உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்லாமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளென் டி. பெய்ஜ் உருவாக்கிய இந்த இலச்சினை மூளையின் உணர்ச்சிகளையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்புகளுக்கு இடையிலான பாதைகளைத் தூண்டுவதன் மூலம் மனித நடத்தையை வன்முறையிலிருந்து வன்முறையற்றதாக மாற்ற முடியும் என்ற சமீபத்திய மூளை ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளதையும் பண்டைய ஆசிய யின்–யாங் சின்னத்தையும் இணைத்து கொல்லாமை என்ற கருத்தை விளக்குகிறது. இதில் மனிதனிடம் காணப்படும் கொல்லாமை உள்ளிட்ட நல்ல திறன்களின் (வெள்ளை) உதவியுடன் ஆக்கபூர்வமான மாற்று முயற்சிகள் (நீலம்) மேற்கொள்வதன் மூலம் மனிதனின் கொலைச் செயலுக்கு (சிவப்பு) முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கொல்லாமை (Nonkilling) என்பது கொலை அச்சுறுத்தல்களை நீக்கியும் கொலைக்கு உகந்த சூழ்நிலைகளை முற்றிலுமாகக் களைந்தும் மனித சிந்தனையிலும் சமூகத்திலும் கொலைச் செயலை அறவே தவிர்த்தலைக் குறிக்கிறது.[1][2] பழம்பெரும் இந்தியச் சிந்தனையான இது மேற்கத்திய உலகில் ஒரு முக்கியமான 21-ம் நூற்றாண்டுக் கருத்தாக 2002-ம் ஆண்டு கிளென் டி. பெய்ஜ் எழுதிய நான்கில்லிங் குளோபல் பொலிடிகல் சயின்ஸ் ("கொல்லாமை உலகளாவிய அரசியல்") என்ற நூலின் வாயிலாகப் பிரபலப்படுத்தப்பட்டது. இச்சொல் பொதுவாக அனைத்து விலங்குகளையும் இன்னபிற உயிரினங்களைக் கொல்லாததைக் குறிப்பிட்டாலும், அரசியலிலும் கல்வித்துறையிலும் இந்தச் சொல் பெரும்பாலும் மனிதர்களைக் கொல்லாததைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[3] கொல்லாமை என்னும் கருத்து இந்திய மதங்களான சமணம், இந்து மதம், மற்றும் பௌத்தத்தின் மையக் கொள்கைகளில் ஒன்றான அகிம்சை என்ற சிந்தனையிலிருந்து தோற்றியதாகும்.[4] இச்சிந்தனையானது அனைத்து வகையான உணர்திற உயிரினங்களையும் உள்ளடக்கியது. பௌத்த நெறிமுறைகளின் ஒரு பகுதியாக பஞ்சசீலத்தின் முதல் கட்டளையில் கூறப்பட்டுள்ளதும் இவ்வகையானதே ஆகும்.[5] மேலும் அகிம்சையை போதிக்கும் உலக ஆன்மீக மரபுகள் முழுவதும் இதையே போதிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், உலக நோபல் அமைதி பரிசு பெற்றவர்களின் 8வது உச்சிமாநாட்டால் அங்கீகரிக்கப்பட்ட "வன்முறை இல்லா உலகத்திற்கான சாசனத்தில்"[6] "கொல்லாமை" சிந்தனை இடம்பெற்றது.[7]

தோற்றம்

[தொகு]

