சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிக்கையா நாயக்கர் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி
Chikkaiah Naicker College
உருவாக்கம்1954
அமைவிடம், ,
வளாகம்நகர்பகுதி
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.cncollege.in

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி (Chikkaiah Naicker College) என்பது தமிழ்நாட்டின், ஈரோடில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது ஆகும்.[1] இந்த கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

சிக்கையா நாயக்கர் கல்லூரியானது ஈரோடு நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும், இது கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியாகும். இக்கல்லூரியானது பெரியார் ஈ. வே. இராமசாமியின் வழிகாட்டுதலின் பேரில், மகாஜன பள்ளிக் குழுமத்தால் பொதுமக்களிடம் இருந்து நிலம் மற்றும் பணமாக பெறப்பட்ட நன்கொடைகள், உதவியால் 1954 சூலை 12 ஆம் நாள் நிறுவப்பட்டது. 52 ஏக்கர் பரப்பில் முதலில் "மகாஜன கல்லூரி" என்று பெயரில் துவக்கப்பட்ட இக்கலூரி 1959 இல் சிக்கய்ய நாயக்கர் மகாஜனக் கல்லூரி என்றும், 1970 இல் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி என்றும் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 150 மாணவர்களுடன் சிறியதாக துவக்கப்பட்ட இக்கல்வி நிலையமானது, அறுபது ஆண்டுகளில் 1200 மாணவர்கள் பயிலக்கூடியதாகவும், பட்ட மேற்படிப்புகளை வழங்குவதாகவும், ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இங்கு 11 இளங்கலை படிப்புகளும், 03 முதுகலைப் படிப்புகளும், பட்டைய படிப்புகள், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி திட்டங்களைக் கொண்டுள்ளது.

இக்கல்லூரியானது பல தசாப்தங்களாக மாநிலத்தின் ஒரு முக்கிய கல்லூரியாக இருந்துவந்துள்ளது. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள ஆளுநருமான திரு. கே. சதாசிவம் உட்பட பல புகழ்பெற்ற மாணவர்கள் இந்த நிறுவனத்தின் இருந்து வந்தவர்களே.

இக்கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்புகள் 1983 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டன.

மகாஜன பள்ளிக்குழுமம் சிக்கய்ய நாயக்கர் மேலாண்மைக் குழுமம் என்ற பெயரில் ஒரு குழுமத்தை உருவாக்கி பதிவு செய்தது. இச்சங்கம் காலப் போக்கில் செயல்படாததால், ஈரோடு மாவட்ட பதிவாளர் அதன் பெயரை சங்கங்களின் பட்டியலில் இருந்து 1995 மே 3 அன்று அறிவிப்பு வெளியிட்டார். இதனால் சங்கம் கலைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கல்லூரியானது அரசு உதவி பெறும் நிறுவனமாக இருந்தாலும், கடந்த 17 ஆண்டுகளாக (1998 முதல்) தமிழக அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. 2022 ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு செய்த சட்டத் திருத்தத்தின் மூலம் கல்லூரி முழுமையாக அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது.[2]

அங்கீகாரம்[தொகு]

கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் 'என்ஏசிசி'யால் 'ஏ' தரச் சான்றை பெற்றுள்ளது [3]

துறைகள்[தொகு]

இக்கல்லூரியில், தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, வணிகவியல், பொருளியல், இயற்பியல், தாவரவியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, கணிதவியல், மேலாண்மையியல் என 13க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Bharathiar University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. R, Rajkumar (2022-01-10). "ஈரோடு மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  3. "Chikkaiah Naicker College, Erode - 4". Archived from the original on 2018-08-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]