உள்ளடக்கத்துக்குச் செல்

சலாகுத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலாகத்தீன்
வெற்றியை வழங்கும் மன்னன்
சிரியா மற்றும் எகிப்தின் சுல்தான்
இரு புனித மசூதிகளின் பொறுப்பாளர்
செல்யூக்கிய ஆட்சியாளர்களின் சர்புசு தொப்பியுடன் சலாகத்தீன்,[1] போருக்குச் செல்லும் இவரது குறியீடானது நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது[2] : "வெற்றி மன்னன், நன்னடத்தையுள்ள யூசுப் இப்னு அய்யூப்".[1][3] பொ. ஊ. 1190-1191.[3]
எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தான்
ஆட்சிக்காலம்1174 – 4 மார்ச் 1193
முடிசூட்டுதல்1174, கெய்ரோ
முன்னையவர்அல் அதித் (பாத்திமிய கலீபாவாக)
பின்னையவர்
  • அல் அசீசு உதுமான் (எகிப்து)
  • அல் அப்தல் (சிரியா)
பாத்திம கலீபகத்தின் உயரதிகாரி
ஆட்சிக்காலம்26 மார்ச் 1169 – 26 செப்தெம்பர் 1171
முன்னையவர்சிர்குக்
பின்னையவர்பதவி ஒழிக்கப்பட்டது
பிறப்புயூசுப் இப்னு அய்யூப்
அண்.  1137
திக்ரித், மேல் மெசொப்பொத்தேமியா, அப்பாசியக் கலீபகம்
இறப்பு4 மார்ச் 1193 (அகவை 55–56)
திமிஷ்கு, சிரியா, அய்யூப்பிய வம்சம்
புதைத்த இடம்
உமய்யா மசூதி, திமிஷ்கு
துணைவர்இசுமததீன் கதுன்
குழந்தைகளின்
பெயர்கள்
  • அல் அப்தல் இப்னு சலாகத்தீன்
  • அல் அசீசு உதுமான்
  • அசு சாகீர் காசி
  • அல் முவாசம் துரான்சா இப்னு சலாகல்தீன்
அரசமரபுஅய்யூப்பிய அரசமரபு (நிறுவனர்)
தந்தைஅய்யூப் இப்னு சாடி
மதம்சன்னி இசுலாம்
இராணுவப் பணி
போர்கள்/யுத்தங்கள்
  • எகிப்து மீதான சிலுவைப் போர் படையெடுப்புகள்
    • அல்-பபேயின் யுத்தம்
    • அலெக்சாந்திரியா முற்றுகை
    • தமியேத்தா முற்றுகை (1169)
  • கறுப்பினத்தவர்களின் யுத்தம்
  • அய்லா யுத்தம்
  • அலெக்சாந்திரியா யுத்தம்
  • அமா கொம்பு யுத்தம்
  • மாந்திகிசர்து யுத்தம்
  • திமிஷ்கு முற்றுகை (1174)
  • மர்சு அய்யூன் யுத்தம்
  • சேக்கப் போர்டின் முற்றுகை
  • ஏக்கர் தாக்குதல் (1179)
  • பெல்வோயிர் கோட்டை யுத்தம்
  • அல்-புலே யுத்தம்
  • கெரக் முற்றுகை
  • அத்தின் யுத்தம்
  • எருசலேம் முற்றுகை (1187)
  • தயர் முற்றுகை (1187)
  • பெல்வோயிர் கோட்டை முற்றுகை
  • லவோதிசே முற்றுகை (1188)
  • சகியுன் கோட்டை முற்றுகை
  • அல்-சுகுர் முற்றுகை
  • பௌர்சே கோட்டை முற்றுகை
  • சபேத் முற்றுகை (1188)
  • மூன்றாம் சிலுவைப் போர்
    • ஏக்கர் முற்றுகை
    • அர்சுப் யுத்தம்
    • சபா யுத்தம்

சலாகத்தீன் யூசுப் இப்னு அய்யூப்[a] (Salah ad-Din Yusuf ibn Ayyub, அண்.  1137 - மார்ச் 4, 1193, அரபு: صلاح الدين يوسف بن أيوب; குர்தி: سه‌لاحه‌دین ئه‌یوبی) என்பவர் அய்யூப்பிய அரசமரபின் நிறுவனர் ஆவார். மேற்குலகில் பொதுவாக சலாதீன்[b] என்றும் இவர் அறியப்படுகிறார். இவர் ஒரு குர்து குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். எகிப்து மற்றும் சிரியா ஆகிய இரு பகுதிகளின் முதல் சுல்தான் இவராவார். மூன்றாம் சிலுவைப் போரில் ஒரு முக்கியமான நபராக இருந்த இவர் லெவண்டில் இருந்த கிறித்தவ சிலுவைப் போர் அரசுகளுக்கு எதிராக முஸ்லிம் இராணுவ முயற்சிக்குத் தலைமை தாங்கினார். இவரது அதிகாரத்தின் உச்ச நிலையில் அய்யூப்பிய அரசானது எகிப்து, சிரியா, மேல் மெசொப்பொத்தேமியா, ஹெஜாஸ், ஏமன் மற்றும் நூபியா ஆகிய இடங்களில் பரவியிருந்தது.