கொல்லாமை என்ற சிந்தனையின் தோற்றம் பண்டைய இந்திய மெய்யியலில் இருந்து அறியப்படுகிறது. இந்தக் கருத்தானது சமணம், இந்து, மற்றும் பௌத்த சமயங்களின் பிரதான கொள்கையான அகிம்சை அல்லது இன்னா செய்யாமை என்ற பரந்த கருத்தாக்கத்திலிருந்து எழுகிறது.[4] அனைத்து உயிரினங்களிலும் தெய்வீக ஆற்றலின் வித்தினைக் கொண்டுள்ளன என்ற சிந்தனையின் அடிப்படையில் கொல்லாமை ஒரு பல பரிமாணக் கருத்தாக விளங்குகிறது.[8] அதாவது, மற்றொரு உயிரினத்தை காயப்படுத்துவது என்பது தன்னைத்தானே காயப்படுத்தும் செயலாகும். எந்தவொரு வன்முறையும் கர்ம விளைவுகளை ஏற்படுத்தும் என்ற பண்டைய கருத்துடனும் இது தொடர்புடையதாகும். இந்து மதத்தின் பண்டைய அறிஞர்கள் இச்சிந்தனையின் முன்னோடியாக இருந்து காலப்போக்கில் அகிம்சைக் கொள்கையை செப்பனிட்டு முழுமையாக்கினர் என்றாலும், சமண மதத்தின் நெறிமுறைத் தத்துவத்தில் இக்கருத்து கூடுதலாகப் போற்றப்பட்டு அதீத முக்கியத்துவத்தை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[4][9]

வரலாற்றில், பல ஆரம்பகால இந்திய மற்றும் கிரேக்க மெய்யியலாளர்கள் அகிம்சை மற்றும் கொல்லாமையை ஆதரித்துப் பரப்புரை செய்து வந்துள்ளனர். பொ.ஊ.மு. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமண மதத்தின் இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதர், அகிம்சை மற்றும் கொல்லாமை கருத்துகளைப் பரப்புரை செய்த முன்னோடிகளில் ஒருவர்.[10] பின்னர் பொ.ஊ.மு. 6-ம் நூற்றாண்டில் இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தினார்.[11] அகிம்சையையும் கொல்லாமையையும் ஆதரித்த ஆரம்பகால கிரேக்க மெய்யியலாளர் பித்தாகரஸ் ஆவார்.[12][13] பொ.ஊ. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய மெய்யியலாளரும் புலவருமான வள்ளுவர் தனது படைப்பான திருக்குறளில் அகிம்சையையும் கொல்லாமையும் குறித்து பிரத்தியேக அதிகாரங்களை இயற்றி அவற்றைத் தனிமனித ஒழுக்கங்களாக போதித்துள்ளார்.[14][15][16]

வரையறைகள்

[தொகு]

கொல்லாமையின் மூலகாரணங்களைப் பகுப்பாய்வு செய்ததில், ​​கொல்லாமை என்பது அமைதி (போரும் போருக்கு உகந்த சூழல்களும் இல்லாமை), இன்னா செய்யாமை (உளவியல், உடல், மற்றும் கட்டமைப்பு ரீதியாக), மற்றும் அகிம்சை (சிந்தனை வாயிலாகவும், சொல் வாயிலாகவும், செயல் வாயிலாகவும் காயப்படுத்தாமை) ஆகிய கருத்துக்களை உள்ளடக்கியது என்பது தெரிய வருகிறது.[17] இவற்றில் எதையும் விலக்காமல் அலசுகையில் கொல்லாமையானது தனது இலக்குகளின் அளவிடக்கூடிய தன்மை மற்றும் அது நடந்தேறுதலில் உள்ள திறந்த தன்மை ஆகியவற்றைக் கொண்ட தனித்துவமான ஓர் அணுகுமுறையை வழங்க வல்லது என்பது புலப்படுகிறது. பொதுவாக "அகிம்சை," "அமைதி" போன்ற சொற்களின் பயன்பாடு பெரும்பாலும் செயலற்ற தன்மையைக் குறிப்பதாகக் கருதப்படுகையில், கொல்லுதல் (மற்றும் அதன் எதிர்ப்பதமான கொல்லாமை)[18] ஆகியவை அளவிடக்கூடியதாகவும் குறிப்பிட்ட காரணங்களுடன் தொடர்புடையதாகவும் உள்ளன. "பொது சுகாதாரம் குறித்த உலக அறிக்கையில்" (World Report on Public Health) உள்ளதைப் போலத் தடுப்பு, தலையீடு, மற்றும் பாதிப்பிற்குப் பின் கொல்லுதலை எதிர்த்து அதனை முற்றாக ஒழிக்க எழும் நிலைபாடு[19] உள்ளிட்ட பொது சுகாதாரத் துறையில் காணப்படும் கண்ணோட்டம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.[20]

