சமகால வரலாறு
சமகால வரலாறு (Contemporary history) என்பது ஆங்கில மொழி வரலாற்றுவரைவியலின்படி 1945 முதல் தற்போது வரையிலான வரலாற்றுக் காலத்தை விவரிக்கும் நவீனகால வரலாற்றின் துணைப் பிரிவு ஆகும். [1] சமூக அறிவியலில், சமகால வரலாறு பின்நவீனத்துவத்தின் எழுச்சியுடன் தொடர்கிறது, மேலும் அதனுடன் தொடர்புடையது.
சமகால வரலாற்றில், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணிக்கும், சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான கிழக்கு கூட்டணிக்கும் இடையிலான பனிப்போர் (1947–1991) அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது. பனிப்போரானது அணு ஆயுதப் போர் குறித்த அச்சத்தை உருவாக்கியது. அப்போது முழுமையான போர் தவிர்க்கப்பட்டது, ஆனால் இரு தரப்பினரும் தங்கள் உலகளாவிய செல்வாக்கிற்காகவும், மறைமுகப் போர்கள் மூலமாகவும் சிறிய நாடுகளின் உள்ளசியலில் தலையிட்டனர். 1989 ஏற்பட்ட புரட்சிகள் மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கபட்டதுடன் இறுதியில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. பனிப்போரின் பிந்தைய கட்டமும் அதன் பின்விளைவுகளும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவின் பெரும்பகுதியை ஜனநாயகமயமாக்க உதவியது. 1945 – 1975 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய காலனித்துவப் பேரரசுகளிடமிருந்து பல நாடுகள் விடுதலைப் பெற்றதால், தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவில் குடியேற்ற விலக்கம் மற்றொரு முக்கியமான போக்காக இருந்தது. மத்திய கிழக்கில், இஸ்ரேல் என்ற புதிய நாடு, பெட்ரோலிய அரசியலின் எழுச்சி, அரபு தேசியம் பெற்ற தொடர்ச்சியான முக்கியத்துவம் ஆனால் பின்னர் அதன் வீழ்ச்சி, இஸ்லாமியவாதத்தின் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மோதல்களையும் கண்டது. ஐக்கிய நாடுகள் அவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முதல் தேசியத்திற்கு அப்பாற்பட்ட அரசு அமைப்புகள் 1945 க்குப் பிறகு தோன்றின.
1960கள் மற்றும் 1980களுக்கு இடையில் மேற்கத்திய நாடுகளில் எதிர் கலாச்சாரங்கள் உருவாயின, பாலியல் புரட்சியானது சமூக உறவுகளை மாற்றியது. போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி காரணமாக வளர்ந்த நாடுகளில் வாழ்க்கைத் தரமானது கடுமையாக உயர்ந்தது. போரில் தோல்வுயுற்ற யப்பான், மேற்கு செருமனி என இரு நாடுகளும் விதிவிலக்காக வலுவான பொருளாதாரங்களாக உருவெடுத்தன. அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பரவியதால், அமெரிக்கப் பண்பாடு உலகெங்கும் பரவலாகப் பரவியது. சில மேற்கத்திய நாடுகள் 1970களில் தொழில்மயமாக்கலை மெதுவாகத் தொடங்கின; உலகமயமாக்கல் ஆசியாவில் புதிய நிதி, தொழில்துறை மையங்கள் தோன்ற வழிவகுத்தது. யப்பானிய பொருளாதார அதிசயத்தைத் தொடர்ந்து ஆங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவை பொருளாதாரத்தில் நான்கு ஆசியப் புலிகளாக தோன்றின. 1979 ஆம் ஆண்டு முதல் சீனா பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடங்கி, உலகம் முழுவதும் நுகர்வோருக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் முதன்மையான நாடாக மாறியது.
1945 க்குப் பிறகு அறிவியல் புதிய முன்னேற்றங்களைக் கண்டது. அதில் விண்வெளிப் பயணம், அணுக்கருத் தொழில்நுட்பம், சீரொளி, குறைகடத்திகள், மூலக்கூற்று உயிரியல், மரபியல், துகள் இயற்பியல், குவாண்டம் புலக் கோட்பாட்டின் சீர்மரபு ஒப்புரு ஆகியவை அடங்கும். வணிக ரீதியாக கணினிகள் உருவாக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து இணையம், தகவல் யுகம் தொடங்கியது.