செங்கிய அரசமரபில் ஒரு குர்திய கூலிப் படைத் தளபதியாகச் சேவையாற்றிய இவரது சிறிய தந்தையான சிர்குக்குடன் சேர்ந்து செங்கிய ஆட்சியாளர் நூரத்தீனின் கட்டளைப்படி 1164-இல் பாத்திமிய எகிப்திற்குச் சாலாதீன் அனுப்பப்பட்டார்.[6] பதின்ம வயது பாத்திமிய கலீபாவான அல்-அதீதிற்கு உயர் அதிகாரியாக சவாரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவுவது என்பது இவர்களது உண்மையான குறிக்கோளாக இருந்தது. சாவர் பதவியில் அமர்த்தப்பட்டதற்குப் பிறகு சிர்குக் மற்றும் சாவருக்கு இடையில் ஓர் அதிகாரப் போட்டியானது நடைபெற்றது. அதே நேரத்தில், கிறித்தவ சிலுவைப் போர் தாக்குதலுக்கு எதிரான இவரது இராணுவ வெற்றிகள் மற்றும் அல்-அதீதுடனான இவரது தனிப்பட்ட நெருக்கம் ஆகியவற்றின் காரணமாக பாத்திமிய அரசாங்கத்தின் தர நிலைகளில் சலாதீன் படிப்படியாக உயர்ந்து கொண்டிருந்தார். சாவர் அரசியல் கொலை செய்யப்பட்டது மற்றும் 1169-இல் சிர்குக் இறந்ததற்குப் பிறகு அல்-அதீத் சலாதீனை உயர் அதிகாரியாக நியமித்தார். தனது பதவிக் காலத்தின் போது ஒரு சன்னி முஸ்லீமான சலாதீன் பாத்திமிய அமைப்பை மாற்றத் தொடங்கினார். 1171-இல் அல்-அதீதின் இறப்பைத் தொடர்ந்து கெய்ரோவை அடிப்படையாகக் கொண்டிருந்த சியா இசுமாயிலி பாத்திமிய கலீபகத்தை பதவியிலிருந்து ஒழித்தார். எகிப்தை பகுதாதுவை அடிப்படையாகக் கொண்ட சன்னி அப்பாசியக் கலீபகத்துடன் மீண்டும் ஒருங்கிணைத்தார்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பாலத்தீனத்தில் இருந்த கிறித்தவ சிலுவைப் போர் வீரர்களுக்கு எதிராக ஊடுருவல்களுக்குச் சலாதீன் தலைமை தாங்கினார். ஏமானை வெற்றிகரமாக வெல்வதற்குக் காரணமாக இருந்தார். எகிப்தில் பாத்திமிய ஆதரவுக் கிளர்ச்சிகளை நிகழாமல் தடுத்தார். 1174-இல் நூரத்தீன் இறந்ததற்குப் பிறகு சீக்கிரமே சிரியா மீதான தன்னுடைய படையெடுப்பைச் சலாதீன் தொடங்கினார். அதன் ஆளுநரின் அழைப்பின் பேரில் திமிஷ்குவுக்குள் அமைதியாக நுழைந்தார். 11175-இன் நடுப்பகுதி வாக்கில் காமா மற்றும் காமா ஆகிய நகரங்களைச் சலாதீன் வென்றார். சிரியாவின் வேள் பகுதிகளின் அதிகாரப்பூர்வ ஆட்சியாளர்களான பிற செங்கிய பிரபுக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தார். 1175-இல் அமா கொம்பு யுத்தத்தில் செங்கியர்களை பின்னர் தோற்கடித்தார். இதற்குப் பிறகு அப்பாசியக் கலீபா அல்-முசுததியால் 'எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தான்' என்று அறிவிக்கப்பட்டார். வடக்கு சிரியா மற்றும் மேல் மெசொப்பொத்தேமியாவில் மேற்கொண்ட படையெடுப்புகளைச் சலாதீன் தொடங்கினார். அசாசின்களால் தன் மீது நடத்தப்பட்ட இரு அரசியல் கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்தார். பிறகு 1177-இல் உள்ளூர் விவகாரங்களைக் கையாளுவதற்காக எகிப்துக்குத் திரும்பி வந்தார். 1182 வாக்கில் அலெப்போவை வென்றதற்குப் பிறகு இசுலாமிய சிரியாவை வெல்லும் முயற்சியைச் சலாதீன் முடித்தார். ஆனால் செங்கிய வலுவூட்டல் பகுதியான மோசுல் நகரைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தார்.

சலாதீனின் தலைமையின் கீழ் அய்யூப்பிய இராணுவமானது 1187-இல் தீர்க்கமான அத்தின் யுத்தத்தில் கிறித்தவ சிலுவைப் போர் வீரர்களைத் தோற்கடித்தது. எருசேலத்தைக் கைப்பற்றியது. லெவண்ட் பகுதியில் முசுலிம் இராணுவ ஆதிக்கத்தை மீண்டும் நிறுவியது. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் கிறித்தவ சிலுவைப் போர் வீரர்களின் எருசேலப் பேரரசு நீடித்திருந்த போதிலும், 1187-இல் அவர்கள் அடைந்த தோல்வியானது இப்பகுதியில் முசுலிம் சக்திகளுக்கு எதிராகக் கிறித்தவ இராணுவ முயற்சிகளில் ஒரு திருப்பு முனையைக் குறித்தது. 1193-இல் சலாதீன் திமிஷ்குவில் இறந்தார். தன்னுடைய தனி நபர் செல்வத்தில் பெரும்பாலானவற்றை தன்னுடைய குடிமக்களுக்குக் கொடையாக வழங்கி விட்டு இறந்தார். உமய்யா மசூதிக்குப் பக்கவாட்டில் ஒரு கல்லறையில் இவர் புதைக்கப்பட்டார். முசுலிம் பண்பாட்டில் இவரது முக்கியத்துவத்துடன் சேர்ந்து குர்திய, துருக்கிய மற்றும் அரபுப் பண்பாட்டிலும் முக்கியமானவராக இவர் போற்றப்படுகிறார். வரலாற்றில் மிகப் பிரபலமான குர்திய நபராக இவர் அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.

இளமைக் காலம்

[தொகு]

சலாதீன் தற்கால ஈராக்கின் திக்ரித்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் "யூசுப்" ஆகும். "சலாகத்தீன்" என்பது லகப் என்று குறிப்பிடப்படும் ஒரு மரியாதைக்குரிய அடைமொழியாகும். இதன் பொருள் "நம்பிக்கையின் நேர்வழி நடப்பவர்" என்பதாகும்.[7] இவரது குடும்பம் குர்தியப் பூர்வீகத்தைக் கொண்டதாகும்.[8][9][10][11][12] நடு ஆர்மீனியாவின் திவின் நகருக்கு அருகில்[13][14] அசுதனகனை இது பூர்வீகமாகக் கொண்டிருந்தது.[9] ஒரு குர்திய கூலிப்படைப் போர் வீரரான நசுமதீன் அய்யூப்பின் மகன் இவர் ஆவார்.[6] இவர் சார்ந்த ரவாதியா பழங்குடியினமானது அந்நேரத்தில் அரபு மொழி பேசிய உலகத்துடன் பகுதியளவுக்கு ஒருங்கிணைந்திருந்தது.[15]