வெளிப்படையான அல்லது மறைமுக அச்சுறுத்தல் மூலம் உயிரை அச்சுறுத்த வல்ல உளவியல் கடுமை, உடல் ரீதியான தாக்குதல், சித்திரவதை ஆகியவற்றைக் கொண்டு பார்க்கையில், கொல்லாமை என்பது மேற்கண்டவற்றின் உளவியல்-சமூக காரணங்களை நீக்குவதைக் குறிக்கிறது. ஆபத்தான நேரடி வலுவூட்டலின் விளைவாகவும், வளங்களைக் கொல்லும் நோக்கங்களுக்காகத் திருப்பிவிடுவதன் விளைவாகவும் இருக்கும் சமூக-பொருளாதார கட்டமைப்பு சூழல்களில் மனிதர்களைக் கொல்வது தொடர்பாகப் பார்க்கையில், கொல்லாமையானது ஆபத்தான இழப்புகளை அகற்றுவதைக் குறிக்கிறது. உயிர்க்கோளத்தின் உயிரோட்டத்திற்கு நேரும் அச்சுறுத்தல்கள் தொடர்பாகப் பார்க்கையில், கொல்லாமை என்பது உயிர்ப்பேணும் வளங்கள் மீதான நேரடித் தாக்குதல்கள் ஏதும் இல்லாததையும், கொடிய தன்மையோடு தொடர்புடைய மறைமுக சீரழிவை முற்றிலுமாக நீக்குவதையும் குறிக்கிறது. தற்செயலான விபத்துக் கொலையைப் பொறுத்த மட்டில், கொல்லாமை என்பது அவற்றை நீக்குவதற்கு உகந்த சமூக மற்றும் தொழில்நுட்ப சூழல்களை உருவாக்குவதைக் குறிக்கிறது.[17]

இந்திய சமயங்களில் கொல்லாமை

[தொகு]
திருவள்ளூரில் உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் காணப்படும் வள்ளுவர் சிலையின் கல்வெட்டில் அகிம்சை மற்றும் கொல்லாமை பற்றிய குறளின் போதனைகள் விவரிக்கப்பட்டு, அவற்றின் நீட்சியாக நனிசைவத்தின் வரையறையும் பெறிக்கப்பட்டுள்ளது.

கொல்லாமை என்னும் கருத்து இந்திய மதங்களான சமணம், இந்து மதம், மற்றும் பௌத்தத்தின் மையக் கொள்கையான அகிம்சை என்ற சிந்தனையிலிருந்து தோற்றியதாகும். இச்சிந்தனையானது அனைத்து வகையான உணர்திற உயிரினங்களையும் உள்ளடக்கியது. கொல்லாமை சமண சமயத்தவரின் தலையாய அறம். கொல்லாமையில் நான்கு படிநிலைக் கோட்பாடுகள் உள்ளன. எந்த உயிரையும் கொல்லாமை, புலால் உண்ணாமை, அகிம்சை, சீவகாருண்யம் என்பன அவை.

