க. இரத்தினசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தையா இரத்தினசிங்கம்
பிறப்புகந்தையா இரத்தினசிங்கம்
கிளிநொச்சி, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர், ஈழத்து ஊடகவியலாளர்
உறவினர்கள்துணைவி: தவமணி, பிள்ளைகள்: விஜயானந்தன், சிவகுமாரன், சிவமலர், சிவனேஸ்வரி, சிவஞானசுந்தரம், சிவராணி, சிவச்சந்திரன்

கந்தையா இரத்தினசிங்கம் (ஜுலை 30, 1940 - ஏப்ரல் 30, 2018)[1] இலங்கையின் கிளிநொச்சி மாவட்ட, கரைச்சி கிராமத்தில் வசித்து வந்த மூத்த எழுத்தாளரும், விமர்சகரும், ஊடகவியலாளருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கந்தையா, தவமணி தம்பதியினரின் புதல்வராகப் கிளிநொச்சி, கரைச்சியில் பிறந்த இவர் சாவகச்சேரி மட்டுவில் வடக்கு சந்திர மௌலீச வித்தியாலயத்தில் அப்போதைய ஜே.எஸ்.சி. (ஆண்டு 8) வரை கற்றார். இவரின் மனைவி பெயர் தவமணி. இவர்களுக்கு விஜயானந்தன், சிவகுமாரன், சிவமலர், சிவனேஸ்வரி, சிவஞானசுந்தரம், சிவராணி, சிவச்சந்திரன் ஆகிய ஏழு பிள்ளைகள் உளர்.

கன்னியாக்கம்[தொகு]

தனது இளமைக்காலம் முதலே வாசிப்புத்துறையிலும், இலக்கியத்துறையிலும் இயல்பான ஆர்வம் பெற்ற இவரின் கன்னியாக்கம் 1959ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமானது.

வெளியான ஊடகங்கள்[தொகு]

படைப்பிலக்கியம் என்ற வகையில் அன்றுதொடங்கி இன்றுவரை சிறுகதைகள், கவிதைகள் என சுமார் 100 மேற்பட்ட ஆக்கங்களையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல் போன்ற தேசிய பத்திரிகைகளிலும், கலைச்செல்வி, அமுதம், ஆனந்தசாகரம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் இலங்கை வானொலியிலும் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன.

ஊடகத்துறையில்[தொகு]

க. இரத்தினசிங்கம் ஊடகத்துறையில் அதிக ஈடுபாடு மிக்கவராக காணப்படுகின்றார். தினக்குரலின் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வரும் இவர், 1959ஆண்டிலிருந்து சுதந்திரன் பத்திரிகையிலும் செய்திகள் எழுதிவந்தார். தினக்குரலிலும் ஞாயிறு தினக்குரலிலும் இவரது பிரதேச செய்திகள் அவ்வப்போது பிரசுரமாகி வருகின்றன.

நேர்காணல் நூல்[தொகு]

ஞாயிறு தினக்குரலில் 50க்கும் மேற்பட்ட நேர்காணல்களை இவர் எழுதியுள்ளார். இதில் 32 நேர்காணல்களைத் தொகுத்து ‘மண்ணின் வேர்கள்’ எனும் தலைப்பில் 2006 அக்டோபரில் ஒரு நேர்காணல் நூலினை வெளியிட்டார். கிளிநொச்சி மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையின் முதலாவது வெளியீடாக இந்நூல் வெளிவந்தது.

மண்ணின் வேர்கள்[தொகு]

வன்னி மண்ணுக்காக அயராது உழைத்து அம்மண்ணிலே வேரூன்றி அம்மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் சிலரை மண்ணின் வேர்கள் நேர்காணல் மூலம் பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் வன்னி மண்ணின் வேர்களாக க. செ. வீரசிங்கம், தாமரைச் செல்வி, ச. முருகானந்தன், மண்டைதீவு கலைசெல்வி, திருநகர் நடராசன், வெ. மோ. கானந்தசிவம், வளவை வளவன், செவ்வந்தி மகாலிங்கம், கனடாவளைக்கவிராயர், புரட்சி பாலன் ஆதிலட்சுமி சிவகுமார், சந்திரகாந்த முருகானந்தன், கு. மணிமேகலை, நா. யோகேந்திரநாதன், தர்சினி ஆனந்த ராசா, மு.கந்தசாமி, இ. நடராசா, கா. நாகலிங்கம், த. புவனேஸ்வரி செல்லையா, கு. இரத்தினேஸ்வரக் குருக்கள், தி. இராசநாயகம், சோ. செல்வராணி, ப. அரியரத்தினம், ம. பத்மநாதன், ஆ. மார்க்கண்டு, நா. வை. மகேந்திரராஜா, சந்திரகாந்தன், அபிராமி கைலாசப்பிள்ளை, வன்னியூர்க்கவிராயர் ஆகிய பலர் நேர்காணப்பட்டுள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-07. பார்க்கப்பட்ட நாள் 2018-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இரத்தினசிங்கம்&oldid=3547239" இலிருந்து மீள்விக்கப்பட்டது