சலாதீனின் சகாப்தத்தின் போது சேக் அப்துல் காதிர் அல்-ஜிலானியைக் காட்டிலும் மிகுந்த செல்வாக்குடைய எந்தவொரு அறிஞரும் இல்லை. அவர் மற்றும் அவரது மாணவர்கள் சலாதீன் மீது வலிமையான தாக்கத்தைக் கொண்டிருந்தனர். இவருக்கு உதவி புரிந்தனர்.[16][17] 1132-இல் மோசுலின் அடா பெக்கான செங்கியின் தோற்கடிக்கப்பட்ட இராணுவமானது அவர்கள் பின் வாங்கும் வழியானது திக்ரித் கோட்டைக்கு எதிரில் டைகிரிசு ஆற்றால் தடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டனர். அங்கே சலாதீனின் தந்தையான நசுமதீன் அய்யூப் சிறைக் காப்பாளராகச் சேவையாற்றி வந்தார். இராணுவம் கடப்பதற்கு அய்யூப் படகுகளை வழங்கினார். திக்ரித்தில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். செல்யூக்கியரிடம் தான் ஆற்றிய சேவைக்காக வடக்கு மெசொப்பொத்தேமியாவின் இராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்டு இருந்த ஒரு முந்தைய கிரேக்க அடிமையான முசாகித்தத்தீன் பிக்ருசு செங்கியருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அய்யூப்பை அதிகாரப்பூர்வமாகக் கண்டித்தார். பிக்ருசுவின் ஒரு நண்பனை அய்யூப்பின் தம்பியாகிய ஆசாத்தத்தீன் சிர்குக் கொன்றதற்குப் பிறகு திக்ரித்திலிருந்து 1137-இல் அய்யூப்பை பிக்ருசு நாடு கடத்தினார். பகாத்தீன் இப்னு சதாத்தின் கூற்றுப் படி இவர்களது குடும்பம் திக்ரித்தில் இருந்து வெளியேறிய அதே இரவில் சலாதீன் பிறந்தார். 1139-இல் அய்யூப்பும், அவரது குடும்பமும் மோசுலுக்கு இடம் பெயர்ந்தது. முந்தைய உதவிக்குக் கைமாறாக இமாதத்தீன் செங்கி பால்பெக்கிலிருந்த தன்னுடைய கோட்டையின் தளபதியாக அய்யூப்பை நியமித்தார். 1146-இல் செங்கியின் இறப்பிற்குப் பிறகு அவரது மகனான நூரத்தீன் அலெப்போவின் அரசப் பிரதிநிதியானார். செங்கியர்களின் தலைவரானார்.[18]

தற்போது திமிஷ்குவில் வாழ்ந்து வந்த சலாதீனுக்கு நகரத்தை மிகவும் பிடித்திருந்தது என்று குறிப்பிடப்படுகிறது. எனினும், இவரது தொடக்க கால குழந்தைப் பருவம் குறித்த தகவல்களானவை அதிகமாக இல்லை.[18] கல்வி குறித்து சலாதீன் "தங்களது மூத்தவர்கள் எந்த வழியில் வளர்க்கப்படுகிறார்களோ அதே வழியில் தான் குழந்தைகளும் வளர்க்கப்படுகிறார்கள்" என்று எழுதியுள்ளார். இவரது சுயசரிதையாளர்களான அன்னே-மேரி எட்டே[19] மற்றும் அல்-வக்ரானி ஆகியோரின் கூற்றுப் படி யூக்ளிடு, கிரேக்க வானியல் நூலான அல்மகேசுது, எண்கணிதம், மற்றும் சட்டம் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு சலாதீனால் பதிலளிக்க முடிந்தது. இவர் கல்வியில் உயர் சிறப்புடையவராக இருந்தார். திருக்குர்ஆன் மற்றும் "சமய அறிவியல்கள்" குறித்த இவரது அறிவே இவரது சம காலத்தவர்களுடன் இவரை இணைத்தது.[20] இவரது படிப்பின் போது இராணுவத்தில் இணைவதைக் காட்டிலும் சமயப் படிப்புகளிலேயே இவர் அதிகமாக ஆர்வம் கொண்டிருந்தார் என பல ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.[21] முதலாம் சிலுவைப் போரின் போது எருசேலமானது கிறித்தவர்களால் கைப்பற்றப்பட்டது சமயம் மீதான இவரது ஆர்வத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு காரணியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[21] இசுலாமுடன் சேர்த்து அரேபியர்களின் மரபு வழிகள், சுயசரிதைகள் மற்றும் வரலாறுகள், மேலும் அரேபியக் குதிரைகளின் மரபு வழிகளையும் சலாதீன் அறிந்திருந்தார். மிகவும் குறிப்பாக அபு தம்மம் எழுதிய அமாசா கவிதை நூலை இவர் வரி வரியாக அறிந்திருக்கக் கூடியவராக இருந்தார்.[20] இவர் குர்தி மற்றும் அரபு மொழிகளைப் பேசினார். துருக்கிய மற்றும் பாரசீக மொழிகளை அறிந்திருந்தார்.[22][23]

தொடக்கக் காலப் படையெடுப்புகள்

[தொகு]
அய்யூப்பிய வம்ச அல்லது செங்கிய வீரர்கள் செல்யூக்-பாணி உடைகளுடன்[24] சர்புசு தொப்பிகளுடன்[25][26] பால்மர் கோப்பையில் (1200–1215)[27]

சலாதீனின் இராணுவ வாழ்வானது இவரது சிறிய தந்தையான ஆசாத்தத்தீன் சிர்குக்கின் பொறுப்பின் கீழ் தொடங்கியது. திமிஷ்கு மற்றும் அலெப்போவின் செங்கிய எமீரான நூரத்தீனின் கீழான ஒரு முக்கியமான இராணுவத் தளபதியாகச் சிர்குக் திகழ்ந்தார். சலாதீனின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர் இவர் தான். 1163-இல் பாத்திமா கலீபக கலீபாவான அல்-அதீதுக்கு உயர் அதிகாரியாக இருந்த சவார் அவருடைய எதிரி திர்காமால் எகிப்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார். சக்தி வாய்ந்த பானு ருசைக் பழங்குடியினத்தின் ஓர் உறுப்பினர் திர்காம் ஆவார். நூரத்தீனிடமிருந்து இராணுவ உதவியை அவர் வேண்டினார். நூரத்தீன் அதற்கு ஒப்புக் கொண்டார். 1164-இல் திர்காமுக்கு எதிரான சவாரின் போர்ப் பயணத்துக்கு உதவுவதற்காக சிர்குக்கை அவர் அனுப்பினார். 26 வயதான சலாதீன் அவர்களுடன் சென்றார்.[28] சவார் வெற்றிகரமாக மீண்டும் உயர் அதிகாரியாகப் பதவியில் அமர வைக்கப்பட்டதற்குப் பிறகு 30,000 தங்க தினார்களுக்குப் பதிலாக எகிப்திலிருந்தது சிர்குக் தன் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென அவர் வேண்டினார். ஆனால், சிர்குக் மறுத்தார். தான் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பது நூரத்தீனின் எண்ணம் என்று குறிப்பிட்டார். இந்தப் படையெடுப்பில் சலாதீனின் பங்கானது சிறியதாக இருந்தது. கிறித்தவ சிலுவைப் போர் வீரர்கள் மற்றும் சவாரின் துருப்புக்களில் ஒன்று இந்தப் படையால் பில்பைசு நகர முற்றுகைக்கு முன்னர் அங்கிருந்த பொருட்களைச் சேகரிக்க சிர்குக் சலாதீனுக்கு ஆணையிட்டார் என்பது அறியப்பட்ட ஒன்றாகும்.[29]

