கோகிலா மகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகிலா மகேந்திரன்
பிறப்புநவம்பர் 17, 1950
இறப்புதெல்லிப்பழை, விழிசிட்டி, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விதெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி,பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை
அறியப்படுவதுஆசிரியர் ,ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்செல்லையா சிவசுப்பிரமணியம்,
செல்லமுத்து

கோகிலா மகேந்திரன் (பிறப்பு: 17 நவம்பர் 1950) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம்.. என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம் பிடித்திருக்கின்றன.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கோகிலா மகேந்திரன் தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது பெற்றவர். தாயார் செல்லமுத்து. பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விஞ்ஞானக்கல்வியைக் கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி. 1974 இல் யாழ்ப்பாணம் பொலிகண்டி தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒரு விஞ்ஞான ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, 1994 இல் அதிபராக பதவி உயர்வு பெற்று, 1999 இல் அதே கல்விப்புலத்தில் பிரதிப்பணிப்பாளராக உயர்ந்து தனது தொழிலில் உச்ச நிலையை அடைந்தவர். கல்வித்துறைக்குச் சமாந்தரமாக உளவியல் பற்றியும், உளவளத்துணை பற்றியும், மனவடுவுக்கு அளிக்கப்படும் உளச்சிகிச்சை பற்றியும் கற்றவர். அரச பணியில் இருந்த காலத்திலேயே எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு நாடகத் துறையையும் முறையாகக் கற்று நாடக ஆசிரியர் தரப் பரீட்சையில் தேர்வு பெற்வர். இவர் 2007 இல் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

எழுத்துலக வாழ்வு[தொகு]

1972 இல் "குயில்' சஞ்சிகையில் வெளியான "அன்பிற்கு முன்னால்' என்பது இவரது முதலாவது சிறுகதையாகும். மொத்தம் 76 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இக்கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இவரது ஆறு சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் "பிரசவங்கள்', "வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்' ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்ய விருது பெற்றவை. பின்னைய நூல் வடகிழக்கு மாகாண இலக்கிய விருதினையும் வென்றிருந்தது.

ஈழநாடு பத்திரிகையிலும் சுடர் சஞ்சிகையிலுமாக இவர் பல குறுநாவல்கள், நாவல்களை எழுதியிருப்பினும், "துயிலும் ஒருநாள் கலையும்', "தூவானம் கவனம்' ஆகிய இரு நாவல்களுமே நூலுருப் பெற்றுள்ளன. நாடகங்களில் குயில்கள், கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, அரங்கக் கலையின் ஐம்பதாண்டு ஆகிய மூன்றும் பனுவல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. "விஞ்ஞானக் கதைகள்' என்ற அறிவியல் புனைகதை நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

பெண்ணியம் பற்றிய கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர். பெண்ணியக் கருத்துக்களை தனது சிறுகதைகளிலும், நாவல்களிலும் வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டவர்.

வானொலியில்[தொகு]

இலங்கை வானொலியில் பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேணில் போன்ற வானொலி சார் நிகழ்வுகள் பலவற்றில் இவர் பங்கு பற்றியுள்ளார். "சைவநற்சிந்தனை” என்ற தொடரில் ஒலித்த இவரது குரல் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

நாடகங்கள்[தொகு]

"கேள்விகளின் முழக்கம்' எனும் இவரது நாடகம், வட இலங்கைச் சங்கீத சபையின் "நாடக கலாவித்தகர்' என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தது. இது தவிர மேலும் 23 நாடகங்களை இவர் எழுதி இயக்கியுள்ளார்.

விருதுகள்/பட்டங்கள்[தொகு]

  • வட இலங்கை சங்கீத சபையின் நாடக கலா வித்தகர் என்னும் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர்.
  • இரண்டு முறை இலங்கை சாகித்தியப் பரிசையும் பெற்றவர்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • Child Mental health
  • உள்ளக் கமலம்
  • எங்கே நிம்மதி
  • கலைப்பேரரசு ஏ.ரி.பி - அரங்கக் கலையில் ஐம்பதாண்டு
  • கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு
  • குயில்கள்
  • சிறுவர் உளநலம்
  • சின்னச் சின்னப் பிள்ளைகள்
  • தங்கத் தலைவலி
  • துயிலும் ஒருநாள் கலையும்
  • தூவானம் கவனம்
  • பாவலர் துரையப்பா பிள்ளை
  • பிரசவங்கள்
  • மகிழ்வுடன் வாழ்தல்
  • மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும்
  • மனக்குறை மாற வழி
  • மனம் எனும் தோணி - உளவியல் கட்டுரை
  • மனச்சோர்வு
  • முகங்களும் மூடிகளும் - சிறுகதைகள் (2005)
  • முற்றத்தில் சிந்திய முத்துக்கள்
  • வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்
  • விஞ்ஞானக் கதைகள்
  • விழி முத்து

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகிலா_மகேந்திரன்&oldid=3509241" இலிருந்து மீள்விக்கப்பட்டது