அ. இராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாத்தான்குளம் அ. இராகவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாத்தான்குளம் அ.இராகவன்

சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன் (ஏப்ரல் 22, 1902 - 1981), நுண்கலை ஆய்வாளர், வல்லுனர், எழுத்தாளர், ஆசிரியர். சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம், இஸ்லாமிய மக்கள் மீதான ஈடுபாடு, பெண் கல்விக்கான பள்ளிகள் ஆகியவற்றில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்; சிப்பிகள், சங்குகள், படிமங்கள், விளக்குகள், இசை கருவிகள், கப்பல் தொடர்பான பொருட்கள் மற்றும் வரைபடங்கள், ஆடைகள், மூலிகைகள் இவை தொடர்பான விவரங்கள், படங்கள், பொருட்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்; இராகவன், தமிழ்நாட்டில் மிக அதிகமாக பழங்காசுகள் சேகரித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இன்றைய தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அருணாசலக் கவிராயர் ஆவுடையம்மாள் தம்பதிகளின் மகனாக[1] 1902 ஏப்ரல் 22 அன்று பிறந்தவர் இராகவன். ஆசிரியப் பயிற்சி பெற்று 1924 முதல் 1930 வரை சாத்தான்குளத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலங்களில் பெரியார், கா. சுப்பிரமணிய பிள்ளை, திரு.வி.க., பா. தாவூத்ஷா ஆகியவர்களோடு இவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.[2] சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாட்டோடு செயல்பட்டார்.

1930-இல் ஈரோட்டில் நிறுவப்பெற்ற பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[2] இவரது மேற்பார்வையில் குடியரசுப் பதிப்பகம் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. 1935இல் இராகவனது "பெண்ணுரிமையும் மதமும்" என்ற சிறு நூல் வெளிவந்தது. மதங்கள், பெண்களை எவ்வாறு நடத்துகின்றன என்ற விவாதத்தை முதன்முதலில் இந்நூல் முன் வைத்தது. மறுமணம், காதல்மணம், சொத்துரிமை, விவாகரத்து, குழந்தைமண மறுப்பு போன்றவை குறித்தும் இந்நூலில் மிக விரிவாக எழுதியுள்ளார். இராகவனது "கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?" என்ற நூலில் "கடவுளர் கதைகள்" எவ்வகையில் மூட நம்பிக்கைகளைப் பரப்புகின்றன என்பது குறித்து கூறியுள்ளார். இராகவன் எழுதப்பட்ட நூல்கள் தமிழர்களின் புழங்குபொருள் பண்பாட்டை அறிவதற்கு உதவுகின்றன.[2]

தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில்நுட்ப வரலாறு, தொல்பொருள் ஆய்வு வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வுசெய்து விரிவாக நூல்கள் எழுதியவர். கலைத்துறையில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நூல்களை எழுதியவர்.

வெளியான நூல்கள்[தொகு]

  1. தமிழர் பண்பாட்டில் தாமரை
  2. தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்
  3. தமிழக சாவக கலைத் தொடர்புகள்
  4. இறைவனின் எண்வகை வடிவங்கள்
  5. வேளாளர் வரலாறு
  6. தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலை
  7. நம்நாட்டுக் கப்பற் கலை
  8. தமிழ்நாட்டு அணிகலன்கள்
  9. தமிழ்நாட்டு படைகலன்கள்
  10. தென்னிந்திய கோயில் கட்டிடக்கலைகள்
  11. இசையும் யாழும்
  12. கோ நகர் கொற்கை
  13. ஆதிச்சநல்லூரும் பெருநைவெளி நாகரீகமும்
  14. குடியரசுக் கட்டுரைகள்
  15. அறிவு இதழ்க் கட்டுரைகள்
  16. ஆய்வுக் கட்டுரைகள்

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. நெல்லைத் தமிழ்ச் சான்றோர்கள், ஆசிரியர் இரா.நல்லையா ராஜ், காவ்யா வெளியீடு, சென்னை முதற்பதிப்பு 2011.
  2. 2.0 2.1 2.2 அரசு (6 திசம்பர் 2004). "இருளின் மீது வெளிச்சத்தை பாய்ச்சியவர் -". தமிழ் கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._இராகவன்&oldid=3680324" இலிருந்து மீள்விக்கப்பட்டது