பில்பைசு சூறையாடப்பட்டதற்குப் பிறகு கிறித்தவ சிலுவைப் போர்-எகிப்தியப் படையும், சிர்குக்கின் இராணுவமும் கீசாவுக்குச் சற்று மேற்கில் நைல் நதியின் பாலைவன எல்லையில் அல்-பபேயின் யுத்தத்தில் சண்டையிட்டன. சலாதீன் இதில் ஒரு முக்கியப் பங்காற்றினார். செங்கிய இராணுவத்தின் வலது பக்கப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். அதே நேரத்தில் குர்தியரின் ஒரு படையானது இடது பக்கப் பிரிவாக இருந்தது. சிர்குக் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். எனினும், அக்கால முசுலிம் ஆதாரங்கள் மையத்தில் சலாதீன் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், தோற்று ஓடுவது போல் நடிப்பதன் மூலம் எதிரிகளைப் பொறிக்குள் சிக்க வைக்க வேண்டும் என்று அவருக்கு ஆணையிடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகின்றன. கிறித்தவ சிலுவைப் போர் படையானது சிர்குக்கின் துருப்புகளுக்கு எதிராக தொடக்க வெற்றியைப் பெற்றது. எனினும், நிலப்பரப்பானது அவர்களது குதிரைகளுக்கு மிக மலைப் பாங்கானதாகவும், மணற்பாங்கானதாகவும் இருந்தது. சலாதீனின் பிரிவைத் தாக்கும் போது கிறித்தவ சிலுவைப் போர் வீரர்களின் தளபதியான சீசரியாவின் கியூக் பிடிக்கப்பட்டார். தங்களது முதன்மையான நிலைக்குத் தெற்கே சிறிய பள்ளத்தாக்குங்களில் சிதறிச் சண்டையிட்டதற்குப் பிறகு செங்கிய மையப் படையானது தாக்குதலுக்குத் திரும்பியது. பின்புறத்தில் இருந்து சலாதீன் அதனுடன் இணைந்து கொண்டார்.[30]

யுத்தமானது ஒரு செங்கிய வெற்றியில் முடிவடைந்தது. "பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகச் சிறந்த வெற்றிகளில்" ஒன்றில் சிர்குக்கு உதவியதாக சலாதீன் பாராட்டப்பட்டார் என்று அலி இப்னு அல்-ஆதிர் எழுதியுள்ளார். செங்கிய வீரர்களில் அதிகமானோர் கொல்லப்பட்டு இருந்தும், இந்த யுத்தமானது பெரும்பாலான ஆதாரங்களால் ஒரு முழுமையான வெற்றியாகக் கருதப்படாது இருந்த போதும் இவ்வாறான கருத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். சலாதீனும், சிர்குக்கும் அலெக்சாந்திரியாவை நோக்கி நகர்ந்தனர். அங்கு அவர்கள் வரவேற்கப்பட்டு, பணமும், ஆயுதங்களும் கொடுக்கப்பட்டு, ஒரு தளம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.[31] நகரை முற்றுகையிட முயற்சித்த ஒரு பெரிய கிறித்தவ சிலுவைப் போர்-எகிப்தியப் படையை எதிர் கொண்டிருந்த போது சிர்குக் தனது இராணுவத்தைப் பிரித்தார். அவரும், அவரது படைகளில் பெரும்பாலானவையும் அலெக்சாந்திரியாவில் இருந்து பின் வாங்கின. அதே நேரத்தில், சலாவுதீனுக்கு நகரத்தைக் காக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அங்கு சலாதீன் முற்றுகையிடப்பட்டார்.[32]

சலாதீனின் நாணயம், சாசானிய-பாணி மெர்லோன் மகுடத்தைச் சூட்டியுள்ளார்,[33] ஆண்டு பொ. ஊ. 1182/3.[34]

எகிப்தில்

[தொகு]

எகிப்தின் உயரதிகாரியாக

[தொகு]
எகிப்தில் சலாதீனின் யுத்தங்கள்
ஒரு கேடயத்துக்குள் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் சோதனை முறையிலான ஒரு குறுக்குவில். சலாதீனுக்காக முர்தி இப்னு கலி இப்னு முர்தி அல்-தர்சுசியால் எழுதப்பட்ட தப்சீரா என்னும் நூலில் உள்ளதன் படி. இது பிந்தைய பாத்திமிய அல்லது தொடக்க கால அய்யூப்பிய காலத்தைச் சேர்ந்ததாகும். அண். 1170 பொ. ஊ. (எம். எஸ். அன்ட்.264, எஃப்.117, போத்லேயியன் நூலகம், ஆக்சுபோர்டு, ஐக்கிய இராச்சியம்).[35]

சவார் மற்றும் எருசேலத்தின் முதலாம் அல்மரிக் ஆகியோருடன் எகிப்து மீதான ஓர் அதிகாரப் போட்டியில் சிர்குக் மூழ்கியிருந்தார். இதில் சவார் அல்மரிக்கின் உதவியை வேண்டினார். 1169-இல் சவார் சலாதீனால் அரசியல் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அதே ஆண்டு பிறகு சிர்குக் இறந்தார்.[36] அவரது இறப்பைத் தொடர்ந்து அல்-அதீதின் உயர் அதிகாரி பதவிக்கு ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நபர்கள் கருதப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் குர்தி இனத்தவர்களாக இருந்தனர். அவர்களது அரசியல் வாழ்வில் அய்யூப்பிய குடும்பத்தின் செயல்பாடுகளை வடிவமைத்ததாக அவர்களது இன ஒத்துணர்வு உருவானது. சலாதீனும், அவரது நெருங்கிய உதவியாளர்களும் துருக்கிய செல்வாக்கு குறித்து அறிந்திருந்தனர். துருக்கியரான எமீர் குத்பத்தீன் அல்-அத்பானி உயர் அதிகாரி பதவிக்குப் போட்டியிட்டார். அவர் ஒரு தருணத்தில் சலாதீனின் ஒரு குர்திய உதவியாளரான இசா அல்-அக்காரியிடம் விலகிக் கொள்ளுமாறும் "நீயும், சலாதீனும் குர்தியர்கள் துருக்கியர்களின் கைகளில் அதிகாரம் வருவதற்கு நீங்கள் விடமாட்டீர்கள்" என்று வாதிட்டார்.[37] நூரத்தீன் சிர்குக்கின் இறப்பிற்குப் பின் யார் தளபதி என்பதை முடிவு செய்தார். ஆனால் அல்-அதீத் உயர் அதிகாரியாக சவாரின் இடத்தில் சலாதீனை நியமித்தார்.[38]

