சாப்டூர்

ஆள்கூறுகள்: 9°41′N 77°35′E / 9.69°N 77.59°E / 9.69; 77.59
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாப்டூர்
சாப்டூர்
இருப்பிடம்: சாப்டூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°41′N 77°35′E / 9.69°N 77.59°E / 9.69; 77.59
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


சாப்டூர் (Saptur) இந்தியாவின் தமிழக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பழைய மதுரை (Madura) சமஸ்தானத்தின் பாளையங்களில் ஒன்று.

வரலாறு[தொகு]

சாப்டூர், 72 அங்கீகரிக்கப்பட்ட பழைய மதுரை பாளையங்களில் ஒன்று. இது தற்போதைய மதுரை மாவட்டத்தின் தே. கல்லுப்பட்டியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரானது 1859ல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.[4]

பெயர்க் காரணம்[தொகு]

சாப்டூர் என்பது சாப டூர் என்னும் தெலுங்கு சொல்லில் இருந்து வந்துள்ளது. சாப என்றால் கம்பிளி என்று தெலுங்கில் பொருள். ராஜகம்பள இன மக்கள் அக்காலகட்டத்தில் கம்பிளி என்னும் போர்வையினை தங்களின் மீது அணிந்து இருப்பர். எனவே இவ்வூருக்கு சாப்டூர் என்று பெயர் வந்தது. இவ்வூரானது காமய நாயக்கனூர் என்றும் முன்பு அழைக்கப்பட்டுள்ளது.

புவியியல் அமைப்பு[தொகு]

9.69oN 77.59 oE ல் இவ்வூர் அமைந்துள்ளது.

கோவில்கள்[தொகு]

  1. சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில்
  2. கும்பேஷ்வரன் கோவில்.
  3. பூர்விக மாரியம்மன் கோவில்.
  4. ஆனந்த மாரியம்மன் கோவில்.
  5. முத்தாளம்மன் கோவில்.
  6. பச்சைமலையப்பன் கோவில்.
  7. நாகைய சாமி கோவில்.
  8. பெத்தனசாமி கோவில்.
  9. கன்னிமார் கோவில்.
  10. சிறீ சத்ய சாய் பீடம்.
  11. ஸ்ரீ பொன்னழகு அம்மன் கோவில்.

மேலும் சில காவல் தெய்வங்களின் கோவில்களும் உண்டு.

படத்தொகுப்பு[தொகு]

தலை வெட்டித் துரை[தொகு]

மதுரை மன்னர் விஷ்வநாத நாயக்கரின் (கிபி 1558 முதல் 1563) தென்னகத் தளபதியை, சிவகிரி பாளையக்காரரான வரகுணராம பாண்டியன் கொன்று விட்டு காட்டுக்குள் தப்பி சென்று விட்டார். அவரை தேடி மன்னரின் படைகள் வருவதை அறிந்த அவரது மனைவி தனது குழந்தைகளை சாப்டூர் ஜமீனில் ஒப்படைத்து, அவர்களை வளர்த்து சிவகிரிக்கு வாரிசாக்குங்கள் என கேட்டுக்கொண்டார், அதை சாப்டூர் பாளையக்காரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

சிவகிரியின் பாளையக்காரர்களின் வாரிசுகளைத் தேடி, மன்னர் படை பேரையூரில் முகமிட்டார்கள். படையின் தளபதிகள் மட்டும் குதிரைகளில் சாப்டூர் வந்தனர்.குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிய சிவகிரியின் வாரிசுகளை தளபதிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.அப்போது தளபதிகளுடன் வந்த துபாஷி, ஐயா, பாளையக்காரர்கள் வெள்ளி தட்டில் தான் சாப்பிடுவார்கள் மற்றவர்களை சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி இதன் மூலம் நாம் சிவகிரியின் வாரிசுகளை கண்டறியலாம் என கூறினார். ஆனால் நடந்தது வேறு அனைவருக்கும் வெள்ளி தட்டில் சாப்பாடு பரிமாரப்பட்டது.அதனால் அவர்களால் சிவகிரியின் வாரிசுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.அதன் பிறகும் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு பெரியவர்கள் ஆனாதும் சிவகிரிக்கு சென்றார்கள்.

