கோடீஸ்வர ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோடீஸ்வர ஐயர் (1870-1936) மிகவும் கருநாடக இசைப்புலமை வாய்ந்தவர். 72 மேளகர்த்தா இராகங்களிலும் இவர் பாடல்கள் இயற்றியிருக்கிறார். இவர் இயற்றிய 'மோகன கர முத்துக்குமரா' பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல். முருகன் மீதும், மயிலை கற்பகாம்பாள் மீதும் இவருக்கு அளவு கடந்த பக்தியுடன் அவர்கள் மீது எண்ணற்ற பாடல்களை இயற்றியுள்ளார். கவிகுஞ்சர பாரதியாரின் பேரன். இவரது பாடல்களின் முத்திரையாக "கவிகுஞ்சரதாசன்" என்று தன் தாத்தாவின் பெயரோடு 'தாசன்' என சேர்த்துக் கொண்டார். இவரது பல பாடல்களில் இராக முத்திரையும் இடம் பெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணி புரிந்துள்ளார். இசைக்கச்சேரிகளில் தமிழில் கீர்த்தனைகளைப் பாட ஆர்வம் கொண்டவர். ஓவியரும் இசைக்கலைஞருமான எஸ்.ராஜம் அவர்கள் இவரது கீர்த்தனைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட இவர், தனது பாட்டனாரால் வளர்க்கபெற்றார். அவர் கோடீஸ்வரருக்கு இசை, வடமொழி மற்றும் தமிழில் புலமை பெறுமளவிற்கு நன்கு கற்றுக் கொடுத்தார். பின்னாளில் இசை நுணுக்கங்களை பட்டிணம் சுப்ரமணிய ஐயர், ராமநாதபுரம் ஸ்ரீநிவாச அயங்கார் ஆகியோரிடம் கற்றுத் தேர்ந்தார். கவிநயமும், இசைநயமும் ஊற்றுபோல இயற்கையாகவும் எளிதாகவும் வெளிப்படுத்தப் பெறும் திறன் பெற்றார். மாணவனாக இருக்கும் காலத்திலேயே தமிழில் சித்தி விநாயகர் பதிகம், சண்முக மாலை, சுந்தரேஸ்வர பதிகம், கயற்கண்ணி பதிற்றுப்பத்து, மீனாட்சி அந்தாதி போன்ற இசைப் படைப்புகளை இயற்றினார். கந்த புராணத்தை கதாகாலட்சேபமும் செய்திருக்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக சில காலம் பணியாற்றியதில் ஈட்டிய வருவாயில் தனது பாட்டனாரின் இசைப் படைப்புகளை பதிப்பித்து இருக்கிறார். இவரின் பேரன் கே. வீரமணி, ஒரு சிறந்த பக்தியிசைப் பாடகராக விளங்கியவராவார்.

கந்த கானாமுதம்[தொகு]

இவருக்கு முன்பே, மகா வைத்தியநாத சிவன் அவர்கள், 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்கள் இயற்றியிருந்தாலும், தமிழிலேயே அனைத்து பாடல்களும் அமையுமாறு அனைத்து மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களை இயற்றியது கோடீஸ்வரர் தான். தனது குலதெய்வமான முருகப் பெருமானின் மீது இயற்றிய இப்பாடல் தொகுப்பிற்கு "கந்த கானமுதம்" எனப்பெயர் வழங்கினார். கவித்துவம் நிறைந்த இப்பாடல்களில் ஸ்வரக்ஷர சந்திகளும், அழகான சங்கதிகளும், இராக பாவமும் நிறைந்திருப்பதைக் காணலாம். இவரது பாடல்களும் தூய தமிழில் இல்லாவிட்டாலும், மேளராக கிருதிகளாக இவர் பாடல்களை இயற்றியுள்ளதால், கச்சேரியின் முக்கிய பகுதியில் பாடப்படும் பங்கினைப் பெற்றுள்ளன. பாடல்களுக்கு பதவுரையும் கூடவே சேர்த்து எழுதியுள்ளது மாணவர்களுக்கு பெறும் பேறாகும்.
கந்த கானமிர்த தொகுப்பின் கடவுள் வாழ்த்துப்பாடலாக அமைந்துள்ள பாடல் "வாரண முகவா துணை வருவாய்" எனத் தொடங்கும் விநாயகரைத் துதிக்கும் பாடல். இப்பாடலில் இவரது புலமையும் அவையடக்கமும் ஒரு சேர பரிமளிப்பதைக் காணலாம். ஹம்சத்வனி இராகத்தில் அமைந்துள்ள இப்பாடலில் "கந்த கானமுதம் இயற்றும் பெரும் பணியைத் துவக்கியுள்ளேன். எனக்கோ இன்னிசை, இயல், இலக்கியம், ஆரியம்,தமிழ் இவையனைத்திலும் பெரும் அறிவேதும் இல்லை. இருப்பினும் முன்னவனே, யானை முகத்தவனே, உன்னை முன் நிறுத்தி தொடங்குகிறேன். நீ முன் நின்றால், முடியாதது என்று ஒன்றும் இல்லை" என்று வேண்டிக்கொண்டு இப்பெரும் பணியினைத் துவங்குகிறார்.

இயற்றிய பாடல்களின் பட்டியல்[தொகு]

  • ஏதையா கதி...

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடீஸ்வர_ஐயர்&oldid=3846204" இலிருந்து மீள்விக்கப்பட்டது