பேரரசை நிறுவுதல்

[தொகு]

எகிப்து

[தொகு]
சலாகுத்தீன் உட்சத்தில் அய்யூபிட் பேரரசு
சலாகுத்தீன் உட்சத்தில் அய்யூபிட் பேரரசு

சலாகுத்தீன் சிரியப் படையில் சேர்ந்தபொழுது செருசலேம் முதலாவது அமல்ரிக் என்ற இலத்தீன் கிறித்தவரால் ஆளப்பட்டது. இவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் எகிப்தைக் கொண்டுவரும் பொருட்டு, அதன் மீது பல முறைப் படையெடுத்தார். அப்போது எகிப்தைப் பாத்திம கலிபாக்கள் வழிவந்த ‘சாவார்’ என்ற மன்னர் ஆண்டு வந்தார். சாவாருக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்த சிரிய தேசத்துப் படைக்கு சலாவுத்தீனின் சிறிய தந்தை ஆசாத்துல் சீர்க் தலைமை தாங்கினார். இவரே சலாகுத்தீனைச் சிரியப் படையில் சேர்த்துவிட்டவர் ஆவார். இந்நிலையில் சீர்க்கின் மறைவு மற்றும் சாவாரின் அதிகாரக்குறைவு காரணமாக 1169 ஆம் ஆண்டு சலாகுத்தீன், சிரிய மற்றும் பாத்திம கலிபாக்களின் கூட்டுப்படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தனது 31 ஆம் வயதில் இந்த நிலைக்கு வந்த சலாகுத்தீன், தனது நிர்வாகத் திறமை, போர்முறைகள் மற்றும் அஞ்சாத குணம் ஆகியவற்றின் காரணமாக எகிப்து நாட்டின் தலைவராக மாறினார். இவரே சன்னி இசுலாத்தை எகிப்தில் பரப்பியவர்.[39] இதன் பிறகு 1171-ம் ஆண்டு ஏற்பட்ட கலிபாவின் மரணத்தைத் தொடர்ந்து, இவர் எகிப்தின் பேரரசராக முடிசூட்டப்பட்டார். இவரின் ஆட்சியின் கீழ், எகிப்தின் படைவலிமை மற்றும் பொருளாதாரம் வேகமாகப் பெருகியது.

இதன் பிறகு இவர் தனது மனதில் சிரியா, இராக் மற்றும் செருசலேம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாபெரும் இசுலாமியப் பேரரசை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார். ஆயினும் தனது தந்தையின் அறிவுரைப்படி, தனது மன்னனான சிரிய சுல்தான் நூறுதீனுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இவர் ஈடுபடவில்லை. இறுதியாக நூறுதீனின் மரணத்திற்குப் பிறகே சிரியாவை தனது பேரரசுடன் இணைத்தார்.

சிரியா

[தொகு]
சலாகுத்தீனின் கோட்டை, சிரியா

இவ்வாறு 1174-ம் ஆண்டு நூறுதீனின் மரணத்திற்குப் பிறகு, சலாகுத்தீனின் படைகள் டமாசுக்கசு நகருக்குள் நுழைந்தன. அங்கு சிரிய மக்கள் சலாகுத்தீனையும் அவரது படைகளையும் வரவேற்றனர். பின்பு தனது முன்னால் மன்னரான நூறுதீனின் விதவை மனைவியான இசுமத் உல்தீன் காத்துன் என்பவரை மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் எளிதில் சிரிய நாட்டைத் தனது அயூபிட் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இதன் பிறகு சிரிய பேரரசிலிருந்து பிரிந்து போன அலிப்போ மற்றும் மோசுல் நகரங்களையும் முறையே 1176 மற்றும் 1186 ஆகிய ஆண்டுகளில் தனது பேரரசுடன் இணைத்தார். இதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் இவரை இரண்டு முறைகள் கொலை செய்ய முயன்றனர். குறிப்பாக இரண்டாவது முறை மயிரிழையில் உயிர் தப்பினார்.

இவர் சிரியாவை ஆண்ட காலத்தில் பலமுறை சிலுவைப்போர்களைச் சந்தித்தார். ஒவ்வொரு முறையும் இவர் எதிரிப் படைகளை முறியடித்து ஐரோப்பாவிற்குத் திருப்பி அனுப்பினார். ஆனால் 1177-ம் ஆண்டு நவம்பர் 25-ம் நாள் நடைபெற்ற போரில் மட்டும் இவர் தோல்வியுற்றார். இந்தப் போரில் செருசலேம் நகரை ஆண்ட நாலாம் பால்டுவின் மற்றும் ரோனால்டு ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்ட இவர், இறுதியில் தோல்வியுற்று தனது படையில் பத்தில் ஒரு பகுதி வீரர்களோடு எகிப்து திரும்பினார்.[40]

சிலுவைப்போர்கள்

[தொகு]

இதன் பிறகு தனது படை வலிமையைப் பெருக்குவதில் ஈடுபட்ட சலாகுத்தீன் 1180-ம் ஆண்டு சிலுவைப்போராளிகளின் நகரங்களைத் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, முசுலிம் வணிகர்களுக்கும், புனித தலங்களுக்கும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இதனால் முசுலிம் வணிகர்களுக்கான முதன்மைப் பாட்டையில்(சாலை) ஒரு படையை சலாகுத்தீன் நிறுவினார். மேலும் 1182-ம் ஆண்டு மிகப்பெரிய படையுடன் சென்று பெய்ரூட் நகரையும் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, இசுலாமியர்களின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனா ஆகியவற்றைத் தாக்கினார்[41]. இதனால் கோபமுற்ற சலாகுத்தீன், ரோனால்டின் தலைநகரை 1183 மற்றும் 1184ஆகிய ஆண்டுகளில் தாக்கினார். இதன் பின்பும் ரோனால்டு 1185-ம் ஆண்டு புனித கச் (Haj) யாத்திரை சென்றவர்களின் வாகனங்களைத் தாக்கினார்[41]. இவ்வாறு சலாகுத்தீன் போர் நெறிமுறைகளைப் பின்பற்றி ரோனால்டின் படைகளை மட்டுமே தாக்கிய பொழுதும் கூட, ரோனால்டு அதற்குப் பதிலடியாக அப்பாவி முசுலிம்களை தாக்குவதயே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.