கொல்லாமை

[தொகு]
கொல்லாமை சமணர்களின் முக்கியக் கோட்பாடு. நடந்து செல்லும்போது கூடத் தன்னை அறியாமல் ஏதாவது சிறு உயிரினங்களைக் கொன்றுவிடுவோமோ என்று தான் நடந்து செல்லும் வழியைத் தானே மயில் இறகால் [21] கூட்டிக்கொண்டே நடந்து செல்வது சமணத் துறவிகளின் வழக்கம். கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி மயில்பீலியைக் கையில் எடுத்துச் சென்றார். [22] நோன்பு என்பது உயிர்க்கொலை செய்யாதிருக்கும் நற்பண்பு என்பது திருவள்ளுவர் வாக்கு. [23] [24]
உணவுக்காக வேட்டையாடிய காலம் ஒன்று. மீன் பிடித்தல் ஒருவகை வாழ்க்கை முறை. இப்படிப்பட்ட நிலைமைகளில் கொல்லாமை சிந்தனைக்கு உரியது.

புலால் மறுத்தல்

[தொகு]
கொல்லாமை துறவிகளின் நோன்பு. புலால் உணவை வேண்டாம் என மறுத்தல் [25] எல்லாரும் கடைப்பிடிக்கக் கூடிய நோன்பு என்பது திருவள்ளுவர் காட்டும் அறம். [26] இந்தக் கோட்பாடு எல்லா சமயத்திலும் ஒருசாரார் கடைப்பிடிக்கும் கோட்பாடு.

இன்னா செய்யாமை

[தொகு]
எந்த உயிரினத்துக்கும் துன்பம் செய்யாமல் இருக்கும் இன்னா செய்யாமைக் கோட்பாட்டை[27] அகிம்சை என்னும் பெயரால் கடைப்பிடித்துக்கொண்டு தற்காலத்தில் வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். தன்னைச் சுட்டுக்கொன்ற கோட்சேயைக் கூட மன்னித்துவிடும்படி கூறியது காந்தியடிகளின் அகிம்சைக் கோட்பாடு.[28]
சேவல்சண்டை முதலான விளையாட்டுகள் உயிரினங்களைத் துன்புறுத்துபவை. இவை தவிர்க்கப்பட வேண்டியவை.