அரசியல் வரலாறு
[தொகு]1945 – 1991
[தொகு]
1945 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள் தங்களுக்கு எதிரான அனைத்து குறிப்பிடத்தக்க எதிராளிகளையும் தோற்கடித்தன. பன்னாட்டு உறவுகளையும், மோதல்களையும் நிர்வகிக்க அவை ஐக்கிய நாடுகள் அவையை நிறுவின. தோற்கடிக்கப்பட்ட அச்சு நாடுகளையும், அச்சு நாடுகளால் கைப்பற்றப்பட்டு சிதைந்த நாடுகளையும் எவ்வாறு கையாள்வது என்பது ஒரு ஒரு பெரும் கேள்வியாக இருந்தது. யால்டா மாநாட்டைத் தொடர்ந்து, அவை பிரதேசம் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது, அதற்கு நேச நாடுகள் பொறுப்பேற்று மறுகட்டமைப்பை நிர்வகித்தன. இந்த மண்டலங்கள் கோட்பாட்டளவில் தற்காலிகமானவை என்றாலும் ( ஆக்கிரமிக்கப்பட்ட ஆஸ்திரியா இறுதியாக, நடுநிலை நாடாக விடுதலைப் பெற்றது போல), அமெரிக்கா தலைமையிலான மேற்குத் தொகுதிக்கும், சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான கிழக்குத் தொகுதிக்கும் இடையே பதட்டங்கள் வளர்ந்து வந்தன. கிழக்கு ஐரோப்பாவின் சோவியத் மண்டலங்களில் உள்ள நாடுகள் கம்யூனிச ஆட்சிகளினால் துணை நாடுகளாக நிறுவப்பட்டன. 1949 ஆம் ஆண்டு ஜெர்மனி இரண்டு நாடுகளாக தாராளவாத-ஜனநாயக மேற்கு செருமனியாகவும், கம்யூனிச கிழக்கு செருமனியாகவும் பிரிந்தது. கிழக்குக்கும் மேற்குக்கும் ஏற்பட்ட இந்த மோதல் பனிப்போர் என்று அறியப்பட்டது. மேற்கத்திய கூட்டணி 1949 இல் நேட்டோவை உருவாக்கியது, கிழக்கு கூட்டணி 1955 இல் வார்சா ஒப்பந்தத்தை உருவாக்கியது. புதிய வல்லரசுகளுக்கு இடையே நேரடிப் போர் பொதுவாக இருக்கவில்லை என்றாலும், மற்ற நாடுகளில் ஆயுதம் ஏந்திய ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொரு பிரிவு போரிட்டது. இதன் வழியாக மேற்கும் கிழக்கும் மறைமுகமாக போரிட்டன. போர் என்று ஒன்று வந்தால், தாங்கள் வலிமையை உறுதி செய்ய வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை, உருவாக்கி ஆயுதப் போட்டியில் இறங்கின.
கிழக்கு ஆசியாவில், 1945 – 1949 வரை நடந்த சீன கம்யூனிசப் புரட்சியில் சங் கை செக்கின் சீனக் குடியரசு தூக்கியெறியப்பட்டது. அவரது அரசாங்கம் தைவானுக்கு பின்வாங்கியது, ஆனால் தேசியவாத குவோமின்டாங் அரசாங்கமும் மா சே துங்கின் தலைமையிலான புதிய கம்யூனிச பிரதான நிலப்பகுதி அரசாங்கம் சீனா முழுவதிற்கும் அதிகாரம் கோருவதைத் தொடர்ந்தது. ஜெர்மனியைப் போலவே கொரியா பிரிக்கப்பட்டது, சோவியத் ஒன்றியம் கொரியாவின் வடக்கை ஆக்கிரமிக்க, அமெரிக்கா தெற்கை ஆக்கிரமித்தது (எதிர்கால வட கொரியா, தென் கொரியா ). செருமனியைப் போலல்லாமல், 1950 – 1953 வரை நடந்த கொரியப் போரால், அங்கு மோதல் சூடுபிடித்தது. இருப்பினும், அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குப் வேண்டிய தரப்பினருக்கு வலுவான ஆதரவைக் கொடுத்ததால், இரு அரசுகளின் கீழிருந்த கொரியா மீண்டும் ஒன்றிணைய முடியாமல் இருநாடுகளாக மாறின. 1947 ஆம் ஆண்டு ஜப்பானுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை முடிவுக்குக் கொண்டுவரத்தக்க ஒரு புதிய அரசியலமைப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு 1952 இல் முடிவுக்கு வந்தது. மேலும் அமெரிக்காவுடன் பரஸ்பர உதவி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தானது. 1946 ஆம் ஆண்டு பிலிப்பீன்சுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்த அமெரிக்கா, அந்நாட்டிற்கு விடுதலை வழங்கியது.