இதன் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த சலாகுத்தீன், மோசுல் நகரை ஆக்கிரமித்திருந்த மசூத் என்பவனையும் அவனுக்குத் துணையாக வந்த அசர்பைசான் கவர்னரையும் 1185 ஆம் ஆண்டு சாக்ரோல் மலைத்தொடரில் சந்தித்து, அவர்களின் படையை முறியடித்தார். பின்பு தனது பார்வையை மீண்டும் சிலுவைப்போராளிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் செலுத்தியவர், அதில் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். தொடர்ந்து 1187-ம் ஆண்டு சூலை 4-ம் நாள் காத்தின் என்ற இடத்தில் லூசிஞ்ன் கை, கிங் கான்சேர்ட் மற்றும் மூன்றாம் ரேமன்ட் ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்டார். கடல் போன்ற இந்த கூட்டுப்படையை எதிர்கொண்ட சலாகுத்தீனின் படை அதை முறியடித்து வெற்றிபெற்றது. இந்த வெற்றி சிலுவைப்போர்களில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து போரில் தோல்வியுற்று பிடிபட்ட லூசிஞ்ன் கை மற்றும் ரோனால்டு ஆகியோர் சலாகுத்தீனின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் லூசிஞ்ன் கையை மன்னித்த சலாகுத்தீன், அவரைச் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். ஆனால் தொடர்ந்து முசுலிம் மக்களுக்குத் தொல்லை கொடுத்ததாலும் இசுலாமியப் புனிதத் தலங்களைத் தாக்கியதாலும் ரோனால்டுக்கு மரண தண்டனை விதித்தார்[42]

இந்த ஒருவரைத் தவிர மற்ற எதிரிகள் யாரையும் சலாகுத்தீன் தன் வாழ்நாளில் கொன்றதில்லை. சிறையில் அடைக்கப்பட்ட லூசிஞ்ன் கையின் மனைவி சலாகுத்தீனைக் கடிதம் மூலம் மன்றாடிக் கேட்டுக்கொண்டதின் பேரில், 1188-ம் ஆண்டு லூசிஞ்ன் கை விடுதலை செய்யப்பட்டு தனது மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செருசலேம் கைப்பற்றப்படல்

[தொகு]

இதன் பிறகு செருசலேம் நகரை முற்றுகையிட்ட சலாகுத்தீனின் படை, அங்கு உள்ள பிரெஞ்சுப் படைகளைச் சரணடையும்படி கேட்டுக்கொண்டது. அவர்கள் அதை மறுக்கவே 1187-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். ஆனபோதிலும் சலாகுத்தீன் அங்கு பிடிபட்ட வீரர்களையும், மக்களையும் துன்புறுத்தாமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழி செய்தார்[43]. இதன் பிறகு சிலுவைப்போராளிகளின் வசம் எஞ்சி இருந்தது டயர் என்ற நகரம் மட்டுமே.இதை காண்ரட் என்பவர் ஆட்சிசெய்துகொண்டு இருந்தார். மேலும் சலாகுத்தீனால் விடுதலை செய்யப்பட்ட லூசிஞ்ன் கையும் தனது மனைவியுடன் இங்குதான் வசித்து வந்தார். இதன் மீது 1188 -ம் ஆண்டு படையெடுத்த சலாகுத்தீன், இதையும் கைப்பற்றினார். இவ்வாறு அனைத்து சிலுவைப்போராளிகளின் பகுதிகளையும் கைப்பற்றிய சலாகுத்தீன், ஒரு முழுமையான பேரரசாக அயூபி பேரரசை மாற்றினார். இவ்வாறு ஒரு முழுமையான இசுலாமியப் பேரரசின் கீழ் செருசலேம் நகரைக் கொண்டுவந்தபொழுதும் கூட, அங்கு வாழ்ந்த யூத மக்களைத் தொடர்ந்து செருசலேம் நகரிலேயே வாழ அனுமதித்தார்[44].

மூன்றாம் சிலுவைப்போர்கள்

[தொகு]

இவ்வாறு செருசலேம் நகர் முழுவதுமாக சலாகுத்தீன் கையில் வந்த பிறகு, அதை மீண்டும் மீட்க மூன்றாம் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன. இதை இங்கிலாந்து மன்னரான முதலாம் ரிச்சர்ட் தலைமையேற்று நடத்தினார். இந்தப் போர் 1191-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் நாள் அர்சுப் என்ற இடத்தில் தொடங்கியது. இதில் ரிச்சர்ட்டின் படைகள் எவ்வளவோ முயன்றும் கூட, செருசலேம் நகரைக் கைப்பற்ற முடியவில்லை. இதிலும் இறுதியில் சலாகுத்தீனே வெற்றிபெற்றார்.

இருப்பினும் சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவு தனித்தன்மையானது. இந்த நட்பு சகமனித மரியாதைக்கும், போர் நெறிமுறைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. ரிச்சர்ட் ஒரு முறை நோய்வயப்பட்ட பொழுது, சலாகுத்தீன் அவரைக் குணப்படுத்த தனது அந்தரங்க மருத்துவரை அனுப்பியத்தோடு பழவகைகளையும் கொடுத்தனுப்பினார்[45]. மேலும் அர்சுப் போர்க்களத்தில் ரிச்சர்ட்டின் குதிரை இறந்தததைக் கேள்விப்பட்ட சலாகுத்தீன், அவருக்கு உயர் ரக குதிரைகள் இரண்டைக் கொடுத்தனுப்பினார். இதன் பிறகு ரிச்சர்டின் தங்கை ‘சோன்’ என்பவளை சலாகுத்தீன் தனது தம்பிக்கு மணமுடித்து வைத்தார். இதன் மூலம் முசுலிம் மற்றும் கிறித்தவர்கள் இடையே நட்புறவு ஏற்பட வழிவகுத்தார். இவ்வளவுக்கும் சலாகுத்தீன், ரிச்சர்ட் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை. கடிதம் மற்றும் தூதர்கள் மூலம் மட்டுமே பரிமாற்றம் நடைபெற்றது.

