கௌரா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌரா தேவி (Gaura Devi; 1925-1991) என்பவர் சிப்கோ இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் உத்தராகண்டம் மாநில கிராமப்புற பெண்கள் சமூகத்தின் அடிமட்ட ஆர்வலர் மற்றும் தலைவி ஆவார்.[1]

வாழ்க்கை[தொகு]

கௌரா தேவி 1925 இல் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள லதா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் அலக்நந்தா ஆற்றின் கரையில் உள்ள ரெய்னி என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். 22 வயதிற்குள் திருமணமாகி ஒரு குழந்தையுடன் விதவையானார். இவரது புதிய கிராமம் திபெத்திய எல்லைக்கு அருகிலிருந்தது. சிப்கோ இயக்கத்தைத் தொடர்ந்து மகிளா மங்கள் தளம் (பெண்கள் நலச் சங்கம்) தலைவராகவும் கௌரா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக காடுகளைப் பாதுகாப்பதில் இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.[2]

சிப்கோவின் பிறப்பு[தொகு]

1974ல் சிப்கோ இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளராக கௌரா தேவி முன்வந்தார். மார்ச் 25, 1974 அன்று, ஒரு இளம் பெண், உள்ளூரைச் சேர்ந்தவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகே மரங்களை வெட்டுவதாக கௌரா தேவியிடம் கூறினார். இந்தியத் தரைப்படை இந்நிலத்திற்கு அரசு மூலம் இழப்பீடு வழங்கப் போகிறது என்று தெரிவித்து ரேணி கிராமத்தைச் சேர்ந்த மனிதர்கள் கிராமத்தை விட்டு விரட்டப்பட்டனர். கௌரா தேவி மற்றும் 27 பெண்கள் காடுகளைப் பாதுகாக்க முடிவு செய்தனர். இவர்கள் மரம் வெட்டி காடுகளை அழிப்பதை எதிர்த்து மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக தங்களைச் சுடுமாறு மரம் வெட்டிய ஆண்களுடன் போராடினர். மேலும் கௌரா காட்டை "வனதேவதா" (காட்டின் கடவுள்) என்றும் அவரது மைக்கா (தாயின் வீடு) என்றும் விவரித்தார். இறுதியில், மற்ற பெண்களின் உதவியுடன், ஆயுதம் ஏந்திய மரம் வெட்டுபவர்களின் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களையும் மீறி மரங்களைக் கட்டிப்பிடித்து மரம் வெட்டுபவர்களைத் தடுத்து நிறுத்தினார். முழு கிராமத்தினரும் கௌரா தேவியுடன் பங்கேற்று அன்றிரவு மரங்களைப் பாதுகாத்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற கிராமங்களும் கிராம மக்களும் இந்த காடுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இணைந்தனர். மரம் வெட்டுபவர்கள் மரங்களை விட்டுச் சென்றனர்.[3][4][5] இச்சம்பவத்திற்குப் பிறகு, மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. ரெயினி வனப்பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதி என்றும், இங்கு மரங்களை வெட்டக்கூடாது என்றும் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. இதையடுத்து 1150 கி.மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் மரங்களை வெட்ட உத்தரப்பிரதேச அரசு 10 ஆண்டுகள் தடை விதித்தது.

இறப்பு[தொகு]

கௌரா தேவி சூலை 1991-ல் தனது 66 வயதில் இறந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Parallelus. "Chipko Heritage". mountainshepherds.com. பார்க்கப்பட்ட நாள் 2017-08-23.
  2. "Gaura Devi....A forgotten Hero of Chipko Movement In Gharwal". www.speakingtree.in. பார்க்கப்பட்ட நாள் 2017-08-23.
  3. Chipko 30th Anniversary பரணிடப்பட்டது 5 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம் The Nanda Devi Campaign.
  4. Chipko! – Hill conservationists Tehelka, 11 September 2004.
  5. Jain, Shobita. "Standing up for trees: Women's role in the Chipko Movement". www.fao.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  6. "Lessons from the mountains". தி இந்து. 2000-05-21. Archived from the original on 2016-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரா_தேவி&oldid=3741877" இலிருந்து மீள்விக்கப்பட்டது