மத்திய கிழக்கு நிலையற்ற தன்மையின் மையமாக ஆனது. புதிய யூத நாடான இசுரேல் தன் விடுதலையை. இது அமெரிக்காவாலும், சோவியத் ஒன்றியத்தாலும் அங்கீகரிக்கப்பட்டது, அதன் பிறகு 1948 அரபு-இஸ்ரேலியப் போர் தொடங்கியது. 1952 எகிப்தியப் புரட்சியில் எகிப்தின் பலவீனமான மன்னர் ஃபாரூக் ஜெனரல் நாசரால் தூக்கியெறியப்பட்டார்; 1953 ஈரான் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்கவுடன் நட்பாக இருந்த மன்னர் முகமது ரெசா பஹ்லவி தனது அரசாங்கத்தின் மீதான ஜனநாயகக் கட்டுப்பாடுகளை நீக்கி நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றினார்; ஈராக்கின் மேற்கத்திய நட்பு முடியாட்சி 1958 இல் தூக்கியெறியப்பட்டது . நாசரின் எகிப்து 1956 இல் சூயெசு நெருக்கடியை எதிர்கொண்டது. எகிப்து 1958 முதல் 1961 வரை சிரியாவுடன் ஐக்கிய அரபு குடியரசு (UAR) என்றபெயரில் சிலகாலம் ஒன்றிணைந்திருந்தது. மேலும் எகிப்து 1962 முதல் 1970 வரை வடக்கு ஏமன் உள்நாட்டுப் போரில் தலையிட்டது.

1946 – 1975 வரை தென்கிழக்கு ஆசியாவிலும், ஆப்பிரிக்கா முழுவதிலும் பழைய பிரித்தானிய, பிரெஞ்சு, இடச்சு, போர்த்துகேய காலனித்துவ பேரிரசுகள் தகர்க்கப்பட்டபோது, காலனித்துவ விலக்கம் மிக முக்கியமான வளர்ச்சியாக இருந்தது. பல புதிய நாடுகளுக்கு விடுதலை வழங்கப்பட்டது. ஆனால் விரைவில் மேற்கத்திய கூட்டணி, கிழக்கு கூட்டணி ஆகியவற்றில் எதில் கூட்டணி வைப்பது அல்லது அணிசேரா இயக்கத்தின் உறுப்பினராக இணைந்து நடுநிலை வகிக்க முயற்சிப்பதா என்பதைத் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் புதிய நாடுகளுக்கு ஏற்பட்டது. 1947 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவிற்கு முழுமையான விடுதலைப்போர் எதுவும் தேவைப்படாமல் விடுதலை வழங்கப்பட்டது. இது இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த இந்தியா, முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்த பாகிஸ்தான் ( மேற்கு பாக்கித்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான், எதிர்கால பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம் ) எனப் பிரிக்கப்பட்டது ; 1947, 1965, 1971 ஆண்டுகளில் இந்திய-பாக்கித்தான் போர்கள் நடந்தன. 1945 – 1949 இல் இடச்சு ஆட்சியை மீண்டும் நிலைநாட்டும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்ததால், சுகார்னோ 1950 இல் விடுதலைப் பெற்ற இந்தோனேசியாவின் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார். மேலும் கிழக்கு நோக்கிய சாயும் நிலைப்பாட்டை எடுத்தார். பின்னர் 1968 ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த சுகார்த்தோவால் அவர் தூக்கியெறியப்பட்டார். 1948 – 1960 வரை கம்யூனிச படைகளுக்கு எதிராக மலாயா அவசரநிலையை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடியதால், 1957 ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்புக்கு விடுதலை வழங்கப்பட்டது. பிரெஞ்சு இந்தோசீனாவைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் பிரெஞ்சுக்காரர்கள் முதல் இந்தோசீனாப் போரில் ஈடுபட்டு தோல்வியுற்றனர். 1954 ஜெனீவா மாநாட்டில், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஜனநாயகக் குடியரசு, இறுதியில் வியட்நாம் குடியரசு ஆகிய புதிய நாடுகள் உருவாக்கப்பட்டன. இந்தோசீனாவை புதிய நாடுகளாக பிரித்தது இறுதியில் 1960கள் மற்றும் 70களில் வியட்நாம் போருக்கு வழிவகுத்தது (அத்துடன் லாவோஸ் உள்நாட்டுப் போர், கம்போடிய உள்நாட்டுப் போர் ), இதைத் தொடர்ந்து 1975 இல் கம்யூனிச சார்பு வடக்கு வியட்நாம் சாய் கோனைக் கைப்பற்றியது. [2]