இதன் பிறகு 1192-ம் ஆண்டு சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர். ராம்லா ஒப்பந்தம் என அழைக்கப்படும் இதன் படி செருசலேம் முசுலிம்கள் வசமே தொடர்ந்தது. மேலும் கிறித்தவர்களும் அங்கு உள்ள புனிதத் தலங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்[46].

மறைவு

[தொகு]
சலாவுத்தீனின் சமாதி

இவ்வாறு ராம்லா உடன்படிக்கையைத் தொடர்ந்து ரிச்சர்ட் அரேபியாவை விட்டு வெளியேறிய பின் 1193-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் நாள் டமாசுக்கசு நகரில் நோய்வயப்பட்டு சலாகுத்தீன் இறந்தார். இவ்வாறு இறந்த பிறகு அவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தில் போதிய பணம் இல்லை[47]. காரணம் இவர் தனது செல்வம் முழுவதையும் தானம் செய்வத்திலேயே செலவிட்டிருந்தார். இவ்வாறு அவரது உடல் டமாசுக்கசு நகரில் உள்ள பிரபலமான உமய்யா மசூதியின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு செருமனியை சேர்ந்த பேரரசரான இரண்டாம் வில்லியம் ஒரு சலவைக்கல் கல்லறைமேடையை சலாகுத்தீனுக்காக உருவாக்கினார்[48]. இதுவே இன்றளவும் சலாகுத்தீனின் சமாதியாக மக்களால் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையான கல்லறை வேறு இடத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதே சலவைக்கல் மேடையை அமைக்காததற்கு காரணம், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாதததே ஆகும். அந்த அளவிற்கு அவர் மக்களிடம் மட்டுமல்லாமல் எதிரிகளிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

நன்மதிப்பும் நற்பெயரும்

[தொகு]

சலாகுத்தீன் ஒரு மிகப்பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட ஒரு சாதாரணமான மனிதனாகவே எளிமையாக வாழ்ந்தார். தீவிரமான சன்னி இசுலாம் முறையைப் பின்பற்றிய இவர், மற்ற மதத்தினரையும் மதித்தார். அவர்களின் புனித தலங்களுக்குப் பாதுகாப்பும் கொடுத்தார். இவர் ஆக்கிரமிப்பாளர்களைத் தவிர மற்ற எவரையும் தாக்கியதில்லை. அவ்வாறு அவர்களைத் தாக்கியப்பொழுதும் கூட, அவர்களுக்கு முதலிலேயே சரணடைய பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். மீறி போர் செய்து அவர்கள் பிடிபட்ட பின்பும் கூட அவர்களைத் துன்புறுத்தவோ, சிறையில் அடைக்கவோ இல்லை. மாறாக அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி செல்ல அனுமதித்தார். செருசலேம் நகரிலேயே அவர்கள் தங்கிக் கொள்ளவும் அனுமதித்தார். மேலும் இவரின் எதிரிகள் இசுலாமியர்களைத் தாக்கியபொழுதும்கூட, இவர் கிறித்தவர்களைத் தாக்கியதில்லை.

இவ்வாறு இவரது குணநலன்கள் அரேபியர்கள் மட்டும் அல்லாது ஐரோப்பியர்களையும் ஈர்த்தது. ஐரோப்பிய கிறித்தவர்கள் மத்தியில் ரிச்சர்ட்டை விட சலாகுத்தீன் அதிகம் பிரபலமானார். மேலும் ரிச்சர்ட்டும் சலாவுத்தீனும் தங்களுக்கு இடையே பல பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். இருப்பினும் இவர்கள் இருவரும் கடைசிவரை ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை.

நவீன காலம்

[தொகு]

சலாகுத்தீன் புகழ் அவரது வாழ்நாளில் மட்டும் அல்லாமல் நவீன உலகிலும் தொடர்கிறது. இன்னும் இவர் இசுலாமிய மக்களால் மிகவும் உயர்வாகப் போற்றப்படுகின்றார். குறிப்பாக இசுரேல் - பாலஸ்தீனம் பிச்சினை ஆரம்பமான பிறகு இவர் புகழ் வேகமாக பரவத் தொடங்கியது. இவர் தனது வாழ்நாளில் செருசலேம் நகரை கிறித்தவர்களிடம் இருந்து மீட்டதே இதற்குக் காரணம் ஆகும். இவரால் தோற்றுவிக்கப்பட்ட அயூபி பேரரசு இவரது மறைவுக்குப் பிறகு 57 ஆண்டுகள் தொடர்ந்தது. அது இன்றளவும் மறைமுகமாக நவீன உலகிலும் தொடர்கிறது. இதற்குச் சான்றாக, இவரது சின்னமான கழுகு முத்திரையே இன்றும் இராக், எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் ராணுவ சின்னமாக உள்ளது.