இதற்கிடையில் சிவகிரி வாரிசுகளுக்கு ஆதாரவு அளித்த சாப்டூர் பாளையக்காரர் நாகயசாமி காமய நாயக்கரை, மன்னர் படைகள் சங்கரன் கோயிலில் பிடித்தது.மன்னர் அவர் தலையை துண்டிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, அவர் தலையை துண்டிக்கும் முன் கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது தலையை நானே வெட்டிக் கொள்கிறேன் என்று கூறி அதை செய்து இருக்கிறார்.அதன்பின் அவர் தலை வெட்டி நாகயசாமி காமய நாயக்கர் என அழைக்கப்பட்டிருக்கிறார்.சாப்டூர் மக்கள் அவரை தலை வெட்டித் துரை என்று இன்றும் கடவுளில் ஒருவாராக வழிபடுகிறார்கள்.

இவரின் சாமதி இன்றும் சங்கரன் கோயிலில் இருக்கிறது. ஆண்டிற்கு ஒரு முறை அவரை கும்பிடுகிறார்கள்.

திருவிழாக்கள்[தொகு]

  • ஆடி அமாவாசைத் திருவிழா

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

  • பங்குனிப் பொங்கல் திருவிழா

வருடத்தின் பங்குனி மாதம் வளர்பிறையில் இந்த பங்குனிப்பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது . இது, சாப்டூரின் மிக முக்கியத் திருவிழா ஆகும். மாரியம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழா நடைபெறும் பொழுது உலகமெங்கும் வசிக்கும் சாப்டூரின் மக்கள் சாப்டூருக்கு வந்து தங்கள் சொந்தங்களுடன் இணைந்து இத்திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். அனைத்து விதமான நேர்த்திக் கடன்களும் இந்த மூன்று நாட்களில் அம்மனுக்குச் செலுத்தப்படும். முக்கியமான மூன்றாம் நாளன்று தங்கள் மாமன் முறை உறவினர் மேல் மஞ்சள் நீரை ஊற்றியும் மற்றும் வண்ணப்பொடிகளைத் தூவியும் தங்கள் மகிழ்ச்சியினை மக்கள் வெளிப்படுத்துவார்கள்.

  • சாப்டூர் சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். சமயப் பிரிவுகள் இரண்டின் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் நடைபெறுகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது[சான்று தேவை]. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம் [சான்று தேவை].

  • முத்தாள் அம்மன் திருவிழா

திருவிழாப் படங்கள்[தொகு]

சாப்டூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்[தொகு]

சாப்டூர் அரண்மனை

சுமார் நானுறு வருட பழமை மற்றும் பாரம்பரியம் மிக்க அரண்மனை உள்ளது அனுமதி பெற்று இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை பார்வையிடலாம்.

கேணி[தொகு]

சாப்டூர் கேணி

சாப்டூரின் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஓர் அழகிய நீர்வீழ்ச்சி மற்றும் நீர்தேக்கம் கேணி ஆகும். இது பார்ப்பதற்கு ஓர் நீச்சல் குளம் போல இருக்கும். எனவே மக்கள் இங்கு நீந்தி மகிழ்வார்கள். மேலும் கேணிக்கு செல்வதற்கு மலைக்குள்ளே அரை கிமீ தொலைவு செல்ல வேண்டும். இந்த கேணி நீர் தோன்றிய இடத்தில் இருந்து பல்வேறு மூலிகைகளில் பட்டு வருவதால் இதற்கு மருத்துவ குணமும் உண்டு. கேணிக்கு செல்லும் பாதையில் ஒரு பெரிய மாந்தோப்பும், பல பனை மரங்களையும் காணலாம்.

பரமசிவன் பாறை[தொகு]

இதுவும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய சுற்றுலாத் தலம், இங்கு பாறைகளின் அடியிலிருந்து தண்ணீர் வரும் விதம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. மேலும் இங்கு தண்ணீர் ஒரு சறுக்கு பாறையில் செல்லும்.

விவசாயம்[தொகு]

நெல், கரும்பு, பருத்தி, மா, தென்னை, கடலை ஆகியவை அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://princelystatesofindia.com/Polegars/saptur.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்டூர்&oldid=3655269" இலிருந்து மீள்விக்கப்பட்டது