சந்தி (நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தி என்பது நாடகவியலில் நாடகத்தின் கதையைப் பிரித்து அமைக்கும் பிரிவு ஆகும்.[1]இதனை அங்கம் எனவும் கூறுவர். பொதுவாக நாடகத்தின் கதையை ஐந்து சந்தியாகப் பிரிப்பர். இதனடிப்படையிலேயே ஓர் சந்தி அதாவது ஒரு பிரிவு மட்டுமே கொண்ட நாடகம் ஓரங்க நாடகம் எனப்பட்டது.

சந்தி வகைகள்[தொகு]

  1. முகம்
  2. பயிர்முகம்
  3. கருப்பம்
  4. விளைவு
  5. துய்த்தல்

முகம்[தொகு]

உழுத நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளையாகத் தோன்றுவது போல, நாடகக் கதையின் போக்கு அறியப்படுமாறு அமைப்பது முகம் எனப்படும் பிரிவாகும்.

பயிர்முகம்[தொகு]

முளைத்த நாற்று இலைவிடுவது போன்று நாடகத்தின் கதை வளர்வது பயிர்முகம் எனப்படும்.[2]

கருப்பம்[தொகு]

வளர்ந்த பயிர் கருக்கொண்டு கதிர்விடுவது போல் நாடகக் கதையின் கருத்துத் தோன்றும்படி அமைப்பது கருப்பம் எனப்படும்.

விளைவு[தொகு]

கதிர் திரண்டு முற்றி மணியாகி அறுவடைக்கு ஆயத்தாமாகி இருப்பது போல நாடகப் பொருள் நன்கு விளங்க அமைப்பது.[3]

துய்த்தல்[தொகு]

முற்றி விளைத்த கதிர்களை அறுவடை செய்து நெல்மணிகளைக் கொண்டு போய் உண்டு மகிழ்வது போல நாடகக் கதையின் முழுக்கருத்தும் தோன்ற அமைப்பது துய்த்தல் எனப்படும். [4]

இவ்வாறு ஐந்து சந்திகளாக நாடகத்தின் கதை அமைய வேண்டும் என நாடகத்தமிழ் இலக்கண நூல்கள் கூறுகின்றன.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு. 2012. p. 115, 116. ISBN 81-7735-492-2
  2. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் இதனைப் பிரதிமுகம் எனக் குறிப்பிடுகிறார். வீரசோழியம் உரையாசிரியர் பெருந்தேவனார் இதனைப் பயிர்முகம் எனக் குறிப்பிடுகிறார்.(பொருளதிகாரம் 21 ஆம் கலித்துறை உரை)
  3. விளைவு என அடியார்க்கு நல்லாரும் பெருந்தேவனார் விமரிசம் அல்லது வைரிமுகம் என்றும் கூறுவார்.(வீர சோழியம்-பொருளதிகாரம் 31 ஆம் கலித்துறை உரை)
  4. பெருந்தேவனார் இதனை நிருவாணம் என்பார். (வீர சோழியம்-பொருளதிகாரம் 21 ஆம் கலித்துறை உரை)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தி_(நாடகம்)&oldid=2696809" இலிருந்து மீள்விக்கப்பட்டது