குறிப்புகள்

[தொகு]
  1. அரபி: صلاح الدين يوسف بن أيوب / ALA-LC: Ṣalāḥ ad-Dīn Yūsuf ibn Ayyūb; full name: al-Malik al-Nāṣir Abūʾl-Muẓaffar Yūsūf ibn Ayyūb[4]
  2. /ˈsælədɪn/. 'Saladin' is a contraction of an honorific laqab, from the அரபி: صلاح الدین, romanized: Ṣalāḥ ad-Dīn, lit.'Honour of the Faith'.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Nicolle 2011, ப. 26: "This copper dirham, minted at Mayyafariqin in 587 AH (1190/01 AD) shows Saladin wearing the sharbush hat of a Saljuq-style Turkish ruler."
  2. Lesley Baker, Patricia (1988). A History of Islamic Court Dress in the Middle East (PDF) (phd). SOAS, London University. p. 119. doi:10.25501/SOAS.00033676. By the end of the 12th century, the wearing of the sharbush demonstrated support for Salah al-Din. Under the later Bahri Mamluks of Egypt and Syria it formed part of the khil'a given to an amir on his investiture.
  3. 3.0 3.1 Balog (1980). The Coinage of the Ayyubids. London: Royal Numismatic Society. p. Coin 182., also Whelan Type III, 258-60; Album 791.4
  4. Richards 1995, ப. 910.
  5. Lane-Poole 1906, ப. 6.
  6. 6.0 6.1 Morton, Nicholas (2020). The Crusader States and Their Neighbours: A Military History, 1099–1187 (in ஆங்கிலம்). Oxford University Press. p. 163. ISBN 978-0-19-882454-1.
  7. H. A. R. Gibb, "The Rise of Saladin", in A History of the Crusades, vol. 1: The First Hundred Years, ed. Kenneth M. Setton (University of Wisconsin Press, 1969). p. 563.
  8. The medieval historian Ibn Athir relates a passage from another commander: "...both you and Saladin are Kurds and you will not let power pass into the hands of the Turks." Minorsky (1957): [page needed]
  9. 9.0 9.1 Lane-Poole 1906, ப. 4.
  10. The biographer Ibn Khallikan wrote, "Historians agree in stating that [Saladin's] father and family belonged to Duwin. ... They were Kurds and belonged to the Rawādiya [sic], which is a branch of the great tribe al-Hadāniya": Minorsky (1953), p. 124.
  11. Humphreys, R. Stephen (1977). From Saladin to the Mongols: The Ayyubids of Damascus, 1193–1260. State University of New York Press. p. 29. ISBN 0-87395-263-4. Among the free-born amirs the Kurds would seem the most dependent on Saladin's success for the progress of their own fortunes. He too was a Kurd, after all ...
  12. "Saladin". Encyclopædia Britannica. (7 April 2023). “Saladin was born into a prominent Kurdish family.” 
  13. Baha ad-Din 2002, ப. 17.
  14. Ter-Ghevondyan 1965, ப. 218.
  15. Tabbaa 1997, ப. 31.
  16. 'Abd al-Qadir al-Jilani (20 January 2019). Jamal ad-Din Faleh al-Kilani [in அரபிக்] (ed.). "Futuh al-Ghayb ("Revelations of the Unseen")" (in அரபிக்). وقد تأثر به القائد صلاح الدين الأيوبي، والشيخ معين الدين الجشتي، والشيخ شهاب الدين عمر السهروردي رحمهم الله
  17. Azzam, Abdul Rahman (2009). Saladin (in ஆங்கிலம்). Pearson Longman. p. 48. ISBN 978-1-4058-0736-4.
  18. 18.0 18.1 Lyons & Jackson 1982, ப. 3.
  19. Eddé 2011.
  20. 20.0 20.1 Lyons & Jackson 1982.
  21. 21.0 21.1 "Who2 Biography: Saladin, Sultan / Military Leader". Answers.com. Retrieved 20 August 2008.
  22. Chase 1998, ப. 809.
  23. Şeşen 2009, ப. 440.
  24. Behrens-Abouseif, Doris (2024). "Chapter 12: Mamluk Dress between Text and Image". Dress and Dress Code in Medieval Cairo: A Mamluk Obsession. pp. 172–173. doi:10.1163/9789004684980_013. ISBN 9789004684980.
  25. Contadini, Anna (1998). Poetry on Enamelled Glass: The Palmer Cup in the British Museum.' In: Ward, R, (ed.), Gilded and Enamelled Glass from the Middle East. British Museum Press. pp. 58–59.
  26. Contadini, Anna (2017). Text and Image on Middle Eastern Objects: The Palmer Cup in Context (in A Rothschild Renaissance: A New Look at the Waddesdon Bequest in the British Museum). British Museum Research Publications. p. 130. The iconography of its figures is very similar to that on the Palmer Cup, in the design of their robes, in the headgear (sharbūsh) and in the way that walking figures are rendered, with one leg straight and the other slightly bent, with a slim foot slightly raised from the ground. Although the candlestick does not have a date, it is securely datable to the early 13th century, as it clearly belongs to a group of metalwork that has now been established as of that period and coming from the Mosul or North Jaziran area. These elements also confirm the early 13th-century date of the Palmer Cup and further support the region of provenance.
  27. Contadini, Anna (2010). Arab Painting: Text and Image in Illustrated Arabic Manuscripts (in ஆங்கிலம்). Brill. p. 11. ISBN 978-90-04-18630-9. A case in point is the Ayyubid enamelled beaker known as the Palmer Cup
  28. Lyons & Jackson 1982, ப. 6–7.
  29. Lyons & Jackson 1982, ப. 8.
  30. Lyons & Jackson 1982, ப. 14.
  31. Lyons & Jackson 1982, ப. 15.
  32. Lyons & Jackson 1982, ப. 16.
  33. "acsearch.info – Auction research". acsearch.info. Retrieved 3 August 2024.
  34. "Copper alloy dirham of Saladin, Nisibin, 578 H." numismatics.org (in ஆங்கிலம்). American Numismatic Society.
  35. NIcolle, David (2016). "The Iconography of a Military Elite (Part II)". Mamluk Studies Review XIX: 255, photograph 56. https://knowledge.uchicago.edu/record/757/files/MamlukStudiesReview_XIX_2016.pdf. 
  36. Lyons & Jackson 1982, ப. 25.
  37. Phillips, Jonathan (2019). The life and legend of the Sultan Saladin. New Haven. p. 58. ISBN 978-0300247060.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  38. Lyons & Jackson 1982, ப. 28.
  39. Moors' Islamic Cultural Home souvenir III, 1970–1976‎ Islamic Cultural Home, 1978, p. 7.
  40. Lyons & Jackson 1982, ப. 8
  41. 41.0 41.1 KOVAŘÍK, Jiří. The sword and cross, knights battle and destinies. Praha: Mladá fronta, 2005. [dále jen Kovařík]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 80-204-1289-1
  42. Saladin Or What Befell Sultan Yusuf by Beha Ed-din, Baha' Al-Din Yusuf Ib Ibn Shaddad, Kessinger Publishing, 2004, p.42, p.114
  43. http://books.google.com/books?id=7CP7fYghBFQC&pg=PA1101&dq=saladin+balian+jerusalem+siege+-wikipedia+-%22Kingdom+of+Heaven%22+destroy+temple+mount&sig=lu0RI7bOVMyPYmxqHXVUiaWTkkw#v=onepage&q=saladin%20balian%20jerusalem%20siege%20-wikipedia%20-%22Kingdom%20of%20Heaven%22%20destroy%20temple%20mount&f=false
  44. Scharfstein and Gelabert, 1997, p. 145.
  45. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-19. Retrieved 2010-02-11.
  46. Jonathan Phillips, The Crusades, 1095-1197 (New York: Pearson Education Limited, 2002) pg 150.
  47. Bahā' al-Dīn (2002) pp 25 & 244.
  48. Riley Smith, Jonathan, "The Crusades, Christianity and Islam", (Columbia 2008), p. 63-66

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாகுத்தீன்&oldid=4254763" இலிருந்து மீள்விக்கப்பட்டது