கொழுமம் தாண்டேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழுமம் தாண்டேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொழுமம் என்னுமிடத்தில், அமராவதி ஆற்றின் தென்கரையில், அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் சங்கர ராமநல்லூர் என்றழைக்கப்பட்டது. குமண மன்னர் ஆட்சி செய்ததால் குமணன் நகர் எனவும், வணிகக்குழுக்கள் அதிகம் குழுமியிருந்த இடமாகக் காணப்பட்டதால் குழுமூர் எனவும் இவ்வூர் அழைக்கப்பட்டது.அது பின்னர் கொழுமம் என்றானதாகக் கூறுவர். [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக தாண்டேசுவரர் உள்ளார். இவர் சோழீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பெரிய நாயகி ஆவார். வில்வம் இக்கோயிலின் தல மரமாகும். கோயிலின் தல தீர்த்தமாக அமராவதி உள்ளது. திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், ஆனி உத்திரம், மகாசிவராத்திரி பௌர்ணமி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. [1]

அமைப்பு[தொகு]

சிதம்பரத்தில் உள்ளது போல நடராசர் ஆனந்தத் தாண்டவத்தில் இடது காலை தூக்கிய நிலையில் உள்ளார். அவர் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் காணப்படுகிறார். இந்த அமைப்பின் காரணமாக இத்தலம் தென் சிதம்பரம் என்றழைக்கப்படுகிறது. மூலவருக்கு இடது புறம் தனி சன்னதியில் இறைவி உள்ளார். அவருக்கு முன் ஜேஷ்டாதேவி, திருச்சுற்றில் சுந்தர விநாயகர், பால முருகன், அய்யப்பன், மகாவிஷ்ணு, பைரவர், துர்க்கை, நவக்கிரகங்கள், மேற்கு நோக்கிய நிலையில் சனீசுவரன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். கல் மண்டபம் போன்று காணப்படுகின்ற கருவறையின் பின்புறம் அக்னீசுவரர் சன்னதி உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]