங்கப்பூர் மகா மாரியம்மன் ஆலய நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தில் காணப்படும் பல்வேறு கடவுளர் சிலைகள் 

இந்து சமயமும், கலாச்சாரமும் சிங்கப்பூரில் கி.பி. ஏழாம் நுாற்றாண்டு தொடங்கி காணப்படுகிறது. டெமாசெக் என்பார் இந்து-பௌத்த சிறீவிஜயப் பேரரசில் வணிகம் சார்ந்த பதவியை வகித்த போதிலிருந்து இந்த தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து, பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தால் பிரித்தானியா கிழக்கிந்திய நிறுவனத்தின் மூலம் தென்னிந்தியாவில் இருந்து கூலிகளாகவும், ஒப்பந்தக் கூலிகளாகவும் மக்கள் குடியேற்றப்பட்டனர். [1][2] மலாய் தீபகற்பத்தைப் போலவே, பிரித்தானிய நிர்வாகமும் அதன் பிராந்திய தோட்ட மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நம்பகமான தொழிலாளர் சக்தியை உறுதிப்படுத்த முயன்றது.குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து கங்காணி அமைப்பு மூலம் குடியேறவும், கோயில்களைக் கட்டவும், இந்துக்களை ஊக்குவித்தனர். இந்த சமுதாய அமைப்பானது பின்னர் சிறிது சிறிதாக ஒரு குட்டி இந்தியாவாக மாறியது..[3][4]

தற்போதைய நிலையில், பல்வேறு இந்து கடவுள்களுக்கான ஏறத்தாழ முப்பதுக்கு மேற்பட்ட முக்கிய இந்து கோயில்கள் சிங்கப்பூரில் உள்ளன. 2010 ஆண்டின் நிலையில் 2,60,000 இந்துக்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[5]2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, வயது வந்த மற்றும் சிங்கப்பூர் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களாகவும் உள்ள இந்துக்கள், சிறுபான்மையினராக சிங்கப்பூர் மக்கள் தொகையில் 5.1 விழுக்காடு அளவிற்கு வாழ்கின்றனர். சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அனைத்து இந்துக்களும் இந்திய இந்துக்கள் ஆவர். 1931 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை 5.5% என்ற உச்ச அளவைக் கொண்டிருந்தது.[6] சிங்கப்பூரில் இந்துக்களின் விழாவான தீபாவளி நாளானது அங்கீகரிக்கப்பட்ட தேசிய பொது விடுமுறை தினமாக உள்ளது. சில இந்தியரல்லாதோர், வழக்கமாக, பௌத்த சீனர்கள் பல்வேறு இந்து மதச்சடங்குகளில் பங்கேற்கின்றனர். மலேசியா மற்றும் இந்தோனேசியாவைப் போன்றல்லாமல், சிங்கப்பூர் இந்துக்களின் மதம் சார்ந்த சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை.

ஆண்டு விழுக்காடு அதிகரிப்பு
1849 2.8% -
1911 5.0% +2.2%
1921 4.6% -0.4%
1931 5.5% +0.9%
1980 3.6% -1.9%
1990 3.7% +0.1%
2000 4.0% +0.3%
2010 5.1% +1.1%

2015 ஆம் ஆண்டில் இந்துக்களாக பதிவு செய்யப்பட்ட குடியுரிமை பெற்ற இந்து மக்களின் மக்கள் தொகை[7]

இனக்குழுக்கள் இந்துக்களாக பதிவு செய்யப்பட்ட குடியுரிமை பெற்ற இந்து மக்களின் மக்கள் தொகை இந்துக்களாக பதிவு பெற்று குடியுரிமை பெற்ற மக்களின் விழுக்காடு குடியுரிமை பெற்ற மக்களின் விழுக்காடு இனக்குழுக்களின் குடியுரிமை பெற்றோரின் மொத்த மக்கள் தொகை
சீனர்கள் 300 0.012% 76.84% 2,517,580
மலேசியர்கள் 100 0.026% 11.88% 389,090
இந்தியர்கள் 161,800 59.88% 8.25% 270,220
இதரர் 400 0.403% 3.03% 99,300
ஒட்டுமொத்தம் 162,600 4.964% 100% 3,276,190

சிங்கப்பூரில் இந்து சமயத்தின் தொடக்கம்[தொகு]

சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் முகப்புத் தோற்றம்

சிங்கப்பூரில் இந்து மதம் மற்றும் அதன் கலாச்சாரம் ஏழாம் நுாற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. 10 ஆம் நுாற்றாண்டில் தமிழக சோழர்களின் தாக்கம் தொடங்கியது. 14 ஆம் நுாற்றாண்டு முதல் 17 ஆம் நுாற்றாண்டு வரை நிகழ்ந்த முகம்மதிய படையெடுப்புகளாலும், விரிவாக்கத்தாலும், சிங்கப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்து மற்றும் பௌத்தத்தின் தாக்கம் மங்கத் தொடங்கியது. காலணி ஆதிக்க சகாப்தமானது அதிகாரம் மற்றும் மதம் சார்ந்த தாக்கங்களில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்தது. [3]19 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தால் தென்னிந்தியாவிலிருந்து இந்துக்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) கூலிகளாகவும், தொழிலாளர்களாகவும் கொண்டுவரப்பட்டனர். [3][4] தாய்நாட்டை விட்டு வெளிநாட்டில் குடியேற வந்த இந்த மக்கள் தங்களது மதம் மற்றும் கலாச்சாரத்துடன் வந்தனர். அவர்களது வருகை தீவு முழுவதிலும் திராவிட கட்டிடக்கலையின் அடையாளங்களுடன் கோயில்களை எழுப்பக் காரணமாக இருந்தது. இதன் காரணமாக, இந்து மதம் செழிப்பாக தனது தொடக்கத்தை இங்கு நிறுவியது.

சிங்கப்பூரில் தங்களது மதத்தை அறிமுகப்படுத்தியதிலும், பாதுகாத்ததிலும் தொழிலாளர்கள் பெருமளவு பொறுப்புடையவர்களாக இருந்தபோதிலும், பிற்காலங்களில், பணக்கார இந்து வணிகர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்புகள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டவும், புனரமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட இந்துக் கோயில்கள் சமுதாயத்தை ஒற்றுமையுடன் வைக்கவும், தாய்நாட்டைப் பிரிந்து வாழும் மக்களுக்கு அந்நிய நாட்டில் ஒரு பாதுகாப்புணர்வைத் தரும் ஒரு அமைப்பாகவும் உதவின.

முதல் இந்துக் கோயில்[தொகு]

சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில், சிங்கப்பூர்

சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயிலான சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில் 1827 ஆம் ஆண்டில் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரின் எழுத்தராக இருந்த நாராயண பிள்ளை என்பவரின் முயற்சியால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் இந்துக் கடவுளும் அன்னை பராசக்தியின் அவதாரமாகவும், நோய்களை எல்லாம் குணப்படுத்தும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் நம்பப்படும் மாரியம்மனுக்காக எழுப்பப்பட்டது. நாராயண பிள்ளை முதலில் 1823 ஆம் ஆண்டில் தான் வாங்கிய நிலத்தில், மரத்தால் எழுப்பப்பட்ட கூரை வேய்ந்த குடிசை ஒன்றில் இந்த ஆலயத்தை எழுப்பினார். தற்போதுள்ள கோயிலானது, 1863 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

கட்டிடக்கலை[தொகு]

சிங்கப்பூரில் உள்ள இந்துக் கோயில்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டன எனலாம். அதிலும் குறிப்பாக இந்தியாவின், தமிழ்நாட்டில் கட்டப்படும் கோயில்களின் பாணியில் இவை அமைந்திருந்தன. இந்த அமைப்பின்படி, நுழைவு வாசலானது கோபுரங்கள் எனப்படும் உயர்ந்த கட்டிட அமைப்பைக் கொண்டவையாக இருந்தன. கோபுரங்களில் சிக்கலான பட்டைகள், மறைபுதிரான சிற்பங்கள், வண்ணப்பூச்சுக்கள், சுவரோவியங்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ato Quayson et al. (2013), A Companion to Diaspora and Transnationalism, ISBN 978-1405188265, Wiley-Blackwell, pp. 405-406
  2. Edwin Lee (2008), Singapore: The Unexpected Nation, Institute of Southeast Asian Studies, ISBN 978-9812307965, pp. 34-35.
  3. 3.0 3.1 3.2 Edwin Lee (2008), Singapore: The Unexpected Nation, Institute of Southeast Asian Studies, ISBN 978-9812307965.
  4. 4.0 4.1 Jean Abshire (2011), The History of Singapore, ISBN 978-0313377426, pp. 66-78.
  5. Table: Religious Composition by Country, in Numbers Pew Research Center (2012)
  6. Lai Ah Eng, Religious Diversity in Singapore, Institute of Southeast Asian Studies, 2008.
  7. "by Ethnic in Singapore 2015"". Archived from the original on 2017-08-13. பார்க்கப்பட்ட நாள் 2017-11-19.