சரிகை
வேட்டி, புடவை முதலிய ஆடைநூலுடன் நெய்யப்படும் பொன், வெள்ளி இழைகள், சரிகை என்றழைக்கப்படுகிறது. பொன், வெள்ளி முதலிய மாழைகளை மெல்லிய கம்பிபோல இழைத்துச் சரிகை தயாரிக்கிறார்கள். சரிகை இழைகள் மிகவும் மெல்லியனவாக இருக்கும்.
சரிகை நெசவு[தொகு]
வெகுகாலத்திற்கு முன்பே சரிகை நெசவுத்தொழில் முதன்மைப் பெற்று வந்திருக்கிறது. கலைநுட்பம் வாய்ந்த பழமையான தொழில்களில் இதுவும் ஒன்றாகும். உயர்ந்த இரகப்பட்டுத்துணிகளின் தலைப்பில் பொன் சரிகை இழைகளை இணைத்து நெய்யும் வழக்கம் இந்தியாவில் வழங்கி வந்துள்ளது. சரிகை இழைகளைக் கொண்டு தனிப்பட்டப் பொன்னாடையோ, வெள்ளி ஆடையோ நெய்து விடலாம். ஆனால் சரிகையை நூல், பட்டுப்போன்ற வேற்றிழைகளுடன் சேர்த்து நெய்யும் முறையே சிறந்ததாகத் தெரிகிறது. பொன், வெள்ளிச் சரிகைகளைப் பட்டோடு கலந்து நெய்யும் கலை இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே சிறப்புற்று இருந்து வந்திருக்கிறது.
- கிரேக்கப் பயணியும், புவியியலாளருமான மெகசுதனிசு (கிமு 350 - கிமு 290) குறிப்பிடுகிறார். இந்திய அரசர்களின் உடைகளில் இருந்த, இச்சரிகை வேலைபாடுகளைப் பற்றி விவரித்துள்ளார்.
- மொகலாய அரசர்கள் தங்கள் உடைகளில் இச்சரிகைகளுடன், முத்துக்களையும்,இரத்தினங்களையும் இணைத்து நெய்ய, திறமை மிக்க நெசவாளர்களை நியமித்திருந்தனர்.
- இந்தியாவில் பல நிறங்களும், கலை வேலைபாடுகளும் மிக்க உடைகளைத் தயாரிக்கும் நெசவுத்தொழில் பரம்பரை, பரம்பரையாகப் பேணப்பட்டு வந்துள்ளது.
- வட இந்தியாவில் காசி, அகமதாபாத், சூரத், மும்பை, ஔரங்காபாத் போன்ற நகரங்கள் புகழ் பெற்றுவிளங்கின.
- தென் இந்தியாவில் தஞ்சாவூர், காஞ்சிபுரம், ஆரணி, [தர்மவரம்], மைசூர் போன்ற நகரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
- ஒவ்வொரு ஊரிலும், பரம்பரை நெசவுமுறைகள் பேணப்பட்டு, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறந்து, தனித்துவம் பெற்று விளங்குகின்றன.