ஆப்பிரிக்காவில், பிரான்ஸ் 1954 – 1962 வரை நடத்திய அல்சீரியப் போரால் பிரெஞ்சு அல்சீரியா முடிவுக்கு வந்து, புதிய விடுதலைப் பெற்ற அல்சீரியா உருவானது. பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் உடைமைகளாக இருந்த காலனித்துவ நாடுகளை மெதுவாக விடுவித்தனர். இது 1963 இல் முதல் நைசீரிய குடியரசு போன்ற நாடுகள் உருவாக்க வழிவகுத்தது. மறுபுறம், போர்ச்சுகல் தங்கள் பேரரசை தக்கவைக்க கடுமை காட்டியது. இது 1961 – 1974 வரை அங்கோலா, கினியா-பிசாவ், மொசாம்பிக் ஆகிய நாடுகளில் எஸ்டாடோ நோவோ அரசாங்கம் வீழ்ச்சியடையும் வரை போர்த்துகேய காலனித்துவப் போருக்கு காரணமானது. இதற்கிடையில், நிறவெறி கால தென்னாப்பிரிக்கா கடுமையான கம்யூனிச எதிர்ப்பாளராக இருந்தது. 1961 இல் பிரித்தானிய காமன்வெல்த்திலிருந்து விலகியது, மேலும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள பல்வேறு காலனித்துவ ஆதரவு பிரிவினரை ஆதரித்தது. புதிதாக விடுதலைப் பெற்ற ஆப்பிரிக்க நாடுகள் பல, மிகவும் பலவீனமாகவும், லட்சிய போராளிகளால் தூக்கியெறியப்பட்டதாகவும், மிகவும் வலிமையானதாகவும், சர்வாதிகாரங்கள் கொண்டதாக மாறுவதற்கும் இடையிலான சமநிலையுடன் தத்தளித்தன.
இலத்தீன் அமெரிக்க நாடுகள் படிப்படியாக பொருளாதார வளர்ச்சியைக் கண்டன. ஆனால் பல நாடுகளில் நிலையற்ற தன்மையையும் கண்டன, ஏனெனில் ஆட்சிக்கவிழ்ப்பு, இராணுவ ஆட்சிகள் ( ஜண்டாக்கள் ) அவற்றிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. அவற்றில் மிகவும் பிரபலமானது கியூபப் புரட்சியாகும். இப்புரட்சியில் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா தலைமையிலான அமெரிக்க நட்பு அரசாங்கத்தை தூக்கியெறிந்து பிடல் காஸ்ட்ரோவின் சோவியத் ஆதரவுபெற்ற அரசாங்கம் ஆட்சியமைத்தது. இது 1963 ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு காரணமாயிற்று. இது பொதுவாக பனிப்போரை நேரடி இராணுவ மோதலாக மாற இருந்த மிகவும் ஆபத்தான நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 1968 ஆம் ஆண்டு பெருவியன் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்து, சோவியத் நட்பு அரசாங்கம் நிறுவப்பட்டது. இதுபோன்ற போதிலும், இந்தக் காலகட்டத்தில் இந்தப் பகுதி இறுதியில் அமெரிக்காவை நோக்கிச் சாய்ந்தது, 1954 குவாத்தமாலா ஆட்சிக் கவிழ்ப்பு, 1964 பிரேசிலிய ஆட்சிக் கவிழ்ப்பு, 1973 சிலி ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் பிறவற்றில் அமெரிக்க நட்புத் தரப்புகளை சிஐஏ ஆதரித்தது. இதில் நிகரகுவா மிகவும் பாதிக்கப்பட்டது, நிகரகுவா புரட்சியில் இரு பெரும் வல்லரசுகளிடமிருந்தும் அவர்களுக்கு ஆதரவான பிரிவினருக்கு ஆதரவாக பெரும் இராணுவ உதவிகள் வழங்கப்பட்டன. இதனால் நாட்டில் பல தசாப்தங்கள் உள்நாட்டுப் போர் நீட்டித்தது. மெக்சிகோ இந்த அமைதியின்மையிலிருந்து தப்பித்தது, இருப்பினும் அது பெரும்பாலும் பிஆர்ஐ கட்சியால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு கட்சி நாடாக செயல்பட்டது. அர்கெந்தீனாவில் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இரண்டையும் ஆதரித்த தனித்துவமான அரசுகள் தொடர்ச்சியாக இருந்தன, ஆனால் அவை பொதுவாக பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்தன.
