க. மு. வல்லத்தரசு
க. முத்துசாமி. வல்லத்தரசு (K. M. Vallatharasu 12, சூன், 1901- 30, சூலை, ?) என்பவர் தமிழ்நாட்டின், புதுக்கோட்டையைச் சேர்ந்த இந்திய வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
கல்வி[தொகு]
புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சார்ந்த இவர் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரி, திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரி முதலியவற்றில் கல்லூரிக் கல்வியினை கற்று வழக்கறிஞராக ஆனார்.
அரசியல் ஈடுபாடு[தொகு]
அரசியலில் ஈடுபாடு கொண்டவராக வல்லத்தரசு இருந்தார். சீர்திருத்தவாதியான இவர் காதல், சாதிமறுப்பு, பெண்களின் மறுமணம், வைதீக சடங்குகள் அற்ற திருமணங்கள் முன்னின்று நடத்தினார். 1933 இல் ம. சிங்காரவேலர், ஈ. வெ. இராமசாமி, ப. ஜீவானந்தம் ஆகியோருடன் இணைந்து ஈரோடு சமதர்மத் தட்டத்தை இவர் உருவாக்கினார். பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருத்துறைப்பூண்டி சுயமரியாதை தாநாட்டிலிருந்து வெளியேறி பின்னர் மன்னார் குடியில் ஜீவாவுடன் இணைந்து சுயமரியாதை சமதர்ம கட்சியைத் துவக்கினார். சிறையில் இருந்தபோது மூலதனம் நூலின் சாரத்தை தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்தார். இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது மக்களுடன் இணைந்து இராமநாதபுரம்-திருமயம் சிறையை தகர்த்து சின்ன அண்ணாமலையை விடுவித்தார். இதற்காக தஞ்சாவூர் வேலூர் சிறைகளில் இரண்டரை ஆண்டுகள் அடைக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பிறகு புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய வலியுறுத்தினார். இந்திய விடுதலைக்குப் பிறகு நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் இவருக்கு போட்டியிட காங்கிரசு கட்சியில் இடம் கொடுக்கப்படாததால் பிரஜா சோசலிச கட்சியின் சார்பில் குடிசைவீடு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். புதுக்கோட்டையை தனி மாவட்டமாக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். மொழிவழி மாநிலங்களின் பிரிப்பு நடந்தபோது சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயரை சூட்டவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
நேருவின் பெருந்தொழில் கொள்கைக்கு எதிராக காந்தி, ஜே. சி. குமரப்பா ஆகியோரின் பொருளாதாரக் கொள்கையை வலியுறுத்துபவரவாக இருந்தார்.
வகித்த பதவிகள்[தொகு]
- புதுக்கோட்டை சமஸ்தான காங்கிரசு, புதுக்கோட்டை நகர காங்கிரசு கமிட்டி என இரண்டுக்கும் ஒரே நேரதில் தலைவராக இருந்தார்.
- புதுக்கோட்டை சட்டமன்றத்துக்கு குன்றாண்டார்கோவில், திருமயம் ஆகிய தொகுதிகளில் இருந்து மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
- 1951ஆம் ஆண்டு முதல் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கள்ளர் மரபினரின் வரலாறு: புரட்சி வீரர் க. முத்துசாமி வல்லத்தரசு". கள்ளர் மரபினரின் வரலாறு. வியாழன், 19 செப்டம்பர், 2019. 2021-11-14 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ "க.மு.வல்லத்தரசு சுயமரியாதை, சமதர்மம்". Hindu Tamil Thisai. 2022-07-30 அன்று பார்க்கப்பட்டது.