கைராபாத், சீதாபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைராபாத் (ஆங்கிலம்: Khairabad ) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். [1] இது மாநில தலைநகர் லக்னோவிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 24 இல் சீதாபூரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. நகராட்சி வாரியம் நகரத்தின் விவகாரங்களை நடத்துகிறது.

வரலாறு[தொகு]

கைராபாத் என்பது கைராபாத் அவத் என்று அழைக்கப்படும் ஒரு வரலாற்று நகரம் ஆகும். இது முகலாய காலத்தில் கற்றலுக்கு புகழ்பெற்ற இடமாக இருந்தது. பிரபல சுதந்திர போராட்ட வீரர் மௌலான பசல்-இ-கக் கைராபாதி இந்த ஊரைச் சேர்ந்தவராவார். பிரபல எழுத்தாளர் மாயல் கைராபாதியும் இந்த ஊரைச்சேர்ந்தவராவார். இந்த நகரம் பல உருது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் தங்குமிடமாக இருந்து வருகிறது. ஜாமியா பாத்திமா செக்ரா என்று அழைக்கப்படும் பெண்கள் கல்விக்கான பிரபலமான மதரஸா இங்கு அமைந்துள்ளது

இந்த நகரம் 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பைசல் பாசி என்பவரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இது ஒரு கயாஸ்த் குடும்பத்தினரால் கைப்பற்றப்பட்டது. பிற்காலத்தில், பாபர் மற்றும் அக்பரின் ஆட்சிக் காலத்தில் அதிக எண்ணிக்கையில் வந்த முஸ்லிம்களுக்கு பல வாடகை இல்லாத நிலங்கள் வழங்கப்பட்டன, ஆனால் இந்த மானியங்கள் அனைத்தும் 1800 களின் முற்பகுதியில் அயோத்தி நவாபினால் திரும்பப் பெறப்பட்டன. மேற்கூறிய கைரா பாசியின் காலத்திற்கு முன்பு, இந்த இடம் மாசிசைத் (மாசி சித்ரா) என்று அழைக்கப்பட்டது. மேலும் இது விக்ரமாத்தியனின் ஆட்சிக்காலம் வரை யாத்திரைக்கான இடமாக இருந்தது. இந்தப் பெயரில் ஒரு குளம் இன்னும் இங்குள்ளது. அவற்றின் நீர் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது மேலும் இது "மஸ்வாசி தலாவ்" என்றும் அழைக்கப்ப்படுகிறது. [2]

இது ஒரு பெரிய வர்த்தக மையமாக இருந்துள்ளது. இங்கு காஷ்மீர் சால்வைகள், பர்மிங்காமின் நகைகள் மற்றும் அசாமின் யானைகள் போன்றவை வர்த்தகம் செய்யப்பட்டு வந்துள்ளன. கிழக்கிந்திய கம்பெனி கைராபாத் மற்றும் தரியாபாக் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்தது. பிஸ்வான் என்ற இடம் மண் மட்பாண்டங்களுக்கு பிரபலமானது. 1886 ஆம் ஆண்டில், பிஸ்வானைச் சேர்ந்த கலைஞர்கள் லண்டனில் நடைபெற்ற பேரரசு கண்காட்சியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர். பொறிக்கப்பட்ட கதவுகளின் வடிவத்திற்கும் இந்த மாவட்டம் பிரபலமானது.

1857 எழுச்சியின் போது, மௌலானா பாஸல் பாக் நாட்டிலிருந்து பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்காக தீவிரமாக பங்கேற்றார். துரதிர்ஷ்டவசமாக, அவர் கைது செய்யப்பட்டு அந்தமான் தீவிலுள்ள காலா பானி சிறைக்கு அனுப்பப்பட்டார். அதே காலகட்டத்தில், பக்சுல்லா கான் என்பவர் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். அவர் முதலில் இராம்பூரில் குடியேறினார். பின்னர் கைராபாத்தை தனது இல்லமாக மாற்றினார். அவரது சந்ததியினரான பதான்கள் வசிக்கும் இடத்தில் பக்சுல்லா வீடு என்று பெயரிடப்பட்டது. லஹார்பூர்

தொழில்துறை பார்வையில் தற்போது மாவட்டம் மிகவும் முக்கியமானது அல்ல, இருப்பினும் மாவட்டத்தில் ஐந்து சர்க்கரை ஆலைகள் மற்றும் சில மாவு ஆலைகள், அரிசி ஆலைகள் உள்ளன. இந்த மாவட்டம் முக்கியமாக பருத்தி மற்றும் கம்பளி பாய்களுக்கு (துர்ரி) பெயர் பெற்றது. லஹார்பூர் மற்றும் கைராபாத் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பிரபலமானது. உலக புகழ்பெற்ற சீதாபூர் கண் மருத்துவமனை கைராபாத்தில் ஒரு சிறிய மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. அதன் நிறுவனர் மருத்துவர் மகேஷ் மெக்ராவுக்கு கண் பராமரிப்புத் துறையில் தன்னலமற்ற சேவை செய்ததற்காக இந்தியக் குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க பத்மசிறீ வழங்கப்பட்டது. அருட்தந்தை ஜெரார்ட் ஒரு இத்தாலிய மிஷனரி பி.சி.எம் மருத்துவமனையை நிறுவினார். இது உட்புற மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது. இந்த மருத்துவமனை தொழில் ரீதியாக இயக்கப்படுகிறது. நகரத்திலிருந்து மட்டுமல்லாமல் பிற நகரங்கள் மற்றும் சீதாபூர் நகரங்களிலிருந்தும் மக்களுக்கு சேவை செய்கிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "KHAIRABAD Block, Sitapur Uttar Pradesh India News समाचार". Brandbharat.com. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
  2. Benett, William Charles (1878). A Gazetteer of the Province of Oudh. Allahabad, India: Oudh Government Press. பக். 127–128. https://archive.org/details/gazetteerprovin01oudhgoog. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைராபாத்,_சீதாபூர்&oldid=3782991" இலிருந்து மீள்விக்கப்பட்டது