70களிலும், 80களிலும் நடந்த பிற்கால மோதல்களுக்கு முன்னறிவிப்பான நிகழ்வுகளை மத்திய கிழக்கு கண்டது. எகிப்தும், சிரியாவும் ஒன்றாக இருந்து உருவான ஐக்கிய அரபு குடியரசு முடிவுக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1966 சிரிய ஆட்சிக் கவிழ்ப்பில் சிரிய அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, நியோ-பாதிஸ்ட் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. இறுதியில் அல்-அசாத் குடும்பத்தின் தலைமையிலான ஆட்சிக்கு அது வழிவகுத்தது. இசுரேலும் அதன் அண்டை நாடுகளும் 1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போரிலும், 1973 ஆம் ஆண்டு யோம் கிப்பூர் போரிலும் ஈடுபட்டன. அன்வர் சாதாத் மற்றும் பின்னர் ஓசுனி முபாரக்கின் தலைமையிலான, எகிப்து நாசரிசம் என்ற கொள்கையிலிருந்து மேற்கத்திய கூட்டணிக்கு ஆதரவாக மாறியது. மேலும் எகிப்து இசுரேலுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒரு காலத்தில் பிராந்தியத்தில் மிகவும் வளமான நாடுகளில் ஒன்றாகவும், பண்பாட்டு மையமாகவும் இருந்த லெபனான், 1975 – 1990 வரை பத்தாண்டுகள் நீடித்த லெபனான் உள்நாட்டுப் போரால் சரிவடைந்தது. 1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியில் ஈரானின் செல்வாக்கற்ற அமெரிக்க சார்பு அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, ரூகொல்லா கொமெய்னி தலைமையிலான புதிய இசுலாமியக் குடியரசு நிறுவப்பட்டது. சதாம் உசேனின் தலைமையிலான ஈராக்கும் பாத்திஸ்ட் ஈரானும் 1980 – 1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போரில் ஒன்றோடொன்று சண்டையிட்டன, இது வெற்றி தோல்வியில்லாமல் முடிந்தது.
கிழக்கு ஆசியாவில், சீனா 1966 முதல் 1976 வரை பண்பாட்டுப் புட்சியை மேற்கொண்டது. இது ஒரு பெரிய உள் போராட்டமாகும். மாவோவியசத்தின் தீவிரமான திட்டமான இதில் உள்நாட்டு எதிரிகளாகக் கருதப்பட்டவர்கள் துன்புறுத்தப்பட்டனர். 1960கள், 70களில் சோவியத்துகளுடனான சீனாவின் உறவு மோசமடைந்தது. இதன் விளைவாக சீன-சோவியத் பிளவு ஏற்பட்டது, இருப்பினும் இருநாடுகளும் சில விசயங்களில் ஒத்துழைத்தனர். " பிங்-பாங் ராஜதந்திரம் " என்பது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு நல்லிணக்கத்திற்கும் 1970 களில் சீன கம்யூனிச அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதற்கும் காரணமாயிற்று. 1989 ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்கப் போராட்டங்களால் ஏற்பட்ட சீனாவின் ஜனநாயக ஆதரவு இயக்கம் அடக்கப்பட்டது, மேலும் 1980 களில் சோவியத் கூட்டணியை உலுக்கிய பதட்டங்களிலிருந்து சீன அரசாங்கம் தப்பிப்பிழைத்தது. 1987-1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவும் (ஜூன் ஜனநாயகப் போராட்டத்திற்கு பின்னர்) தைவானும் (இராணுவச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர்) 1987 – 1988 ஆம் ஆண்டுகளில் தாராளமயமாக்கலை நோக்கி முக்கிய நடவடிக்கைகளை எடுத்தன. ஒரு கட்சி ஆட்சி முறையைக் கொண்ட நாடுகளாக இருந்து முழுமையான ஜனநாயக நாடுகளாக மாறின.