அருளுடைமை

[தொகு]
அருளுடைமையைத் திருக்குறள் மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்தல் [29] எனக் குறிப்பிடுகிறது. சிபிச் சக்கரவர்த்தி புறாவையும் அதனைக் கொல்ல வந்த பருந்தையும் காப்பாற்றியது அருளுடைமை. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" எனப் பாடி வருந்தியது வள்ளலாரின் சீவகாருண்யக் கோட்பாடு.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. Paige, Glenn D. (2009). Nonkilling global political science (2nd rev. English ed.). Honolulu: Center for Global Nonkilling. ISBN 978-0-9822983-0-5. கணினி நூலகம் 704984465.
  2. Bhaneja, Balwant; Pim, Joám Evans (2022-01-01), "Nonkilling Political Science", in Kurtz, Lester R. (ed.), Encyclopedia of Violence, Peace, & Conflict (Third Edition) (in ஆங்கிலம்), Oxford: Academic Press, pp. 514–520, doi:10.1016/b978-0-12-820195-4.00099-6, ISBN 978-0-12-820312-5, retrieved 2022-07-22
  3. Kool, V. K.; Agrawal, Rita (2009). "The Psychology of Nonkilling". In Pim, Joám Evans (ed.). Toward a nonkilling paradigm. Honolulu: Center for Global Nonkilling. ISBN 978-0-9822983-1-2. கணினி நூலகம் 463312339.
  4. 4.0 4.1 4.2 Stephen H. Phillips & other authors (2008), in Encyclopedia of Violence, Peace, & Conflict (Second Edition), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-373985-8, Elsevier Science, Pages 1347–1356, 701–849, 1867
  5. Stewart McFarlane in Peter Harvey, ed., Buddhism. Continuum, 2001, page 187. Buddhist Scriptures in Pali language have explicit reference to nonviolence and nonkilling: monks should not only themselves abstain from killing but should also refrain from encouraging other people to kill themselves (Vinayapitaka III: .71-74)
  6. 8th World Summit of Nobel Peace Laureates, Charter for a World without Violence. Rome, December 15, 2007.[usurped!]
  7. "To address all forms of violence we encourage scientific research in the fields of human interaction and dialogue and we invite participation from the academic, scientific and religious communities to aid us in the transition to nonviolent, and nonkilling societies".
  8. John Arapura in K. R. Sundararajan and Bithika Mukerji Ed. (1997), Hindu spirituality: Postclassical and modern, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1937-5; see Chapter 20, pages 392–417
  9. Chapple, C. (1990). Nonviolence to animals, earth and self in Asian Traditions (see Chapter 1). State University of New York Press (1993)
  10. "Parshvanatha", britannica.com
  11. "Mahavira", britannica.com
  12. Kahn, Charles H. (2001). Pythagoras and the Pythagoreans: A Brief History. Indianapolis, Indiana and Cambridge, England: Hackett Publishing Company. p. 9. ISBN 978-0-87220-575-8.
  13. Cornelli, Gabriele; McKirahan, Richard (2013). In Search of Pythagoreanism: Pythagoreanism as an Historiographical Category. Berlin, Germany: Walter de Gruyter. p. 168. ISBN 978-3-11-030650-7.
  14. P.S. Sundaram (1987). Kural (Tiruvalluvar). Penguin Books. p. 13. ISBN 978-93-5118-015-9.
  15. Kamil Zvelebil (1973). The Smile of Murugan: On Tamil Literature of South India. Leiden: E. J. Brill. pp. 156–171. ISBN 90-04-03591-5. Retrieved 7 March 2018.
  16. Meenakshi Sundaram, T. P. (1957). "Vegetarianism in Tamil Literature". 15th World Vegetarian Congress 1957. International Vegetarian Union (IVU). Retrieved 17 April 2022. Ahimsa is the ruling principle of Indian life from the very earliest times. ... This positive spiritual attitude is easily explained to the common man in a negative way as "ahimsa" and hence this way of denoting it. Tiruvalluvar speaks of this as "kollaamai" or "non-killing."
  17. 17.0 17.1 "Nonkilling Global Society", in Peace Building, edited by Ada Aharoni, in Encyclopedia of Life Support Systems (EOLSS), Developed under the auspices of the UNESCO, 2005, Eolss Publishers, Oxford.
  18. Drago, Antonino (2009). "Nonkilling science". Toward a nonkilling paradigm. Pim, Joám Evans. (1st ed.). Honolulu, Hawaii: Center for Global Nonkilling. p. 388. ISBN 978-0-9822983-1-2. கணினி நூலகம் 463312339.
  19. DeGue, Sarah; Mercy, James A. (2009). "Nonkilling public health". Toward a nonkilling paradigm. Pim, Joám Evans. (1st ed.). Honolulu, Hawaii: Center for Global Nonkilling. p. 388. ISBN 978-0-9822983-1-2. கணினி நூலகம் 463312339.
  20. Krug, Etienne G. (2002). World report on violence and health. Geneva: World Health Organization. ISBN 0-585-46807-9. கணினி நூலகம் 53032850.
  21. தானே உதிர்ந்த மயில் இறகால்
  22. தோம் அறு கடிஞையும், சுவல் மேல் அறுவையும்,
    கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு;
    ‘மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக’ என
    பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர்- (சிலப்பதிகாரம் 10 அடி 98 முதல்)
  23. கொல்லா நலத்தது நோனமை (திருக்குறள் 984)
  24. இந்தக் கூற்றால் திருவள்ளுவரைச் சமணர் என்பர்
  25. சைவ உணவு
  26. திருக்குறள் அதிகாரம் 26 புலால் மறுத்தல்
  27. இன்னா செய்யாமை (திருக்குறள் அதிகாரம் 32
  28. தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைக் கூட அறியாமல் செய்கிறார்களே என்று அவர்களுக்காக வருந்திய உள்ளம் இயேசு பெருமான் உள்ளம்
  29. திருக்குறள் 244

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லாமை&oldid=4260840" இலிருந்து மீள்விக்கப்பட்டது