1980களில் கம்யூனிச கூட்டணிக்கு பொதுவாக பின்னடைவு ஏற்பட்டது. சோவியத்-ஆப்கான் போரானது (1979 – 1989) அமெரிக்காவின் வியட்நாம் தோல்வியுடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் "சோவியத் ஒன்றியத்தின் வியட்நாம் போர்" என்று அழைக்கப்படுகிறது. இது பெரும் பொருட்செலவில் நடத்தபட்டு இறுதியில் தோல்வியளித்த போரும் ஆக்கிரமிப்புமாகும். மிக முக்கியமாக, இடைப்பட்ட தசாப்தங்களில் கிழக்கு ஐரோப்பாவால் மேற்கு ஐரோப்பாவுடன் பொருளாதார ரீதியாக போட்டியிட முடியவில்லை, இது முதலாளித்துவத்தின் போதாமையைக்கு கம்யூனிசமே தீர்வு என்ற கூற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. மேற்கத்திய முதலாளித்துவப் பொருளாதாரமானது வளமானது, வலிமையானது என்று நிரூபிக்கப்பட்டதால், சோவியத் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை அமெரிக்க ஆற்றலுடன் போட்டியிடுவது சிரமத்தைச் சந்தித்தது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பான்-ஐரோப்பிய சுற்றுலா, ஆர்ப்பாட்டமானது பின்னர் பெர்லின் சுவரின் வீழ்ச்சியுடன் ஒரு அமைதியான தொடர் எதிர்வினையை ஏற்படுத்தியது. 1989 புரட்சிகளால் கிழக்கு ஐரோப்பாவின் பல நாடுகளை தங்கள் கம்யூனிச அரசாங்கங்களை தூக்கியெறிந்தன. சோவியத் ஒன்றியம் அங்கு மீண்டும் சம்யூனிச அரசாங்கங்களை நிறுவுவதற்காக படையெடுக்க மறுத்துவிட்டது. கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. 3, திசம்பர், 1989 அன்று நடைபெற்ற மால்டா உச்சி மாநாடு, ஆகத்து மாதம் சோவியத் தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது. 26, திசம்பர், 1991 அன்று சோவியத் ஒன்றியம் முறையாகக் கலைக்கப்பட்டது. இறுதியில் பனிப்போரின் முடிவுக்கு வந்தது.
1991 – 2001
[தொகு]பனிப்போரின் முடிவு அமெரிக்காவை உலகின் ஒரே வல்லரசாக ஆக்கியது. கம்யூனிசம் மதிப்பிழந்ததாகத் தோன்றியது; சீனா அதிகாரப்பூர்வமாக கம்யூனிச நாடாக இருந்த போதிலும், டெங் சியாவோபிங்கின் பொருளாதார சீர்திருத்தங்களும் சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசமும் சீனாவில் முதலாளித்துவ தனியார் துறையை வளர அனுமதித்தது. உருசியாவில், ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் தனியார்மயமாக்கல் கொள்கையைப் பின்பற்றினார். அவர் அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்றி, சோவியத் ஒன்றியத்தின் தொடர்ச்சியாக வந்த வரவு செலவுச் சிக்கல்களைக் கையாள முயன்றார். சோவியத்தின் வெளிநாட்டு உதவிகள் முடிவுக்கு வந்ததால், முன்னர் சோவியத்தின் கிழக்குத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த நாடுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன; பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக ஜனநாயகக் குடியரசுகளாக மாறின. இருப்பினும் சில சர்வாதிகார அல்லது சிலவர் ஆட்சி குடியரசுகள், ஒரு கட்சி நாடுகள் என்று மிகவும் துல்லியமாக விவரிக்கப்பட்டன. பல மேற்கத்திய விமர்சகர்கள் இந்த வளர்ச்சியை நம்பிக்கையுடையதாக கருதினர்; உலகம் சுதந்திரமான, தாராளமய ஜனநாயகத்தை நோக்கி சீராக முன்னேறி வருவதாகக் கருதப்பட்டது. தென்னாப்பிரிக்கா, கம்யூனிச எதிர்ப்பு பூச்சாண்டியைக் காட்டி மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற முடியாமல், 1990களின் முற்பகுதியில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்தது. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நிலையான ஜனநாயக நாடுகளுக்கு மாறின. பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் குறைப்பினால் மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என்று சில அமெரிக்கர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த வெட்டுக்கள் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு பெரியதாக இருக்கவில்லை. 1993 ஆம் ஆண்டு மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பிய பொருளாதார சங்கம் ஐரோப்பிய ஒன்றியமாக பரிணமித்தது. இது ஐரோப்பாவை எல்லைகளைக் கடந்து ஒரு புதிய அளவில் ஒருங்கிணைத்தது. உலகில் சர்வதேச கூட்டணிகள் தொடர்ந்து உலக விசயங்களில் பங்கைக் கொண்டிருந்தது. வளைகுடாப் போரில் பெரிய அளவிலான சர்வதேச கூட்டணி ஈராக் குவைத் மீதான ஆக்கிரம்ப்பு செயலைத் தடுத்தது. ஆனால் பிற "உலக காவல்துறை" பாணி நடவடிக்கைகள் குறைவான வெற்றியையே பெற்றன. சோமாலியாவும் ஆப்கானித்தானும் கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் நீண்ட, இரத்தக்களரியான உள்நாட்டுப் போர்களில் மூழ்கின ( சோமாலிய உள்நாட்டுப் போர், ஆப்கான் உள்நாட்டுப் போர் (1992–1996), ஆப்கான் உள்நாட்டுப் போர் (1996–2001) . 1994 – 1996 வரை செச்சினியாவில் உருசியா ஒரு கொடூரமான போரை நடத்தியது, ஆனால் அங்கு கிளர்ச்சியை அடக்க முடியவில்லை; 1999 – 2000 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டாவது செச்சென் போரின் போது மீண்டும் மோதல் தொடங்கியது. உருசியா கிளர்ச்சியாளர்களிடம் சுயாட்சி வாக்குறுதிகளை அளித்து தங்கள் நோக்கங்களுக்கு இணங்கச் செய்த பிறகு உருசிய கட்டுப்பாடு மீண்டும் தொடங்கியது. யூகோஸ்லாவியாவின் பிளவு தொடர்ச்சியான யூகோஸ்லாவியப் போர்களுக்கும் வழிவகுத்தது; இறுதியில் நேட்டோ கொசோவோ போரில் தலையிட்டது. மத்திய கிழக்கில், இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி திட்டம் பலருக்கு நீண்டகால அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்பை அளித்தது; 1993 இல் கையெழுத்தான ஒஸ்லோ ஒப்பந்தங்கள் மோதலைத் தீர்ப்பதற்கான ஒரு பாதையைக் காட்டுவதாகத் தோன்றியது. இவ்வாறான நம்பிக்கைகள் இருந்தபோதிலும், 2000 – 2001 ஆம் ஆண்டுகளில் பேச்சுவார்த்தைகள் முறிந்ததாலும், இரண்டாவது இன்டிஃபாதாவிற்குப் பிறகும் அவை பெரும்பாலும் தோல்வியடைந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brivati, Brian (1996). "Introduction". In Brivati, Brian; Buxton, Julia; Seldon, Anthony (eds.). The contemporary history handbook (1st ed.). Manchester: Manchester University Press. p. xvi. ISBN 9780719048364.
- ↑ Thai Binh Department of Information and Communications (30 July 2020), "Soldier from Thai Binh who put flag on the roof of Independence Palace", Thai Binh Provincial Portal, Thai Binh, archived from the original on 9 April 2023, retrieved 15 January 2022